
அவசரக் கால நிதியானது நமது அவசரக் காலங்களில் நமக்கு கைக்கொடுத்து, கடன் வாங்காமல் இருக்க உதவும். அவ்வாறு அவசரக் காலத்தில் பணம் இல்லாமல் போனால், ஏற்கனவே செய்த முதலீட்டில் கை வைக்கும் நிலை நேரிடும் அல்லது கடன் வாங்க நேரிடும். வளர்ந்து வரும் முதலீட்டில் கை வைப்பது என்பது தங்க முட்டையிடும் வாத்தை வெட்டுவதற்குச் சமமானது. 'இத்தகைய சிறிய அவசரக் கால நிதி என்ன பெரிதாக எனக்கு உதவி விடும்' என்று எண்ணாமல், அவசரக் கால நிதியை நாம் வைத்திருப்பது என்பது அவசரக் காலத்தை நம்மால் எளிதாக கடக்க உதவும்.
**************
இதனைக் குறித்த ஒரு ஈசாப் கதையைப் பார்ப்போம்:
ஒரு காட்டில் ஒரு சிங்கம் ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்தது. அப்பொழுது அதன் மேல் ஒரு சுண்டெலி ஓடியதால் அது விழித்துக் கொண்டது. கோபம் கொண்ட சிங்கம், உடனே சுண்டெலியைப் பிடித்து அதனைத் தின்பதற்காகச் சென்றது.
"சிங்கராஜாவே! என்னை விட்டு விடுங்கள்! நீங்கள் செய்த இந்த உதவிக்கு நான் நிச்சயமாக கைம்மாறு செய்வேன்" என்றது சுண்டெலி.
சிங்கம் நகைத்து விட்டு சுண்டெலியை விட்டு விட்டது.
சற்று நேரத்தில், சில வேட்டைக்காரர்கள் வந்தனர். அவர்கள் சிங்கத்தை பிடித்து கயிறுகளால் கட்டி வைத்தனர். சிங்கம் பலமாக கர்ஜித்தது. சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்ட சுண்டெலியானது வேகமாக சிங்கத்தை நோக்கி ஓடி வந்தது. சிங்கத்தை பிணைத்திருந்த கயிறுகளை தனது கூரானப் பற்களினால் கடித்து சிங்கத்தினை விடுவித்தது.
"சிங்கராஜாவே! எவ்வாறு இந்தச் சிறிய சுண்டெலி தங்களுக்கு உதவ முடியும் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால், சுண்டெலியாலும் சிங்கத்திற்கு உதவ முடியும் என்பதை நீங்கள் இப்பொழுது உணர்ந்திருப்பீர்கள்" என்றது சுண்டெலி.
***************
இந்தக் கதையில் சுண்டெலி என்பது நமது அவசரக் கால நிதியைப் போன்றது. சிங்கம் என்பது அது நமது நிதி நிலைமையைப் போன்றது. நமது நிதி நிலைமைக்கு, சிங்கம் கயிறுகளால் கட்டப்பட்ட மாதிரி, நெருக்கடி ஏற்பட்டால் அப்பொழுது சுண்டெலி உதவியது மாதிரி நமது அவசரக்கால நிதி உதவி செய்து நமது நிதி நெருக்கடியில் இருந்து நம்மைக் காப்பாற்றும். அத்தகைய அவசர கால நிதி இல்லை என்றால் நிதி நெருக்கடி இன்னும் பெரிதாக வாய்ப்பு உண்டு. கடன் வாங்க நேரலாம். பெரும் கடன் சுமையில் மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு.
அவசரக்கால நிதியானது குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாயாவது வைத்திருக்க வேண்டும். மூன்று முதல் ஆறு மாதங்களுக்கான செலவை அவசர கால நிதியாக வைத்திருப்பது என்பது நமது அவசர கால நிதி நெருக்கடிகளை எளிதில் கையாள உதவும். ஒரு வருடத்திற்கான செலவை வைத்திருந்தால் இன்னும் நலம். வீட்டில் திடீரென ஒருவர் உடல் நலம் குறைவது, திடீரென மராமத்துச் செலவுகள் ஏற்படுவது, வீட்டின் வாகனத்தில் பழுதுகள் ஏற்படுவது, வீட்டின் சம்பாதிக்கும் நபர் வேலை இழப்பது என பல்வேறு நிதி நெருக்கடிகள் திடீரென ஏற்படலாம். அத்தகையச் சமயங்களில் நாம் சேமித்து வைத்த அவசரக் கால நிதியானது நம்மை இத்தகைய நிதி நெருக்கடிகளை எளிதாக கையாள உதவும். இந்த அவசரக்கால நிதியை நாம் எளிதில் எடுக்குமாறு வங்கியின் சேமிப்புக் கணக்கில் வைத்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு நிதிக்கும் ஒரு குறிக்கோள் உண்டு. அவசரகால நிதியின் குறிக்கோள் அவசரக் காலத்தில் உதவுவது மட்டுமே. அதன் குறிக்கோள் பணத்தைப் பெருக்குவது அல்ல. அவசரக் காலத்தில் அருகிலுள்ள தானியங்கி பணப் பொறியில் எளிதாக எடுக்குமாறு வங்கி சேமிப்புக் கணக்கில் அவசரக் கால நிதி இருக்க வேண்டும். ஒருவேளை அவசரக் கால நிதியை எடுத்து செலவு செய்து விட்டால், மீண்டும் அவசரக்கால நிதியை முதல் வேலையாக பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். ஒருவர் வேலைக்கு வந்தவுடன் செய்ய வேண்டிய முதல் வேலை, அவசரக்கால நிதியை உருவாக்குவது. அதன் பிறகு மற்ற முதலீடுகள் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
அவசரக் காலங்களை அவசரக்கால நிதியைக் கொண்டு எளிதில் கையாளுவோம். அவசரக்கால நிதியை எப்போதும் வைத்திருப்போம்.