

அறிமுக இயக்குனர் சராஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனு மோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்துள்ள படம் பாரிஸ் கஃபே. (parish cafe) குரு சோமசுந்தரமும் அனு மோலும் கணவன் மனைவிகளாக மிகவும் அன்பாக வாழ்ந்து வருகிறார்கள். குரு சோமசுந்தரம் அரசு மருத்துவர். ஒருநாள் பிரான்ஸ் செல்கிறார் அங்கே உள்ள பாரிஸ் கேப் என்ற இடத்தில் உணவருந்தும் போது ஒரு காதல் ஜோடியை பார்க்கிறார்.
அந்த காதல் ஜோடியை பார்த்து பேசும் சமயத்தில் அவருக்கு அவர் மனதில் கடந்த காலத்தில் நடந்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. அந்த விஷயம் ஒரு உறுத்தலாக அவருக்கு இருக்கிறது. இந்த விஷயத்தை தனது மனைவியான அனுமோலிடம் சொல்கிறார். தனது மனைவியிடம் சொன்ன உடன் மனைவி கோபித்துக் கொள்கிறார். "நீ தவறானவன் உன்னுடன் வாழ முடியாது "என்று பிரிந்து செல்கிறார். மீண்டும் சில நாட்கள் கழித்து அனு மோலை சந்திக்கிறார் குரு சோமசுந்தரம்.
" நீ செய்த தவறுக்கு இப்போது பிராயசித்தம் செய் சில ஆண்டுகளுக்கு முன்னால் நீ செய்த தவறு இப்போது திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு காலம் தந்திருக்கிறது சரி செய்" என்கிறார். குரு சோமசுந்தரமும் இதை ஏற்றுக்கொண்டு தான் மருத்துவராக இருந்தபோது செய்த ஒரு தவறை சரி செய்ய இப்போது செல்கிறார். அந்தத் தவறு என்ன? அதனால் சமகாலத்தில் என்ன பிரச்சனை வந்தது? என்று சொல்கிறது இப்படம்.
ஒன் லைன் ஓகே...இன்று தமிழ்நாட்டில் ஜாதி மாறி திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் சிலர் ஆணவக் கொலை என்ற பெயரில் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. சமகாலத்தில் ஊடகங்களில் பேசப்படும் ஒரு கருத்தை மையப்படுத்தி இந்த படம் எடுத்ததற்காக டைரக்டரை நாம் பாராட்டலாம்.
எடுத்துக் கொண்ட ஒன்லைன் கண்டிப்பாக காலத்திற்கு தேவையான, அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு தேவையான ஒன்று தான்.சொன்ன விதம் பரவாயில்லை ரகம் தான். ஒன்லைன் தெளிவாக இருக்கிறது. ஆனால் சொன்ன விதத்தில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் தேவைப்படுகிறது.
அனு, குரு சோமசுந்தரம் இடையே நடைபெறும் பிணக்குகள் சரியாக சொல்லப்பட்டிருந்தாலும், இரண்டாம் பாதியில் ஆணவக் கொலை நடப்பதற்கான காரணங்களை உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முழுமையாக இயக்குனர் அணுகவில்லை.தமிழ்நாட்டில் நடக்கும் பல ஆணவக் கொலைகளுக்கு உளவியல், சமூக காரணங்கள் இரண்டுமே முக்கிய பங்கு வைக்கின்றன. இதை இயக்குனர் புரிந்து எடுத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
நடிப்பு...குரு சோமசுந்தரம் தேசிய விருது பெற்ற நடிகர். பல படங்களில் இவருடைய நடிப்பு பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிற மொழிகளிலும் நன்றாக நடித்து வருகிறார். அனுமோல் அயலி, தற்போது ஜியோ ஸ்டாரில் வெளிவரும் ஹார்ட் பீட் தொடர்களில் நமது பெண்களின் மனதை கொள்ளை கொள்ளும் நடிகை.
இந்த இருவரும் இணைந்து நடித்திருப்பதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாக இருந்தது. நடிப்பை பொறுத்தவரையில் இவர்கள் இருவருமே எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை. ஒவ்வொரு காட்சியிலுமே யார் நடிப்பை சிறந்த சிறப்பாக தருவது என்று போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளார்கள்.
தவறு செய்து விட்டோம் என்று குற்ற உணர்ச்சியில் சிக்கித் தவிக்கும் போது கணவராக நடிக்கும் குரு சோமசுந்தரம் ஸ்கோர் செய்கிறார். கணவனின் குற்ற உணர்ச்சியை சரி செய்யும் இடத்தில் மனைவி அனுமோல் ஸ்கோர் செய்கிறார். படத்தின் பலம் என்றால் இவர்கள் இருவரும் தான். அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா இவர்களின் நடிப்பு மிகவும் கேஷுவலாக இருக்கிறது.
இசை -ஒளிப்பதிவு..'கே' யின் இசை முதல் பாதியில் சிறப்பாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் சுமாராக இருக்கிறது. இரண்டையும் பேலன்ஸ் செய்து இசை அமைத்திருந்தால் இந்த படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம். ஒளிப்பதிவை பொருத்தவரையில் பாரிஸ் நகரங்களில் காட்டப்படும் இடங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது. கிளைமாக்ஸ் காட்சிகளில் இன்னும் ஒளிப்பதிவில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
பாரிஸ் கஃபே...ஓஹோவா? ஓகேவா? படத்தின் ஒன் லைன் தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனையை சொல்வதால் நம்மை ஓரளவு ஈர்க்கிறது. ஆனால் சொன்ன விதம் சுவாரஸ்யம் கொஞ்சம் குறைவாக இருப்பதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை. ஒன்லைன், குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் நடிப்பு இரண்டும் ஓஹோ சொல்லப்பட்டு திரைக்கதை ஓஹோவும் ஓகேயும் கலந்து வந்துள்ள படம் பாரிஸ் கஃபே.
ஆணவக் கொலைக்கு எதிரான சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோலின் அழுத்தமான நடிப்பில் உருவாகியுள்ள பாரிஸ் கஃபே படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ்களைத் துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம்.