
FIRE - Financial Independence, Retire Early என்பது ‘நிதி சுதந்திரம், சீக்கிரமே வேலையிலிருந்து ஓய்வு பெறுதல் என்பதைக் குறிக்கிறது. தற்போது இளைஞர்களிடையே இந்த வாக்கியம் மிகவும் பிரபலமடைந்து வருகிறது பொருளாதார சுதந்திரத்தை அடைய தீவிரமாக பணத்தை சேமித்து முதலீடு செய்யும் இயக்கமாகவே இது மாறியுள்ளது. ஓய்வூதிய வயதான 60 அல்லது 65 வயதை விட, போதுமான அளவில் பணத்தை சேமித்து விட்டு வேலையிலிருந்து முன்னதாகவே ஓய்வு பெற இது வழி வகுக்கிறது.
கோஸ்ட் ஃபயர் (Coast Fire) என்பது என்ன?
இது ஒரு பிரபலமான பொருளாதார உத்தியாகும். பணிபுரியும் அல்லது சொந்தத் தொழில் செய்யும் நபர் தனது செலவுகளைக் குறைத்துக் கொண்டு பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகளுக்கு பணத்தை தீவிரமாக முதலீடு செய்ய வேண்டும். அவர்களது 30 – 35 வயதுக்குள்ளாகவே போதுமான அளவு பணம் சேர்ந்து விடும். சேமித்த பணம் கூட்டு வட்டி மூலம் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். ஓய்வூதிய வயதான 60 - 65 வயதுக்குள் அந்தப் பணம் நன்றாக வளர்ந்து அவர்களின் ஓய்வூதியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
கோஸ்ட் ஃபயர் திட்டத்தில் யார் சேரலாம்? இதன் நடைமுறை என்ன?:
18 லிருந்து 35 வயதுக்குள் இருப்பவர்கள் கோஸ்ட் ஃபயர் திட்டத்தில் சேர லாம். ஓய்வூதியத்திற்கு எவ்வளவு தொகை தேவை என்பதை தெளிவாக வரையறுக்க வேண்டும். 65 வயதுக்குள் இரண்டு கோடி ரூபாய் தேவை என்று நிர்ணயித்துக் கொள்ளலாம். அதற்கு எவ்வளவு பணம் முதலீடு செய்வது செய்ய வேண்டும் என்பதை கணக்கிட்டு, மாதாமாதம் எஸ்.ஐ.பிகள் மூலம் 10 அல்லது 20 வருடங்களுக்கு முதலீடு செய்யலாம்.
இவ்வாறு முதலீடு செய்யப்படும் பணம் கூட்டு வட்டியின் மூலம் வருடாந்திர வளர்ச்சியில் பெருகிவிடும். ஒரு நாளைக்கு 150 ரூபாய் என்ற கணக்கில் முதலீடு செய்தால், அது 20 ஆண்டுகளில் ஆச்சரியப்படத்தக்க வகையில் பல்கிப் பெருகிவிடும்.
பயன்கள்:
கோஸ்ட் ஃபயர் இலக்கை அடைந்த பிறகு, புதிதாக தனது ஓய்வு காலத்திற்கு பணம் சேர்ப்பதை நிறுத்திக் கொள்ளலாம். தற்போதைய வாழ்க்கை செலவுகளை ஈடுகட்ட போதுமான அளவு பணம் சம்பாதித்தால் போதும். ஏனென்றால் ஓய்வூதியதற்கான சேமிப்பு ஏற்கனவே தயாராக உள்ளது. இதனால் அதிகமாக நிதி திரட்டுவதற்கும் 60 வயது வரைக்கும் வேலை செய்வதற்கும் அவசியமில்லை. மனதிற்குப் பிடித்த எளிதான வேலை மற்றும் வாழ்க்கை முறையை அனுபவிக்கலாம். குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடலாம்.
திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எப்படி?
தேவையான செலவுகளை மட்டும் செய்துவிட்டு தீவிரமாக சேமிக்க வேண்டும். அடிக்கடி வெளியே சாப்பிடுவது, உடைகள் வாங்குவது, சினிமா தியேட்டர் போவது போன்ற ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டு வருமானத்தில் கணிசமான அல்லது நிலையான பகுதியை முதலீட்டில் போட வேண்டும்.
புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும். அதற்கு ஆகும் செலவுகளை சேமிப்பில் போடலாம். கிரெடிட் கார்டுகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும். காப்பீடு, ஷாப்பிங் மற்றும் உணவு ஆர்டர் செய்வது போன்றவற்றுக்கு டெபிட் கார்டுகளை விட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம். அதே சமயம் கடன் வலையில் சிக்குவதை தவிர்க்க வேண்டும்.
சிறிய தொகை கூட சக்தி வாய்ந்த முறையில் கூட்டு வட்டியில் அதிகமாக பலன் கொடுக்கும். முதலீட்டு விகிதங்களை அதிகரிக்க 20 இலிருந்து 30 வயதிற்குள் கணவன் அல்லது மனைவி ஒருவரின் சம்பளத்தை அப்படியே முதலீடுகளில் போடலாம். தானியங்கி முறையில் பணம் அக்கவுண்ட்டில் இருந்து முதலீட்டில் சேரவேண்டும். அதிக கூட்டு வட்டி தரும் சரியான மியூச்சுவல் ஃபண்ட்டைத் தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்யலாம்.