
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக அறியப்படுபவர் நடிகர் பகத் பாசில். மலையாள திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகர் பகத் பாசில். இயக்குநர் பாசிலின் மகனான இவர் தனது தந்தையின் இயக்கத்தில் 2000-ம் ஆண்டு வெளியான ‘கையேதும் தூரத்தில்’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்த இவர் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழில் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
அல்லு அர்ஜுனுடன் புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றார். தமிழில் ரஜினிகாந்துடன் வேட்டையன் படத்தில் காமெடி கலந்த வேடத்தில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் பகத் பாசில் வில்லனாக நடித்தாலும், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டது.
தற்போது பகத் பாசில், மாலிவுட் டைம்ஸ் என்ற படத்தில் நடித்து வருவதுடன், மாரீசன், ஓடும் குதிர சாடும் குதிர, பேட்ரியாட் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் வடிவேலு உடன் சேர்ந்து நடித்த மாரீசன் திரைப்படம் வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தியில் தி இடியட் ஆப் இஸ்தான்புல் என்ற படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் பகத் பாசில், சமூக வலைதளங்களையும், நவீன டெக்னாலஜிகளையும் பயன்படுத்துவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஸ்மார்ட் போன் கூட வைத்திராமல், மிக எளிய கைபேசியையே பயன்படுத்துவதாக அவரது நெருங்கியர்கள் பலமுறை கூறியுள்ளனர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குட்டியாக பகத் பாசில் ஒரு பட்டன் போனை பயன்படுத்தியது, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் பகத் பாசில் பயன்படுத்தும் மொபைல் போன் பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த கையால் வடிவமைக்கப்படும் ஆடம்பர ரக மொபைல் போன் நிறுவனங்களில் ஒன்றான வெர்து என்ற நிறுவனத்தின் தயாரிப்பையே அவர் பயன்படுத்தி வருகிறார்.
பார்க்க சிறியதாக தெரியும் இந்த போனின் விலையை கேட்பவர்களை பிரமிக்க வைக்கிறது. உலகளவில் மிகக் குறைவானவர்களே பயன்படுத்தும் இந்த ‘Vertu Ascent Ti’ போனின் விலை ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது. இந்த போனின் சில பாகங்கள் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளன. பட்டனை பயன்படுத்தி உபயோகிக்க கூடிய இந்த மொபைல் போன் தற்போது விற்பனைக்கு வருவதில்லை மற்றும் உற்பத்தியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 17 ஆண்டுகளுக்கு முன் அதாவது 2008-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த போனையே, பகத் பாசில் இன்னும் பயன்படுத்தி வருகிறார்.
ஆனால் இந்த போனில் புளூடூத், ஜி.பி.ஆர்.எஸ்., எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். ஆகிய நவீன வசதிகளை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டைட்டானியம் என்ற உலோகம் கொண்டு கட்டமைக்கப்பட்ட, நீல கற்களால் அலங்கரிக்கப்பட்ட மற்றும் கையால் தைக்கப்பட்ட தோல் என பல சிறப்பம்சங்களுடன், பல்வேறு வசதிகளுடன் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போன் மற்றவற்றில் இருந்து வேறுபட்டு காணப்படுகிறது.