
தமிழ் சினிமா வரலாற்றில், முக்கிய நட்சத்திரமாக தவிர்க்க முடியாத கலைஞராக விளங்குபார் கமல்ஹாசன். 5 வயதில் திரையுலகிற்குள் நுழைந்த இவர், இப்போது நடிப்புத்துறைக்கே புது சிம்ம சொப்பனமாக இருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக திரைவுலகில் நுழைந்த இவர் நடனக் கலைஞர், உதவி இயக்குநர் என வளர்ந்து நடிகராக தன்னை நிலைநிறுத்தி பிறகு இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் தடம் பதித்தவர்.
ஆனால் சினிமாவில் நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் கமல் சினிமாத்துறைக்கு வரவில்லை, இயக்குநராக வேண்டும் என்ற ஆவலுடன் தான் திரைப்படத்துறைக்குள் நுழைந்தார்.
ஆனால், அவர் மட்டும் இயக்குநாராகி இருந்தால், நல்ல திரைப்படங்கள் கிடைத்திருக்கும். ஆனால், சிவாஜிக்கு பிறகு சிறந்த நடிகர் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே கிடைக்காமல் போயிருக்கும்.
1987-ம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து சாதனை படைத்த படம் தான் ‘நாயகன்’. முக்தா சீனிவாசன், முக்தா ராமசாமி தயாரிப்பில், இளையராஜாவின் 400-வது படமாக வெளியான இப்படத்தில் நாசர், சரண்யா பொன்வண்ணன், நிழல்கள் ரவி, கார்த்திகா, வி.கே.ராமசாமி, டெல்லி கணேஷ், ஜனகராஜ், குயிலி ஆகியோர் நடித்திருந்தனர். அந்தக் காலத்தில் மும்பையில் நிழலுக தாதாவாக இருந்த வரதராஜன் முதலியாரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் பணிபுரிந்திருந்தார்.
தமிழ்நாட்டில் 214 நாட்கள் ஓடி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படம் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும் 3 தேசிய விருதுகளையும் வென்றது. ‘நாயகன்' படம் இன்றளவும் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருந்து வருகிறது.
இளையராஜாவின் இசை இந்த படத்திற்கு பிளஸ்பாயிண்ட்டாக அமைந்ததுடன் படத்தின் பாடல்களும், வசனங்களும் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்தன.
அந்த வகையில் சமீப காலமாக பழைய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகும் பட்டியலில் தற்போது இணைந்துள்ளது கமலின் ‘நாயகன்’ திரைப்படம். வரும் நவம்பர் மாதம் 6-ம் தேதி இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. அதாவது நவம்பர் 7-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் தனது 71-வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள நிலையில் அதை சிறப்பிக்கும் விதமாக 38 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நாயகன்’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான மெருக்கேற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகம் முழுவதும் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வீ.ஜே.சினிமாஸ் இப்படத்தை வெளியிடுகிறது. ‘நாயகன்’ திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதால் அவரது ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
இப்படத்துக்கு பின்பு கமல் - மணிரத்னம் இருவரும் இணைந்து பணிபுரிந்த படம்தான் ‘தக் லைஃப்’. நாயகன் படத்தில் 2-ம் பாகம் என்று சொல்லப்பட்ட நிலையில் அப்படம் பெரும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.