
மலையாள மொழியில் தயாரிக்கப்பட்ட சூப்பர் ஹீரோயின் கதை அம்சம் கொண்ட படம், ‘லோகா சேப்டர் 1: சந்திரா'. கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி வெளியான இந்த படம் கேரளா மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்க அவருடன் நஸ்லென், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், விஜயராகவன், சரத் சபா மற்றும் பல சிறப்பு தோற்றங்கள் வழங்கிய நடிகர்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான Wayfarer Films தயாரிப்பில் டோம்னிக் அருண் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு நிமிஷ் ரவிந்த் ஒளிப்பதிவும், சமன் சக்கோ படத்தொகுப்பும் செய்துள்ளார்.
தமிழ் நடன இயக்குனரும் நடிகருமான சாண்டி இந்த படத்தில் முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தில் கிட்டதட்ட வில்லன் போல் வருவது சாண்டி மாஸ்டர் தான், அவரும் படம் முழுவதும் ஒரு ஆணாதிக்க திமிருடன் வருவது, அதோடு வாம்பயர் பவர் அவருக்கு வர, அவர் எடுக்கும் முடிவுகள் என சாண்டி தன்னால் முடிந்த பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்.
ரூ.30 கோடியில் உருவான இந்த படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் மழையை அள்ளி வீசி வருகிறது. மலையாளத்தில் முதல் பெண் சூப்பர்ஹீரோ படம் என லோகா பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கல்யாணி ஒரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும். மலையாள படங்கள் எப்படி இந்த சிறு பட்ஜெட்டில் இப்படி ஒரு குவாலிட்டியான படங்களை கொடுக்கிறார்கள் என்ற ஆச்சரியம் எப்போதுமே உள்ளது.
Wayfarer Films பேனரில் ஏழாவது படைப்பாக உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாளப் படம் நல்ல வசூல் வேட்டையும் நிகழ்த்தி வருகிறது. கடந்த 10 நாட்களில் இந்தப் படம் ரூ.150 கோடி என்ற இலக்கை தொட்டிருக்கிறது.
கதாநாயகியை மையமாகக் கொண்ட திரைப்படம் ஒன்று ரூ.150 கோடியை எட்டுவது, இதுவே முதல் முறை என்கிறார்கள். அதுமட்டுமின்றி, இந்தப் படம் விரைவிலேயே, கதாநாயகி சப்ஜெக்ட்டில் வெளியாகி ரூ.200 கோடி வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தும் என்றும் சொல்கிறார்கள்.
மோகன்லால் நடித்த ‘ஹ்ருதயபூர்வம்’ மற்றும் ஃபகத் பாசில் நடித்த ‘ஓடும் குதிர சாடும் குதிர’ ஆகிய படங்களுடன் இந்த படமும் வெளியானது. ஆனால் மற்ற இரண்டு படங்களை விட பின்னுக்கு தள்ளிவிட்டு டாப் ஹீரோக்களுக்கு மாஸ் காட்டி, ‘லோகா’ படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில் 250 திரையரங்குகளில் வெளியான இந்த படம், அடுத்த நாளில் இருந்து 325 திரையரங்குகளாக அதிகரிக்கப்பட்டது.
‘லோகா' திரைப்படம் மொத்தம் 5 பாகங்களாக வெளியாக இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. முதல் பாகத்தின் மொத்த வசூலில் ஒரு பகுதி, படக்குழுவினருக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என்று, படத்தின் தயாரிப்பாளரான துல்கர் சல்மான் அறிவித்திருக்கிறார். மேலும் அடுத்தடுத்த பாகங்கள், இன்னும் கூடுதல் பொருட்செலவில் தயாரிக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதற்கிடையே இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளதாகவும் இந்த(செப்டம்பர்) மாத இறுதியில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.