ஹீரோவான பிக்பாஸ் ராஜு... படம் பெயர் என்ன தெரியுமா?

Raju Jeyamohan
Raju Jeyamohan
Updated on

பிக்பாஸ் பேமஸ் ராஜு ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இதுவரை 7 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 8வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்ற சிலர் தற்போது உச்சநட்சத்திரமாக கலக்கி வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் புகழ் ராஜூவுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்றே சொல்லலாம். Rain Of Arrows Entertainment சார்பில், சுரேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில் உருவாக உள்ள படம் 'பன் பட்டர் ஜாம்'. எண்ணித்துணிக படத்தை அடுத்து தன்னுடைய இரண்டாவது படமாக இப்படத்தை தயாரிக்கிறார். ராஜூ நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே சைஸ் ஜீரோ படத்திற்கு வசனமும், தேசியவிருது வென்ற பாரம் படத்தில் திரைக்கதை மற்றும் வசனமும் எழுதி இருக்கிறார். காலங்களில் அவள் வசந்தம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் இயக்கும் இரண்டாவது படம் இது.

பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆதியா பிரசாத் மற்றும் பவ்யா திரிகா நடிப்பில் இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகி வரும் திரைப்படம் ”பன் பட்டர் ஜாம்”. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இறந்தகால வலிகளின் சுமைகளுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய பயங்களுக்கும் நடுவே ஊசலாடாமல், நிதானமாக நின்று நிகழ்காலத்தை புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் Gen Z இளைஞர்களைப் பற்றிய கதைதான் பன் பட்டர் ஜாம். ஒருவனை சுற்றி எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அந்தந்த கணத்தை முழுமையாக வாழப் பழகினால், கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை என்கிற பாசிட்டிவிவான கருத்தை பரபரப்பாகவும், முழுக்க முழுக்க நகைச்சுவை ததும்பச் சொல்லும் வகையிலும், இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
வெளியானது இந்தியன் 2 அடுத்த பாடல்... டாப் ட்ரெண்டிங்கில் இடம்!
Raju Jeyamohan

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பீல் குட் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை ராகவ் மிர்தாத் உருவாக்கியுள்ளார். முக்கியமாக சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி ஜோடி அதகளப்படுத்தியுள்ளார்கள். அதேபோல் சார்லியின் கதாப்பாத்திரம் அவரின் அடுத்த மைல் கல்லாக இப்படம் இருக்கும். இவர்களுடன் மைக்கேல் தங்கதுரை மற்றும் V.J பப்பு முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. வரும் ஜூலை 8 ஆம் தேதி இப்படத்தின் முதல் பார்வை வெளி வருகிறது. ராகவ் மிர்தாத் எழுதி இயக்கம் இந்த படத்திற்கு, நிவாஸ் கே பிரசன்ன இசையமைக்கிறார். பாபு குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜான் ஆபிரஹாம் படத்தொகுப்பு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com