விமர்சனம்: அக்யூஸ்ட் - இது இன்னொரு மைனா போல் வந்துள்ளதா?
ரேட்டிங்(3 / 5)
"பாத்ரூம்ல வழுக்கி விழுகறது, என் கவுன்டர் இப்படி ஒவ்வொன்ணுத்துக்கும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் இருக்காங்க, இதெல்லாம் தெரியாமலா இங்க நான் போலீஸ் கமிஷ்னரா இருக்கேன்" என்று அக்யூஸ்ட் படத்தில் போலீஸ் கமிஷனர் சொல்லும் போது சாத்தான் குளத்திலும், சிவகங்கை மாவட்டம் மடப்புரத்திலும் காவல் துறையினர் செய்த படுகொலைகள் நம் நினைவுக்கு வருகிறது.
முன்னணி இயக்குநர் AL விஜய்யின் சகோதரரும், தயாரிப்பாளர் AL அழகப்பன் அவர்களின் மகனுமான AL உதயா ஹீரோவாக நடித்து வந்திருக்கும் படம் அக்யூஸ்ட். பிரபல கன்னட இயக்குனர் பிரபு ஸ்ரீனிவாஸ் இப்படத்தை இயக்கி உள்ளார்.
பிரபல மலையாள நடிகர் அஜ்மல், யோகிபாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். புழல் சிறையிலிருந்து கைதி கனகுவை (உதயா) போலீஸ் வேனில் மூன்று போலீஸ்காரர்களுடன் சேலம் அழைத்து செல்கிறது காவல் துறை. இந்த மூன்று போலீஸ்காரர்களில் ஒருவர் கான்ஸ்டபிள் வேந்தன் (அஜ்மல்) கைதி கனகுவை கொலை செய்யும் நோக்கோடு போலீஸ் வாகனத்தை தாக்குகிறது ஒரு கும்பல்.
இந்த தாக்குதலில் காயம் அடையும் கனகுவை பத்திரமாக மீட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் தங்க வைக்கிறார் வேந்தன். அந்த ஊரில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகுவை என்கவுன்டரில் சுட்டு தள்ள முயற்சி செய்கிறார். இதன் பின்னணியில் போலீஸ் உயர் அதிகாரி இருப்பது வேந்தனுக்கு தெரிய வருகிறது. ஒரு பக்கம் தீர்த்து கட்ட வரும் அடியாள் கும்பல், மற்றொரு புறம் என்கவுன்டர் செய்ய வரும் போலீஸ் யார் இந்த கனகு என்று கனகிடமே கேட்கிறார் வேந்தன். கனகு தன் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்கிறார்.
படத்தின் முதல் பாதி பயணம், அடிதடி என சாதாரணமாக செல்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் காதல், பிரிவு, அரசியல் சூழ்ச்சியில் பந்தாடப்படும் ஒரு அப்பாவி என வேறொரு சுவாரசியமான தளத்தில் செல்கிறது. படத்தின் கிளைமேக்ஸில் நாம் எதிர் பார்க்காத ட்விஸ்ட் தந்து கை தட்டலை வாங்கி கொள்கிறார் டைரக்டர்.
சினிமா பின்னனியில் இருந்து வந்திருக்கிறோம். இருப்பதைந்து ஆண்டுகள் சினிமாவில் நடிக்கிறோம். தனக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும் என்ற உணர்வுடன் நடிப்பை தந்துள்ளார் உதயா. தனது காதலிக்கு திருமணம் ஆனதை பார்த்து தவிப்பது, கிளைமேக்ஸ் காட்சியில் அழுது ஆர்பாட்டம் செய்யும் காட்சியிலும் நன்றாக நடித்திருகிறார் உதயா. அழுக்கான ஆடையில் தாடியுடன், இறுக்கமாக முகத்தை வைத்து கொண்டு கனகு கேரக்டரை கண்முன் கொண்டு வந்து விடுகிறார்.
அஞ்சாதே, கோ படத்திற்கு பிறகு படம் முழுவதும் வந்துருக்கிறார் அஜ்மல். கீழ் நிலையில் உள்ள ஒரு கான்ஸ்டபிள், உயர் அதிகாரகள் தன்னை நடத்தும் போது எப்படி ரியாக்ட் செய்வாரோ அதை அப்படியே சரியாக உள்வாங்கி நடித்திருக்கிறார் அஜ்மல். ஒரு பக்கம் அதிகாரிகளுக்கு கீழ் படிதல், மற்றொரு புறம் அப்பாவியை காப்பாற்ற நடத்தும் போராட்டம் என இரண்டையும் பேலன்ஸ் செய்து நடித்துள்ளார் அஜ்மல்.
யோகிபாபு நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்க வில்லை. லேசாக சிரிக்க வைக்கிறார். ஹீரோயின் ஜான்வி காதலிக்கும் போது அழகாக ரொமான்ஸ் செய்வதும் காதல் கை கூடாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து வாழும் போது ஒரு ஏக்கத்துடனும் யதார்த்த நடிப்பை தந்துள்ளார்.
ஒரு காட்சியில் பேருந்துக்குள் நடக்கும் சண்டை காட்சியை மிக நேர்த்தியாக உருவாக்கி தந்துள்ளார் 'ஸ்டண்ட் சில்வா' மாஸ்டர். "இது ஒரு சிஸ்டம், கனகுவை என்கவுன்டர் பண்ணிடு வேற வழியில்லை" என்று காவல் அதிகாரி சொல்லும் போது நம் நாட்டில் பல அப்பாவிகள் என் கவுன்ட்ரில் கொல்லப்படுவது இந்த சிஸ்டம் இருப்பதால் தானா? இதை எப்படி மாற்றுவது? என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.
'கைதி - போலீஸ்' நட்பை சொன்ன 'மைனா' திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வந்து வெற்றி பெற்றது. இந்த படத்தின் சில காட்சிகளை பார்க்கும் போது மைனா நினைவுக்கு வருகிறது. படத்தின் முதல் பாதியையும் இன்னும் சிறப்பாக உருவாக்கி இருந்தால் அக்யூஸ்ட் இன்னொரு மைனாவாக வந்திருக்கும். இருந்தாலும் இந்த அக்யூஸ்ட் உங்களை ஏமாற்ற மாட்டான்.