

ரசிகர்களால் "மெகா பவர் ஸ்டார்" என்று அன்பாக அழைக்கப்படும் அதிரடி ஆக்சன் நடிகர் ராம் சரண் நடித்த படம்தான் 'பெத்தி'( Peddi) . பான் இந்தியா திரைப்படமான இது உலக பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெளியாகி வெறும் 13 நாட்களிலேயே உலகளவில் ரூ.400 கோடியை கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதன் மூலம் 2026-ஆம் ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய தென்னிந்திய திரைப்படங்களில் முதலிடத்தை இப்படம் பிடித்துள்ளது.
மேலும் ராம் சரண் சினிமா பயணத்தில் இந்த படத்தின் வெற்றி மிகப்பெரிய சோலோ ஹிட்டாகவும் பதிவாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் படம் சுமார் ரூ.287 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல முன்னணி படங்களின் வசூல் சாதனைகளையும் 'பெத்தி' பின்னுக்கு தள்ளியிருப்பது தற்போது சினிமா ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இத்திரைப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்க, இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் ராம் சரணுடன் இணைந்து ஜான்வி கபூர், ஜெகபதி பாபு, மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'பெத்தி' ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகேயுள்ள மலைவாழ் மக்களின் அடையாளத்திற்கான போராட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆக்ஷன் திரைப்படமாகும். விஜயநகரம் பகுதியில் அரசால் அதிகாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்படாத அதாவது அடையாளமற்ற கிராமத்தில் வாழும் கதாநாயகன் 'பெத்தி' (ராம் சரண்), தனது மக்களின் உரிமைக்காக கிரிக்கெட் மற்றும் குஸ்தி போன்ற விளையாட்டுகளை கருவியாகப் பயன்படுத்தி எப்படி வெற்றி பெறுகிறார் என்பதே படத்தின் மூலக் கதையாகும்.
விஜயநகரம் அருகே மலைகளுக்குக் கீழே 'மலை கிராமம்' என்று மட்டுமே அழைக்கப்படும் ஒரு சிறு குக்கிராமம் உள்ளது. அடிப்படை வசதிகளோ, அரசாங்க ஆவணங்களோ, வாக்காளர் அடையாள அட்டையோ இல்லாமல், அங்குள்ள கரும்பு வயல்களில் கூலி வேலை செய்யும் மக்களின் அவல நிலையைச் சுற்றி கதை தொடங்குகிறது. குறிப்பாக கதாநாயகன் பெத்தியாக நடிக்கும் ராம்சரண் விஜய நகரத்தில் சர்க்கரை பாகு காய்ச்சும் ஆலையில் வேலை பார்க்கும் இளைஞர்.
அந்த ஊருக்குச் செல்ல ரயில் கூட நிற்காத நிலையில், ரயில் நிறுத்தத்திற்காக அப்பாசூரி என்பவர் (ஜெகபதி பாபு) 30 ஆண்டுகளாகப் போராடி வருகிறார்.
அந்த கிராமத்தைச் சேர்ந்த கதாநாயகனான 'பெத்தி' (ராம் சரண்) சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் குஸ்தி உள்ளிட்ட விளையாட்டுகளில் திறமையுள்ள பன்முக விளையாட்டு வீரராக இருக்கிறார். தனக்குத் தெரிந்த விளையாட்டின் மூலம் நவீன இந்தியாவில் தங்கள் சமூகத்திற்குரிய அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் பெற்றுத் தர 'பெத்தி' முடிவு செய்கிறார்.
தனது அசாத்திய விளையாட்டுத் திறனைப் பயன்படுத்தி, தங்களை அடிமைகளாக நடத்தும் சமூகத்தினரையும் அதிகாரிகளையும் எதிர்த்துப் போராடுகிறார்.
ஆக்ஷனுடன் காதல், குடும்ப உணர்வுகள், விளையாட்டு, த்ரில் என பல அம்சங்கள் உருவாகியுள்ள 'பெத்தி'யில் சமூகம் விழிப்புணர்வு பெறும் வகையில் ஆவணங்களில் இருந்து மறைக்கப்பட்ட மலை கிராம மக்கள் போக்குவரத்துக்காக படும் கஷ்டங்களை காட்சிப்படுத்தி பார்ப்பவர்கள் மனதில் பல கேள்விகளை எழுப்புகிறார் இயக்குனர்.
தொடர்ந்து ஊருக்காக நன்றாக கிரிக்கெட் விளையாடி வரும் பெத்திக்கும் ஒரு அவமானம் நேர்கிறது. அதனுடன் தனது கிராமத்தில் ரயிலை நிறுத்துவதற்கான முயற்சியில் எதிர்பாராத சம்பவமும் நிகழ்கிறது. இதையடுத்து தீவிரமாக யோசித்து முடிவு எடுக்கும் கதாநாயகன் மற்றும் அடுத்தடுத்து நடக்கும் போராட்டங்களே இந்த கதைக்கான களமாக அமைகிறது.படத்தின் கோர்வையான காட்சி அமைப்புகளும் கதையும் சுவாரசியமாக சொல்லப்படுகிறது .
குஸ்தி வாத்தியார் (சிவராஜ்குமார்) மற்றும் பிறரின் ஆதரவோடு தடைகளைத் தாண்டி பெத்தி போட்டிகளில் வெல்கிறார். இறுதியில் தன் மக்களுக்குரிய அடையாளத்தையும், ஊருக்கான அங்கீகாரத்தையும் அவர் பெற்றுக்கொடுத்தாரா இல்லையா என்பதே மீதிக்கதை.
இந்த பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது. படத்தின் மிகப்பெரிய பலமாக ராம் சரணின் நடிப்பு உள்ளது எனலாம். ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடித்து பெரும் ஹிட் தந்த டிரிபிள் ஆர் (RRR) படத்திற்குப் பிறகு ராம் சரணுக்கு பெரிதாக சொல்லக்கூடிய அளவிற்கு வெற்றிப் படம் எதுவும் அமையவில்லை என்பதும் இந்த படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக மிகக் கடுமையாக ராம் சரண் உழைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அது வேண்டும் போகவில்லை என்பதை படத்தின் வசூல் காட்டுகிறது.
கதாபாத்திரத்திற்காக அவர் மேற்கொண்ட உடல்மாற்றமும், உணர்வுபூர்வமான நடிப்பும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதும் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியது. இருவரும் இணைந்து நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் பெரும்பலம் ராம்சரண் என்றால் மீதி படம் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்தான். ஆரம்பம் முதலில் ஸ்கோர் செய்து இறுதிவரை விடாமல் அடித்த ஆடி இருப்பதாகவே தோன்றுகிறது . பாடல்களிலும் சரி பின்னணி இசையிலும் இசையை சரியாக பயன்படுத்தி படத்தை பார்ப்பவர்களுக்கு உணவுப் பூர்வமான அனுபவத்தை தந்துள்ளார் ரஹ்மான்.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஓடிடி வெளியீட்டு தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 9 முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்த இந்தப் படம், ஓடிடி வெளியீட்டிலும் அதே வரவேற்பைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆனால் நீங்கள் வீடு தேடி வரும் சூப்பர் எண்டர்டெயினர் பெத்தியை வரவேற்று ரசிக்காமல் விட்டு விடாதீர்கள்.