

அன்பே டயானா படத்தை பாரி இளவழகன் இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரோஜா கம் பேக் தந்துள்ளார். இந்தப் படத்தின் கதை என்ன இங்கே பார்க்கலாம்.
ரோஜாவும், சேத்தனும் கணவன் மனைவி. இவர்கள் பூர்வீகம் ஆந்திரா. சென்னையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகள் இரண்டு மகன்கள். ரோஜா சற்று ஜாதிய உணர்வாளர். தனது மகன்கள் கண்டிப்பாக தனது ஜாதியில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். எந்த பிரச்னை வந்தாலும் எதிர்காலத்தில் தனது ஜாதியினர் தான் காப்பாற்றுவார்கள் என்று உறுதியாக நம்புகிறார். உடை, கலாச்சாரம் இவற்றில் பாரம்பரியம் வேண்டும் என்று எண்ணுபவர் ரோஜா. இரண்டு மகன்களில் ஒரு மகனாக இருக்கக்கூடிய பாரி இளவழகன் ஒரு ஆங்கிலோ இந்திய பெண்ணை விரும்புகிறார். இந்தப் பெண்ணை எப்படியாவது தனது அம்மாவிடம் அறிமுகப்படுத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார் பாரி.
இதற்காக ஒரு பாரம்பரியமிக்க பெண் போல தனது காதலியை மாற்றுகிறார். இருந்தாலும் ரோஜாவுக்கு ஒரு ஆங்கிலோ இந்திய பெண்மணி தனது மருமகளாக வருவது பிடிக்கவில்லை. இது ஒரு பிரச்னையாக மாறி காதலர்களுக்கு இடையே பிரிவு வருகிறது. இந்த சூழ்நிலையில் பாரியின் தாய் மாமா தனது பெண்ணை பாரிக்கு திருமணம் முடிக்க எண்ணுகிறார். இறுதியில் என்ன ஆனது? என்று சொல்கிறது அன்பே டயானா.
கதை பழசு - வீட்டில் உள்ள அனைவரையும் அடக்கி ஆளும் பெண்மணி. கணவர் உட்பட அனைவரும் பயப்படும் நபர்கள் என்ற டிவி சீரியல் ஒன்லைன் வைத்து கதை செய்ய முயன்றிருக்கிறார் டைரக்டர். படம் நகர்ந்து செல்லும் விதமும் ஒரு சீரியல் பார்த்த உணர்வையே தருகின்றது. அம்மாவுக்கு ஒத்து வராத பெண்ணை காதலிப்பது, தாய் மாமன் தன் பெண்ணை மணமுடிக்க முயற்சிப்பது என நாம் பல படங்களில் பார்த்த கதையே இந்தப் படத்தில் இருக்கிறது. இதனால் கதையில் பெரிய அளவில் நம்மால் ஒன்ற முடியவில்லை.
திரைக்கதை பரவாயில்லை ரகம். படத்தின் முதல் பாதி திரைக்கதை நகைச்சுவையில் நம்மை சிரிக்க வைக்கிறது. படத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் இயல்பாகவே நடித்திருக்கிறார்கள். படத்தின் முதல் பாதி ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி விடுகிறது. ஆனால் இரண்டாம் பாதி அப்பாவிற்காக தட்டிக் கேட்கும் பையன், கல்யாண நாள் அன்று கடிதம் எழுதி வைத்து காணாமல் போகும் மணமகள் என கதை எங்கெங்கோ திசை புரியாத இலக்கை நோக்கி செல்கிறது. இருந்தாலும் அவ்வப்போது வரும் நகைச்சுவை துணுக்குகள் நம்மை சிரிக்க வைக்கின்றன.
நடிப்பு – சபாஷ்- நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரோஜா நடிக்க வந்துள்ளார். ஒரு மகளுக்கும் இரண்டு மகன்களுக்கும் அம்மாவாக கொஞ்சம் கறார் பெண்மணியாக சிறப்பாக நடித்துள்ளார். கணவனையும் மகன்களையும் மிரட்டும் இடத்தில் ஆஹா சொல்ல வைக்கிறார். தனது கண்டிப்பிற்கும் சாதியப்பற்றுதலுக்கும் என்ன காரணம் என்று அழுது வெடித்து சொல்லும் இடத்தில் அற்புதமாக நடித்துள்ளார் ரோஜா. இனி அம்மா கேரக்டரில் இவரை அதிகமாக எதிர்பார்க்கலாம். படத்தின் ஒப்பனையாளர் கொஞ்சம் அதிகமாக ரோஜாவுக்கு மேக்கப் போட்டதை தவிர்த்து இருக்கலாம்.
மனைவிக்கு பயந்து நடிக்கும் கேரக்டர் சேத்தனுக்கு புதிது இல்லை என்றாலும், இந்த படத்தில் கொஞ்சம் கூடுதல் சிறப்பாக நடித்துள்ளார். இருந்தாலும் மனைவி எப்படி யோசிப்பார் என்று யோசித்து அதற்கு ஏற்றார் போல் செயல்படும் இடம் நம்மை ரசிக்க வைக்கிறது. பாரி இளவழகன் சில இடங்களில் சிறப்பாகவும் சில இடங்களில் சுமாராகவும் நடித்துள்ளார். ஹீரோயின் ரம்யா ஒரு ஆங்கிலோ இந்திய பெண்ணாக பொருந்திப் போகிறார். பரிதாபங்கள் கோபி சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.
கடந்த ஆண்டு கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலை சொன்ன 'ஜமா' என்ற படத்தை இயக்கி நடித்த பாரி இளவழகன் இந்தப் படத்தில் ஒரு கமர்சியலுக்கு முயற்சித்து உள்ளார். கமர்சியலுக்கான திரைக்கதை சரியான திசையில் பயணிக்காததால் அன்பே டயானா ஒரு சீரியல் பார்த்த எபெக்ட் தான் வருகிறது.
இந்தப் பதிவை வாசிப்பதன் மூலம், நீங்கள் ஒரு குடும்பத் திரைப்படத்தைத் தேர்வு செய்வதற்கான தெளிவான பார்வையைப் பெறுவீர்கள். ரோஜாவின் நடிப்பு மற்றும் படத்தின் திரைக்கதை ஓட்டம் குறித்த துல்லியமான மதிப்பீடு, உங்கள் நேரத்தை முதலீடு செய்யத் தகுதியான படமா என்பதை முடிவு செய்ய உதவும்.