8ம் வகுப்போடு நின்ற படிப்பு... இன்று ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கு வெளிச்சம் காட்டும் சூரி!

காமெடி நடிகர் டூ ஹீரோ... நிஜ வாழ்க்கையிலும் ரியல் ஹீரோ! நடிகர் சூரியின் நெகிழ்ச்சியான மனிதநேய நற்பணிகள்!
நடிகர் சூரி
நடிகர் சூரி
Updated on

நடிகர் சூரி தனது கடின உழைப்பால் நகைச்சுவை நடிகரிலிருந்து கதாநாயகனாக உயர்ந்தவர் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் ஒரு சிறந்த மனிதநேயப் பண்பாளர். இவர் வறுமையின் வலியை தன் ஆரம்பகால வாழ்க்கையில் நேரடியாக அனுபவித்ததால், கஷ்டப்படும் மக்களின் நிலையை உணர்ந்து பல்வேறு பேரிடர் காலங்களிலும், ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காகவும் சத்தமில்லாமல் பல உதவிகளைச் செய்து வருகிறார்.

கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில், மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கியவர். இந்த நற்பணியில் அவரது மகள் வெண்ணிலா மற்றும் மகன் சர்வான் ஆகியோரும் தங்களின் சேமிப்பிலிருந்து ரூபாய் 25,000 ரொக்கப் பணத்தை வழங்கி தந்தையின் நல்வழியை பின்பற்றினார்கள்.தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளின் போது தனது 'அம்மன் உணவகம்' சார்பாக ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான நிவாரண நிதியை நேரடியாக வழங்கியவர்.

நடிகர் சூரி தனது நகைச்சுவையான நடிப்பின் மூலம் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் பல மனிதநேயமிக்க செயல்களால் மக்களின் மனதை வென்றுள்ளார். படப்பிடிப்பு தளங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், லைட்மேன்கள் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். சினிமா துறையில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதற்கு பின்னால் இருக்கும் நூற்றுக்கணக்கான அடித்தட்டு தொழிலாளர்களின் உழைப்பையும் தியாகத்தையும் மதிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

Soori
Soori

திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அது பலருடைய கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று. ஒவ்வொரு படத்திற்குப் பின்னாலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் நம்பிக்கை, பணி, உழைப்பு, தியாகம், வலிகள், மகிழ்ச்சிகள் போன்றவை இருக்கின்றன. எனவே அவர்களின் கனவுகளைக் கலைக்காமல் இருக்க திருட்டு பதிவிறக்கம் செய்யாமல் இருப்பது நல்லது. ஒரு படத்தை திருட்டு பதிவிறக்கம் செய்வது சட்டவிரோதம் மட்டுமல்ல தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் மனிதநேயமற்ற செயலும் கூட. படத்தை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள் என்றும் கூறி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

சாமானியர்களிடமும் மிகுந்த கனிவுடனும், மரியாதையுடனும் பழகும் இவர் தனது சொந்த ஊரான மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல நற்பணிகளை முன்னெடுத்து வருகிறார். "கல்வி மற்றும் ஏழைக் குழந்தைகளுக்கு செய்யும் உதவிகளை நான் விளம்பரம் தேடாமல், சத்தமில்லாமல் செய்யவே விரும்புகிறேன்" என்று சூரி பலமுறை குறிப்பிட்டுள்ளார். வறுமை காரணமாக எட்டாம் வகுப்போடு தன் படிப்பை நிறுத்த வேண்டியிருந்ததை வெளிப்படையாகக் கூறும் சூரி, கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மாணவர்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை எப்பொழுதும் ஏற்படுத்தி வருகிறார். அவரது பண்பான செயல், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் மனிதநேயம் மிகுந்த செயல்களின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

பல்வேறு இயற்கை பேரிடர்களின் பொழுது பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன் நற்பணி மன்றத்தின் வாயிலாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தான் ஏழ்மையில் கஷ்டப்பட்ட காலத்தை மறக்காமல், அடித்தட்டு மக்கள் மற்றும் ஏழைகளும் மலிவு விலையில் தரமான உணவை உண்ண வேண்டும் என்பதற்காக மதுரைப் பகுதியில் அம்மன் ரெஸ்டாரன்ட் மற்றும் அய்யன் ரெஸ்டாரன்ட் என்ற இரண்டு உணவகத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தனது ஆரம்பகால வறுமையையும் கஷ்டங்களையும் (திருப்பூரில் கூலி வேலை செய்த நாட்களை) எப்போதுமே மறக்காத சூரி, தான் உயர்ந்த பிறகும் கிராமப்புறக் கலாச்சாரத்தையும், தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் மதிக்கும் மனிதநேயம் மற்றும் சமூக அக்கறை மிக்கவராகத் திகழ்கிறார்.

இதையும் படியுங்கள்:
‘ஜனநாயகன்’ ரிலீஸ்: அரை நாள் விடுமுறை அறிவிப்பு..!
நடிகர் சூரி
logo
Kalki Online
kalkionline.com