

சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் தொடங்கிய வார்த்தை சண்டைகள் பின்னாளில், பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. சில ஆண்டுகளாக நடிகர் விஜய்க்கும் ரஜினிகாந்திற்கும் இடையில் பனிப்போர் இருப்பதாக பொது தளங்களில் பேசப்பட்டு வந்துள்ளது. நடிகர் விஜய் ஒரு கட்சியை தொடங்கி, சட்டமன்ற தேர்தலில் நின்று முதல்வரும் ஆகிவிட்டார். அதன் பின்னர் பெரும்பாலான கேமராக்கள் ரஜினியின் பக்கம் திரும்பின.
சமீபத்தில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' என்ற ஒரு இயக்கத்தை தொடங்கியிருந்தார். இந்த இயக்கம் விஜய் கட்சிக்கு போட்டியாக தொடங்கப்பட்டுள்ளது என்று பலர் விவாதிக்க தொடங்கியிருந்தனர். ரஜினி விஜயின் மீது பொறாமைப்பட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து, ரஜினிகாந்த் யார் மீதும் எனக்கு பொறாமை இல்லை என்று ஊடகங்களுக்கு விளக்கம் அளித்து இருந்தார்.
தற்போது ஒரு ஊடகத்திற்கு ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அப்போது அவர் தொடங்கி இருந்த மக்கள் மேடை இயக்கத்தை பற்றியும் , அண்ணாமலை அரசியல் இயக்கம் தொடங்கிய நாளில் இவரும் தொடங்கியதை பற்றியும் கேட்கப்பட்டது.
லதா ரஜினிகாந்த் அதற்கு "நாங்கள் மக்கள் மேடை இயக்கத்தை முன்கூட்டியே தொடங்க திட்டமிட்டு இருந்தோம். அடுத்த நாள் என்ன நடைபெறப்போகிறது என்பது எங்களுக்கு தெரியாது. மார்ச் 7ஆம் தேதியே எங்கள் இயக்கம் தொடங்கியிருந்தது. அன்றே அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டிருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக தான் ஜூன் 5 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சிகள்.
அடுத்ததாக , விஜய் மீது ரஜினிக்கு பொறாமை இருப்பதாக பேசப்படுகிறது அது பற்றியும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "சமூக வலைதளங்கள் அதுபோன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி விட்டார்கள். ரஜினியின் தலைமுறையும் விஜய்யின் தலைமுறையும் வேறு வேறு அப்படி இருக்கும்போது இப்படி ஒரு பேச்சை உருவாக்கியது யார்? ரஜினியுடன் பழகி அனைத்தும் தெரிந்ததும் கூட இப்படி விஷமத்தனத்துடன் இருக்கிறார்கள்.
எப்படிப்பட்ட சமூகத்தில் நாம் இருக்கிறோம்? இதில் உண்மை என்ன என்பது கடவுளுக்கு தான் தெரியும். ரஜினிக்கு விஜயின் மீது பொறாமை என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்றாகும். ரஜினி கட்சி தொடங்குவதாக சொல்லிவிட்டு அரசியலுக்கு வரவில்லை. ஆனால்,விஜய் சொன்னபடி வந்துவிட்டார் என்கிற எண்ணம் ரஜினிக்கு துளியும் கிடையாது எங்கள் குடும்பத்திற்கும் அப்படிப்பட்ட ஒரு எண்ணம் இல்லை.
சமூக வலைதளங்கள் எல்லாம் இவ்வாறு மாற்றுகின்றன, அவர்கள் நச்சுத்தன்மை மிகுந்த ஒன்றாக மாறி வருகின்றனர். அனைவரின் கையிலும் போன் இருப்பதால் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பே கருத்து சொல்ல விரும்புகிறார்கள். ஆனால், சமூக வலைதளங்களில் தாக்கத்தினால் தான் விஜய் ஆட்சிக்கு வந்துள்ளாரா? என கேட்டால் எனக்கு அது பற்றி தெரியவில்லை.
ரஜினி ஒரு மிகச்சிறந்த தலைவர் , அவர் அரசியலுக்கு வராதது மிகப்பெரிய இழப்பாகும். அவர் சிங்கப்பூரை உயர்த்திய லீகுவாங் போல பல திட்டங்களை வைத்திருந்தார். என்னை பொறுத்தவரை அவர் அரசியலுக்கு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று வருத்தப்படுகிறேன். தவிர அவர் வரவில்லை என்று வருத்தப்படவில்லை.
ரஜினிக்கு தமிழ்நாடு பற்றி மிகப்பெரிய கனவுகள் இருந்தது. மாநிலத்தின் வளர்ச்சி பற்றி நிறைய தொலைநோக்கு பார்வையும் இருந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்ததால் அரசியலில் இருந்து விலகும் முடிவுக்கு தள்ளப்பட்டோம். அவரது எண்ணம் எல்லாம் எனக்கு தெரியும். அவர் அரசியலில் இல்லாதது மிகப்பெரிய இழப்பு தான் என்று லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.