

மணிரத்னம் இயக்க உள்ள புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் மணிரத்தினத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மானுக்கு பதில் , புதிய இசை அமைப்பாளரான சாய் அபியங்கரை ஒப்பந்தம் செய்துள்ளதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்த செய்திகள் சமூக ஊடகங்களில் பெரிய அளவில் வைரலாகி விவாதத்தை கிளப்பியுள்ளன. பலரும் இந்த செய்தியை நிச்சயம் உண்மையாக இருக்காது என்றும் , ஒரு சிலர் இந்த கூட்டணி முடிந்து விட்டது என்றும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.
இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக கருதப்படுபவர் மணிரத்னம். அனுபல்லவி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தொடங்கிய அவரது சினிமா வாழ்க்கை தொடர்ந்து வெற்றிகளையும் அவ்வப்போது சில சறுக்கல்களை சந்தித்தாலும் , இந்திய அளவில் திரைத்துறையில் அவருக்கென்று தனி இடம் உள்ளது. மணிரத்னம் மீதான மதிப்பிற்கு முக்கிய காரணம் திரைப்படத்தில் அவர் பயன்படுத்தும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தான்.
தென்னிந்திய சினிமாவில் நடிகர்களும், கதையும், இசையும் நன்றாக இருந்தால் போதும் என்ற நிலையை மாற்றிக் காட்டியவர் மணிரத்னம். மணிரத்தினம் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து சிறப்பான முறையில் பணிபுரிவதால் , அவரது திரைப்படங்கள் ஏராளமான திரைசார் விருதுகளையும் தேசிய விருதுகளையும் வென்றுள்ளது. மணிரத்தினம் திரைப்படம் என்றாலே அதிக விருதுகளை பெறும் என்ற பேச்சு திரை உலகில் இன்றும் நிலவுகிறது.
அதேபோல் , இந்திய இசையின் சர்வதேச முகமாக இருக்கக்கூடியவர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தியாவைத் தாண்டி பல நாடுகளில் அவர் பெரும் புகழ் பெற்றுள்ளார். மணிரத்தினம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் , இந்தியாவில் 7 தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமை பெற்றவர் , அதில் 4 விருதுகள் மணிரத்னம் திரைப்படங்களில் இசையமைத்ததால் கிடைத்தது.
இது விருதுகள் மட்டுமல்லாமல் 2 ஆஸ்கார் விருதுகள் , கோல்டன் குலாப் , பாப்டா , கிராமி உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளையும் பெற்ற ஒரே இந்தியர் என்று பெருமையும் ரஹ்மானுக்கு உண்டு. மேலும் 33 பிலிம்பேர் விருதுகளைப் பெற்ற ஒரே நபரும் இவர் தான்.
எப்போதும் மணிரத்னம் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இந்தியாவிலே மிகப்பெரியதாக இருக்கும். இந்த கூட்டணியில் வெளியே வந்த பாடல்கள் அனைத்தும் இந்தியாவை தாண்டி சர்வதேச அளவில் பெரும்
புகழையும் பெற்றுள்ளன. குறிப்பாக ரோஜா , உயிரே , பம்பாய் , ராவணன் , குரு , ஓகே கண்மணி , அலைபாயுதே போன்ற திரைப்படங்களின் பாடல்கள் தேசிய அளவில் பெரிய ஹிட் அடித்தவை. அதிலும் பம்பாய் ,உயிரே திரைப்படத்தில் வரும் இசையை ஹாலிவுட் மற்றும் பல்வேறு சர்வதேச திரைப்படங்களில் பயன்படுத்திக் கொண்டனர்.
இத்தகைய சிறப்புமிக்க இந்த கூட்டணி சமீபத்தில் உடைந்ததாக சமூக வலைதளங்களில் மற்றும் முக்கிய ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தது. ஆனால் , இந்த தகவல் வெறும் வதந்தி தான். பெயரிடப்படாத மணிரத்னத்தின் புதிய படத்திற்கு ரஹ்மான் ஏற்கனவே ஒரு பாடலுக்கு முழுமையாக கம்போசிங் முடித்துள்ளார் , மேலும் சில பாடல்களை உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. ஜூலை மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கப்பட உள்ளது.