

கமல்ஹாசன் இன்று (நவம்பர் 7-ம் தேதி) தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அவரின் பிறந்தநாளை அவரது ரசிகர்களும் கொண்டாட தயாராக இருக்கின்றனர்.
கலைத்துறைக்கு கிடைத்த பொக்கிஷம் நடிகர் கமல்ஹாசன். 71 வயதில் அடியெடுத்து வைக்கும் இவரின் கலைசேவையை விரல் விட்டு எண்ணமுடியாது. அரை நூற்றாண்டுக்கு மேலான கலைப்பயணம்... நூற்றுக்கணக்கான படைப்புகள்.. நடிப்பு மட்டுமின்றி சினிமாவின் பிரதான துறைகளில் முத்திரை பதித்து, சினிமாவை தாண்டி பொது வாழ்க்கையிலும் முத்திரை பதித்து, அரை நூற்றாண்டுக்கு மேல் இந்திய மக்களின் இதயங்களைக் கொய்து கொண்ட கலைஞனாகியிருக்கிறார், கமல்ஹாசன் என்று சொன்னால் அது மிகையாகாது..
1960-ம் ஆண்டில் ‘களத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாக 6 வயதில் தொடங்கிய இவரது கலைப்பயணம் இன்று வரை கிட்டதட்ட 65 ஆண்டுகளாக கடிகாரத்தின் நொடி முள்ளாய் இன்று வரை நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.
நடிகராக மட்டுமல்லாது திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர், பிக்பாஸ் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக கமல் தொடாத துறைகளே இல்லை என்று சொல்லலாம்.
இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். தமிழ், மலையாளம், தெலுங்கு, வங்காளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். கதாநாயகனாக மட்டுமின்றி துணை நடிகர், காமெடியன், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து முத்திரை பதித்துள்ளார். அந்த வகையில் இந்திய சினிமாவில் கலை, தொழில்நுட்பம் தொடங்கி, துறை சாராத விஷயங்கள் வரை அத்தனையிலும் கற்றுத் தேர்ந்தவர் கமல்ஹாசன்தான் என்பார்கள்.
விமர்சனமோ, பாராட்டோ எதுவா இருந்தாலும் அதை இன்முகத்தோடு ஏற்று, சினிமாவுக்காக பங்களிப்பை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதுதான், அவரின் தனித்துவம் எனலாம்.
ஒரு படத்தில் நடித்ததை போன்றே அடுத்த படத்திலும் நடிக்க விருப்பாதவர் கமல்ஹாசன். ஒரு படத்தில் வெற்றி கிடைத்துவிட்டால், அதே ஜானரில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பவர் அல்ல கமல்ஹாசன்... வித்தியாசமான கதையென்றால் வில்லனாகக்கூட நடிக்க தயங்காதவர் கமல்ஹாசன். அந்த வகையில் தசாவதாரம், சிகப்பு ரோஜாக்கள், ஆளவந்தான், கல்கி 2898 AD போன்ற படங்களில் வில்லனாக நடித்தும் தனது முத்திரையை பதித்துள்ளார்.
அதுமட்டுமின்றி 1975ல் ஜி.தேவராஜன் இசையில் அந்தரங்கம் படத்தில் 'ஞாயிறு ஒளிமழையில்..' என்ற பாடலை பாடியதன் மூலமாக முதன் முதலாக பாடகராகவும் மாறினார். அதன் பின்னர் அதனை அவரது படங்களில் தொடர ஆரம்பித்தார். அவர் நடிக்கும் படங்களில் அவர் பாடிய பாடல்கள் இப்போதும் ஆல் டைம் ஃபேவரிட் தான்.
குணா படத்தில் 'கண்மணி அன்போடு காதலன்..', அபூர்வ சகோதரர்கள் படத்தில் 'ராஜா கைய வச்சா...', மைக்கேல் மதன காமராஜன் படத்தில் 'சுந்தரி நீயும்..', நாயகன் படத்தில் 'தென்பாண்டி சீமையிலே..', சிகப்பு ரோஜாக்கள் படத்தில் 'நினைவோ ஒரு பறவை..', அன்பே சிவம் படத்தில் 'யார் யார் சிவம்..' இப்படி அவர் பாடிய பாடல்களில் பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம்.
சினிமா மூலம் கிடைக்கும் வருமானத்தை பெருக்கிகொள்ளும் திரைத்துறையினர் மத்தியில் சினிமாவில் கிடைத்த லாபத்தை சினிமாவிலேயே போட்டு பரிசோதனை முயற்சி செய்து பார்ப்பவர் இவர் ஒருவர் மட்டும் தான்...அந்த வகையில் இவருக்கு நிகர் இவர் மட்டுமே. அந்த தைரியத்தில் அவரை விஞ்ச ஆள் இல்லை எனலாம்.
இன்னும் எத்தனை எத்தனையோ படங்கள், மனதை விட்டு நீங்காத காட்சிகள் சொல்லித் தீராதவை, கணக்கிட முடியாதவை, சொல்லிலும் அடங்காதவை.
மக்கள் மனதில் இருந்து மறைந்துவிடாமல் 65 ஆண்டுகள் சினிமாவில் இருப்பதே சவால் எனும்போது, உலக நாயகனாக திரையுலகில் மின்னிக்கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த நட்சத்திரம் மங்காமல் ஒளிவீசும் என்பதில் சந்தேகமில்லை.
எப்படிப்பட்ட பிரச்சனைகளும், விமர்சனங்களும், தோல்விகளும் வந்தாலும் அதற்கெல்லாம் துவண்டுவிடாத இந்த தனித்துவக் கலைஞன், 71 வயதிலும் வெற்றிகளை குவித்து வருகிறார். இப்படி சினிமாவிலேயே தொடர்ந்து உழைத்து வரும் கமலின் பயணம் இன்னும் தொடர வாழ்த்துகிறோம்!