
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சமீபத்தில் ஒரு முக்கியமான நிதி அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜூன் மாதம் நாட்டின் தேசிய சராசரி பணவீக்கம் 2.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டில் பணவீக்கம் அதிகமாகி வருவதால் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பொருட்களின் விலை அதிகமாகிக்கொண்டே வருகிறது. தொடர்ந்து விலைவாசி அதிகரிப்பதால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து மாநிலங்களும் போராடி வருகின்றன. உயர்ந்து வரும் பணவீக்கத்தின் காரணமாக மத்திய அரசும், மாநில அரசுகளும் தம் ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளத்துடன் அளித்து வரும் அகவிலைப்படியை ஆறு மாதத்திற்கு ஒரு முறை உயர்த்தி வருகின்றன.
இந்நிலையில், நாட்டில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் பணவீக்கம் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. அங்குக் கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு ஜூன் மாதம் பணவீக்கம் -0.93 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் நாட்டிலேயே எதிர்மறை பணவீக்கத்தை பதிவு செய்த ஒரே பெரிய மாநிலமாக தெலங்கானா இருக்கிறது. இதனால் பல்வேறு பொருட்களின் விலைவாசியும் அங்கு கணிசமாக குறையத் தொடங்கியுள்ளது. இதை ஆங்கிலத்தில் 'deflation' என்று குறிப்பிடுவார்கள். இதன் எதிர்ச்சொல்லே inflation ஆகும். அதுவே பணவீக்கம் எனப்படுகிறது.
தெலங்கானா மாநிலத்தில் கிராமப்புறப் பணவீக்கம் -1.54 சதவீதமாக இருக்கிறது. இது தேசியக் கிராமப்புறச் சராசரியான 1.72ஐ விடக் குறைவு ஆகும். அதேபோல தெலுங்கானாவில் நகரப்புறப் பணவீக்கம் -0.45 சதவீதமாக உள்ளது. இது தேசிய நகரப்புற விகிதமான 2.56 சதவீதத்தை விடக் குறைவு ஆகும்.
அதன் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் ஜூன் மாதம் பணவீக்கம் ஜீரோவாக இருந்தது. ஆந்திராவின் கிராமப்புறப் பணவீக்கம் -0.55 சதவீதமாகவும், நகரப்புறப் பணவீக்கம் 1.06 சதவீதமாகவும் உள்ளது.
மற்ற மாநிலங்களில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் நிலைமை அதற்கு நேர் எதிராகவே இருக்கிறது.
தெலுங்கானாவில் இதற்கு முந்தைய ஆட்சியில் (2020 முதல் 2023 வரை) பணவீக்கம் இரட்டை இலக்கில் இருந்தது. அப்போது பணவீக்கம் பெரும்பாலும் 10 சதவீதத்தைத் தாண்டியே இருந்தது. ஆனால், காங்கிரஸ் அரசு டிசம்பர் 2023ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பணவீக்கம் படிப்படியாகக் குறைந்தது. பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம், எல்பிஜி சிலிண்டர்கள் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாகவே இது சாத்தியமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
விலைவாசி குறைந்தால் நல்லது தானே என்று நாம் நினைக்கலாம். ஆனால், உண்மையில் அப்படி இல்லை என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
அவர்கள் பொருளாதாரம் தொடர்ச்சியாக வளர்ச்சி அடைய வேண்டுமானால், சிறிதளவாவது பணவீக்கம் இருக்க வேண்டும் என்கிறார்கள். அதாவது பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது நல்லது. ஆனால், deflation என்பது பொருளாதாரம் சுருங்குவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.
நுகர்வோர் தேவை குறைவது, முதலீடுகளில் சரிவு, ஒட்டுமொத்தப் பொருளாதாரத் தேக்கம் ஆகியவை இதற்கானக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. இது பல்வேறு வகையில் பொருளாதாரத்தை எதிர்மறையாக பாதிக்கலாம்.
மக்களின் பொருட்களை வாங்கும் சக்தி குறைவாக இருப்பதால், அது பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்கும். விலைவாசி குறைவதால் ஜிஎஸ்டி வசூல் குறையும். இது மைய அரசு மாநில நலத்திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியின் அளவினைப் பாதிக்கும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இதன் பொருளாதார விளைவுகள் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.