தமிழ் திரையுலகில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். சினிமாவில் மற்ற நடிகர்களை விட வித்தியாசமானவர் நடிகர் அஜித். தனக்கு என்ன தோன்றுகிறதா எதை பற்றியும் கவலைப்படாமல் அதை செய்யும் துணிச்சல் இவரிடம் மட்டுமே உண்டு. சினிமாவை தாண்டி தனக்கு பிடித்தமான பல்வேறு விஷயங்களில் ஆர்வம் காட்டி அதில் ஜெயித்து வருகிறார். கலைத்துறையில் இவர் ஆற்றிய சேவைகளை பாராட்டி மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அந்த வகையில் சினிமா மட்டுமின்றி கார் பந்தயங்களிலும் ஆர்வம் காட்டி வந்த அஜித், திரையுலகில் உச்சத்தில் இருந்த போதிலும் கார் ரேசிலும் ஈடுபாடுடன் கலந்து கொண்டு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். வெளிநாடுகளில் நடைபெற்ற பல்வேறு கார் பந்தயப் போட்டிகளில் வெற்றி பெற்று உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார்.
கடந்த ஜனவரி மாதம் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் ரேஸில் கலந்து கொண்ட இவரது அணி இரண்டு முறை மூன்றாவது இடமும், ஒரு முறை இரண்டாவது இடமும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த வாரம் பெல்ஜியமில் நடைபெற்ற கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில் அஜித்குமார் கார் ரேஸ் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியிருந்தது.
சமீபத்தில் 'AJITHKUMAR RACING' என்ற யூடியூப் சேனலை தொடங்கிய அஜித் அதில் தனது ரேசிங் அணி பங்கேற்கும் ரேஸ்கள் அனைத்தையும் இந்த யூடியூப் சேனலில் ஒளிபரப்பு செய்து வருகிறார்.
அஜித் பொது நிகழ்ச்சிகளில் தோன்றுவதும் இல்லை. பேட்டி கொடுப்பதும் இல்லை. இதை தனது வாழ்க்கையில் ஒரு பாலிசியாகவே வைத்திருந்தார். இந்நிலையில் சமீபகாலமாக அஜித் வெளிநாடுகளில் அடிக்கடி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.
தற்போது பிரான்சில் நடந்து வரும் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றுள்ளது. கார் பந்தயதுக்கு நடுவே ஆங்கில சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் அஜித். செய்தியாளர் அஜித்திடம் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ போன்ற படங்களில் நடிப்பதற்கு உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா எனக்கேட்டதற்கு, அஜித், “Why Not”... ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ மாதிரியான படங்களில் நடிப்பதற்கு ஆசை, பொதுவாகவே நான் நடிக்கும் படங்களில் நிறைய ஸ்டண்ட் காட்சிகள் செய்வேன்" என பதிலளித்துள்ளார். மேலும் "எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார். ஆகவே படக்குழுவிடமிருந்து அழைப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் நடிகர் அஜித் குமார் எளிமையாக பதிலளித்துள்ளார்.
கோலிவுட்டில் கலக்கிய அஜித் விரைவில் ஹாலிவுட்டிலும் களம் இறங்கி கலக்குவார் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.