

இந்த திரைப்படத்தை பார்க்க ஆரம்பித்தால் , நீங்கள் விழுந்து விழுந்து சிரிப்பது உறுதி. அதேநேரம் இவ்வளவு பழைய திரைப்படத்தில் இவ்வளவு ஆச்சர்யமான விஷயங்கள் உள்ளதா? என்று நீங்கள் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள். இந்த திரைப்படம் வெளியான ஆண்டு 1941 , ஆனால் , அதன் காட்சிகள் 2026 ஆம் ஆண்டிற்கும் பொருந்திப் போவது தான் சிறப்பு. இவ்வளவு சிறப்புமிக்க திரைப்படத்தை இயக்கியவர்கள் ஏவிஎம் நிறுவனரான மெய்யப்பன் மற்றும் A.T. கிருஷ்ணசாமி .
நடிகர்கள்: டி.ஆர்.ராமச்சந்திரன் , காளி. என்.ரத்னம் , கே.சாரங்கபாணி, பத்மா , சி.டி. ராஜகாந்தம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதில் நடித்துள்ள அனைவரும் எம்.ஜி.ஆர் , சிவாஜி காலத்திற்கும் முந்தியவர்கள் என்பதால் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதே நேரம் இந்த திரைப்படத்தை பார்ப்பவர்களுக்கு புதிய முகங்கள் என்று தோன்றாது.
திரைக்கதை:
படத்தில் இரண்டு சபாபதிகள் , ஒருவர் பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணிக்கம் முதலியாரின் மகன்(டி.ஆர்.ராமச்சந்திரன்) , இன்னொரு சபாபதி(காளி.N.ரத்னம்) அவர்கள் வீட்டு வேலைக்காரன். நண்பர்களுடன் சேர்ந்து பள்ளியில் சேட்டை செய்து , வகுப்பாசிரியரை கலாய்த்து திட்டும் வாங்கும் மாணவனாக ஒரு சபாபதி இருப்பார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கூட பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியாகவும் , வகுப்பறையில் எவ்வளவு அலப்பறை எல்லாம் செய்துள்ளனர் என்று இந்த திரைப்படத்தின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
வீட்டு வேலைக்காரனான அப்பாவி சபாபாதிக்கு விவரம் ஒன்றும் தெரியாது. 2 கால் ரூபாய் நாணயங்களை கையில் கொடுத்து பாதாம் அல்வாவும், முந்திரி பக்கோடாவும் வாங்கி வரச் சொன்னால், கடை வரை சென்று விட்டு எந்த கால் ரூபாய்க்கு பாதாம் அல்வா? எந்த கால் ரூபாய்க்கு முந்திரி பக்கோடா? வாங்க வேண்டும் என்று புரியாமல் , எதையும் வாங்காமல் வீட்டுக்கு வரும் புத்திசாலி சபாபதி அவன்.
ஒருமுறை மாணவன் சபாபதி , "சீட்டு கட்டு விளையாட ஒரு கை குறைக்கிறது , ரோட்டில் செல்லும் யாரையாவது அழைத்து வா" என்று வேலைக்காரனிடம் சொல்ல , அந்த வழியே சென்ற சபாபதியின் பள்ளி தமிழ் வாத்தியரை அழைத்து வர ஒரே ரகளையான காட்சியாக இருக்கும். படம் முழுக்க தன் முட்டாள் தனத்தால் வேலைக்கார சபாபதியும், தன்னை அறிவாளியாக காட்ட நினைக்கும் மாணவன் சபாபதியும் சிரிக்க வைப்பார்கள்.
பரீட்சையில் பெயிலாகும் சபாபதி , தூக்கு மாட்டுவதை போல நடித்து அப்பா, அம்மா கோவத்தில் இருந்து தப்பிக்கிறார். அதன் பின்னர் திருமணம் ஆனதும் , அவரது படித்த மனைவியிடம் இவர் சேட்டைகள் பலிக்காமல் , அவள் கற்றுக் கொடுக்க இவர் படிக்க ஆரம்பிக்கிறார் , அதே போல வேலைக்கார சப்பாபதியும் அவரது மனைவியினால் கல்வி அறிவு பெறுகிறார். படம் முழுக்க சுவாரசியம் மிகுந்த நகைச்சுவைக் காட்சிகள் நிரம்பி இருக்கும்.
இந்த திரைப்படத்தில் நகைச்சுவை மட்டுமல்ல , 1941 ஆம் ஆண்டு வாக்கிலே பணக்கார பெண்கள் படித்துள்ளதை மட்டுமல்லாமல் , வீட்டு பணிப்பெண்ணும் படித்துள்ளதை காட்டுகிறது. ஒரே வகுப்பறையில் கோர்ட் சூட் போட்ட பணக்காரர்களும் , அரை டிரவுசர் போட்ட எளிய பிள்ளைகளும் சமத்துவமாக படிப்பதை காணலாம். அதே போல ஓட்டுக்கு அன்பளிப்பு கொடுக்கும் வழக்கம் அந்த காலத்தில் கூட உண்டு என்று காட்சிப்படுத்தியுள்ளனர்.
OTT தளங்கள்: Amazon Prime video, Youtube தளங்களில் காணக் கிடைக்கிறது.