முன்னணி நடிகை ரகுல் ப்ரீத் சிங் உடற்பயிற்சி செய்து படுத்த படுக்கையில் இருக்கும் செய்தி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் இந்தியன் 2. இந்தப் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. தற்போது அஜய் தேவ்கானுடன் ஒரு படம் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய இவர், தற்போது உடல் நலம் இல்லாமல் ஓய்வெடுத்து வருகிறார். இதுகுறித்து அவர் பதிவிட்டதைப் பார்ப்போம். “ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது 80 கிலோ எடையை தூக்கினேன். அப்போது கீழ் முதுகு தண்டில் சிறிய வலி இருந்தது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் மேலும் தூக்கினேன். அது மிகப்பெரிய தவறாகிவிட்டது. ஜிம்மை விட்டு நேராக ஷூட்டிங் சென்றுவிட்டேன். அங்கு என்னால் உடையை கூட குனிந்து மாற்றமுடியவில்லை.
அப்போதும் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அக்டோபர் 10ம் தேதி பிறந்தநாளுக்கு தயாராகிக்கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய இடுப்புக்கு கீழ் பகுதி தனியாக விழப்போவது போல் ஒரு உணர்வு. மயங்கிவிட்டேன். 10 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். ஆனால், இன்னும் சரியாகவில்லை. விரைவில் பூரண குணமடைந்துவிடுவேன் என்று நம்புகிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.
ஜிம்மிற்கு செல்பவர்கள் தமது உடலுக்கேற்ற உடற்பயிற்சிகளை செய்யாமல், மிகவும் கடுமையான பயிற்சிகளை செய்கின்றனர். மேலும் சிலர் குறிப்பிட்ட நேரம் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்யாமல், தோன்றும் நேரமெல்லாம் செய்கிறார்கள். இது மிகவும் தவறு.
ஜிம்மிற்கு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட எடையைதான் தூக்க வேண்டும். இதுபோன்ற சில விதிகளை மதிக்காமல் இருப்பதால்தான் இந்த சம்பவங்கள் நிகழ்கின்றன. மேலும் இதுபோல அதிக எடை தூக்கும்போது பயிற்சியாளர்களின் ஆலோசனை கேட்டே தூக்க வேண்டும். ஒருநாளைக்கு இவ்வளவு மணி நேரம்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற விதிகள் உள்ளன. அதன்படி பின்பற்றினால் எந்த பிரச்னையும் வராது.
ஆகையால், ஜிம்மிற்கு சென்று எது செய்தாலும் பயிற்சியாளரை கலந்தாலோசித்து செய்வது நல்லது.