

அஜித் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு அவரது மனைவி ஷாலினி தயாரிப்பாளராக மாறி, படத்தினை தயாரிக்க உள்ளார் என்பது கோலிவுட்டின் புதிய செய்தியாக உள்ளது. அஜித்துடன் திருமணம் நடைபெற்ற பின்னர், ஷாலினி எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் திரைத்துறையை சேர்ந்த மற்ற விஷயங்களில் கலந்து கொள்ளாமல் தனது தனியுரிமையை பாதுகாத்து வந்தார். இந்நிலையில் அவரது புதிய தயாரிப்பாளர் அவதாரம் கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக இருந்த விஜயும் அஜித்தும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்து உச்சத்தில் இருந்தனர். தற்போது விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் , அவருக்கு போட்டியான அஜித்திற்கான வாய்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதனால், அஜித் நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்புகள் மேலும் கூடியுள்ளது. தற்போது அஜித் நடிக்க உள்ள ஏகே 64 திரைப்படம் பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இந்த திரைப்படத்தின் அஜித்தின் சம்பளம் மற்றும் படத்தின் பட்ஜெட் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த நிலையில், படத்தின் புதிய தயாரிப்பாளர் யார்? என்ற கேள்வியும் எழுந்தது. தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறிய தகவல்களின் அடிப்படையில் அஜித் எதிர்பார்க்கும் சம்பளத்தை , தற்போதைய சூழலில் தயாரிப்பாளர்கள் கொடுப்பது கடினமான விஷயம் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் திரைப்படத்திற்கு தேவையான பட்ஜெட் அதிகமாகவும் இருப்பதால் தற்போதைய சூழலில் , தயாரிப்பாளர்கள் அவரது புதிய படத்தை தயாரிப்பதற்கு தயக்கம் காட்டியதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த சர்ச்சைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஜித்தின் மனைவியும் , முன்னாள் தமிழ் சினிமா நடிகையுமான ஷாலினி அவர்கள் ஏகே 64 திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. திருமணத்திற்கு பின் சினிமா சார்ந்த எந்த ஒரு துறையிலும் தலையிடாத ஷாலினி தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்குவது பேசுபொருளாகியுள்ளது.
பொதுவாக அஜித்தின் திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு, அவர் தொடர்ச்சியாக அடுத்த படத்தின் வாய்ப்பையும் வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் படமாக்கப்படும்போதே தனது அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதற்கு அஜித் சம்மதமளித்துள்ளார்.
அஜித்தின் மற்ற திரைப்படங்களை விட ஏகே 64 மிகவும் பிரம்மாண்டமான ஆக்சன் கதை அம்சமும் , அதில் நகைச்சுவையும் கலந்து உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கதை விவாதம் மற்றும் படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள் குறித்த திட்டங்கள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் அனைத்தும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஷாலினி தயாரிப்பாளராக இருப்பது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள், எதுவும் அவர் சார்பில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஏகே 64 படத்தில் பங்கேற்க உள்ள நடிகர் மற்றும் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஷாலினியின் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் என்பதால், இந்த திரைப்படத்தின் வெற்றியை கவனத்தில் கொண்டு அஜித் சிறப்பான கதை ஒன்றை தேர்வு செய்வார், என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.