

பேசும் படங்கள் மூலம் சினிமா உலகம் கண்ட புதிய விடியலும் மைல்கற்களும்
சினிமாவில் ஊமைப்படங்களிலிருந்து, பேசும்படங்களுக்கு மாறும் அந்த ஒரு முன்னேற்ற பாதையில் பெரும் சவால்களும், சோகக் கதைகளும், மன உளைச்சல்களும் ஏராளம் இருந்தன. 1920ம் ஆண்டு சினிமா வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. பல காலங்களாக அமைதியாக இயங்கி வந்த சினிமா உலகம், ஒரே இரவில் தலைகீழாக மாறியது.
மௌனப் படங்களில் வசனங்கள் கிடையாது என்பதால், மொழித் தடை என்பது இருக்கவே இல்லை. அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு படம், எந்தவித Dubbing-ம் இல்லாமல் பாரிஸ், டோக்கியோ, சென்னை என உலகின் எந்த மூலையிலும் உடனடியாக வெளியிடப்பட்டது. காட்சிகளுக்கு நடுவில் உரையாடல்களை வெளிப்படுத்த 'டைட்டில் கார்ட்ஸ்' (Title Cards) மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இதனால் உலகெங்கிலும் உள்ள மக்கள் சினிமாவுடன் தங்களை எளிதில் தொடர்புப்படுத்திக் கொண்டனர்.
பேசும் படங்கள் இயக்கப்பட்ட காலத்தில் தொழில்நுட்ப ரீதியாக பல சவால்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒலியை பதிவு செய்யும் கருவிகள் கொடூரமான அளவு இரைச்சல் கலந்த சத்தங்களை எழுப்பின. இதனால், கேமராவின் ஒலியை ஒடுக்க ராட்சதப் பெட்டிகள் போன்ற 'சவுண்ட் ப்ரூஃப் பிளிம்ப்கள்' (Blimps) பயன்படுத்தப்பட்டன. இதனால் கேமராக்கள் ஒரே இடத்தில் முடங்கின; இயக்குநர்களால் அவற்றை எளிதாக நகர்த்த முடியவில்லை. நடிகர்கள் தங்களின் உரையாடல்களைப் பதிவு செய்ய, மேசைகளில் மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோபோன்களைத் தேடி நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தத் தொழில்நுட்ப மாற்றம் பல ஊமைப்பட நட்சத்திரங்களின் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கியது. பல பிரபல நடிகர்-நடிகைகளின் குரல் வளையம் அவர்களின் திரைத்தோற்றத்திற்குப் பொருத்தமாக இல்லை. சிலரால் மைக்ரோபோன் முன்னால் இயற்கையாகப் பேச முடியவில்லை. இதனால் அவர்களது சினிமா பயணம் திடீரென முடிவுக்கு வந்தது.
மறுபுறம், திரையரங்கு உரிமையாளர்கள் தங்கள் தியேட்டர்களில் புதிய ஒலி அமைப்புகளைப் பொருத்த கோடிக்கணக்கில் முதலீடு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஊமைப்படக் காலத்தில், இயக்குநர்கள் செட் மேடையில் சத்தமாகப் பேசிக்கொண்டே இருப்பார்கள்; இசைக் குழுவினர் நடிகர்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப மேடையிலேயே நேரலை இசை வாசிப்பார்கள். ஆனால், டாக்கீஸ் வந்தவுடன் ஒலியைத் துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டியிருந்ததால், செட் முழுவதும் முழுமையான அமைதி கடைபிடிக்கப்பட்டது. இயக்குநர்களால் செம கடுமையாகப் பேசவோ, கத்தவோ முடியாமல் போனது. காற்றாடி மூலமாகக்கூட வரும் எந்த ஒரு சத்தமும் வராமல் பார்த்துக்கொண்டனர். இதனால், பலரது உடல நிலையும் மோசமாக போனது.
மேலும் ஒலியை பதிவு செய்யும் அறையும் மிகுந்த காற்றோட்ட வசதி இல்லாமல், இறைச்சல் அதிகமாகி, பணியாளர்கள் பலர் மூச்சு திணறி இறந்தே போனார்கள்.
பல ஊமைப்பட நடிகர்களின் குரல் கீச்சாக இருந்ததாலோ அல்லது மோசமாக இருந்ததாலோதான் அவர்களின் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்று ஹாலிவுட்டில் ஒரு பெரிய கட்டுக்கதை நிலவுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், பல நடிகர்களின் குரல் இயல்பாகவே நன்றாக இருந்தது. மாறாக, புதிய ஒலித் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப எப்படி நடிப்பது என்று கற்றுக்கொள்ள விரும்பாமலேயும், தங்களின் சுதந்திரமான நடிப்பு முறை பறிபோனதாலும் பல பிரபலங்கள் தாமாகவே விலகிக் கொண்டனர்.
இதுபோன்ற கஷ்டங்களை நீங்கள் Babylon என்ற படத்தில் காணலாம். இப்படியாக பல சவால்களுக்கு இடையே, 1927-ல் வெளியான 'தி ஜாஸ் சிங்கர்' (The Jazz Singer) என்ற திரைப்படம், ஒலியும் ஒளியும் இணைந்து வெளிவந்த முதல் முழு நீளப் படமாக வரலாற்றில் இடம் பிடித்தது.
சினிமாவின் பொற்கால மாற்றத்தை அதன் அசல் வரலாற்றுப் பின்னணியுடன் ஆராய்வதன் மூலமாக, திரைப்படத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் அதன் பின்னுள்ள மனித உழைப்பும் உங்களுக்கு முழுமையான பரிச்சயமாகிறது.