
இந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி தான். முதன் முதலில் இந்தியில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இதுவரை 17 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 18-வது சீசனில் அடி எடுத்து வைத்து 88-வது நாளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியில் நடிகர் சல்மான் கான் ஹோஸ்ட் செய்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிகா பங்கேற்று அதிரடி காட்டி வருகிறார். இந்தி பிக்பாஸில் கலந்து கொண்ட முதல் தமிழ் நடிகை ஸ்ருதிகா என்ற பெருமை இதன்மூலம் இவருக்கு கிடைத்துள்ளது. அவர் தனது கவர்ச்சியான ஆளுமை, குறும்புத்தனமான நடத்தை, வெகுளித்தனமான மற்றும் பந்தா இல்லாத இயல்பான பேச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இதனிடையே, சக போட்டியாளர்களை மட்டுமில்லாமல் பிக்பாஸையே தமிழில் பேசவைத்து அசரடித்தார்.
ஆரம்பத்தில், இவரின் சிரிப்பு, குறும்புத்தனமான நடத்தையை பார்த்து இந்தி பார்வையாளர்கள் ஓவர் ஆக்டிங், இந்த பெண் ஏன் இப்படி நடிக்கிறார்? என்று கருத்து தெரிவித்தனர். சக வீட்டாரும் கூட அவளை கிண்டல் செய்வதில் மும்முரமாக இருந்தனர். ஆனால் தற்போது அவரின் குறும்புத்தனத்தை புரிந்து கொண்டு அவருடைய உண்மையான இயல்பைப் பாராட்டி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் இவர் அவ்வப்போது அடிக்கும் கமெண்ட்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இவருக்காகவே இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நடந்த ஃபிரீஸ் டாஸ்க்கில் பங்கேற்க வந்த தன்னுடைய கணவர் அர்ஜுனை பார்த்ததும் ஓடிவந்து குதித்து அவர்மீது தாவி ஏறிக் கொண்ட ஸ்ருதிகா, அவரை கட்டிப்பிடித்து முத்தங்களை கொடுத்தார். சில நிமிடங்கள் இருவரும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதையும் பார்க்க முடிந்தது. நிகழ்ச்சியில் ஸ்ருதிகாவின் மகன் வந்த தருணமும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.
ஃபிரீஸ் டாஸ்க்கில் வந்த ஸ்ருதிகாவின் கணவரிடம் சக போட்டியாளர்கள் எப்படி இவளை சமாளிக்கிறீர்கள், உங்களுக்கு ''Hats Off '' என்று கூறி கலாய்த்தனர். அதற்கு ஸ்ருதிகாவின் கணவர் ''அவள் எனக்கு கிடைத்த ஆசீர்வாதம், என் உலகம்'' என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
மேலும் ஸ்ருத்திகாவின் கணவர் பிக்பாஸிடம் எப்படி இருக்கீங்க என்று தமிழில் கேட்டதற்கு, பிக்பாஸ், நான் நல்ல இருக்கேன் என்று தமிழ் பதில் சொன்னது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.
சக போட்டியாளர் கரண் வீர் மெஹ்ரா ஸ்ருதிகாவின் மகனுடன் இனிமையாக அரட்டையடித்தார். அவனை 'மினி அர்ஜுன்' என்று அழைத்து அவனது தோழிகளைப் பற்றிக் கேட்டார்.
தேங்காய் சீனிவாசனின் பேத்தியான நடிகை ஸ்ருதிகா. சினிமாவில் ஸ்ரீ படத்தின் மூலம் என்ட்ரியான இவருக்கு எந்த படமும் சரியாக ஓடவில்லை. இதனால் நடிப்பில் இருந்து விலகி, தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்திய ஸ்ருதிகா, ஒரு கட்டத்தில் அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இந்நிலையில் நீண்ட ஆண்டுகள் கழித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் என்ட்ரியான இவர், தன்னுடைய ஸ்மைல், டிரெஸ்ஸிங் சென்ஸ் போன்றவற்றால் அனைவரையும் கவர்ந்து டைட்டிலையும் தட்டித் தூக்கினார்.
தொடர்ந்து அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு தன்னுடைய சேட்டைகளால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த ஸ்ருதிகா, இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து தமிழ், இந்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.