காதலர் தினத்தன்று சீமான் இயக்கவிருந்த ‘காதல் ஒழிக’ படத்தின் போஸ்டரை வெளியிட்ட பார்த்திபன்!
காதலர் தினமான இன்று 25 ஆண்டுகளுக்கு முன் சீமான் இயக்கவிருந்த படமான 'காதல் ஒழிக' படத்தின் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார் நடிகர் பார்த்திபன்.
தனித்துவமான படங்களை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்புபவர் பார்த்திபன். சினிமா துறையில் நடிகராக, தயாரிப்பாளராக, இயக்குனராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கும் படங்கள் தனித்துவத்திற்கு பஞ்சம் இல்லை என்றாலும், ஒருசில படங்களுக்கே ரசிகர்கள் நல்ல வரவேற்பை தருவர். ஆனால், இவரின் பல படங்கள் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தமானவை.
இந்த நிலையில்தான் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தான் நடிக்கவிருந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். இப்படத்தை நடிகரும் அரசியல் வாதியுமான சீமான் இயக்கவிருந்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும் செய்ய ஒப்பந்தமாகி இருந்தார். இந்தப் படத்திற்கான போஸ்டரை இத்தனை ஆண்டுகள் கழித்து இன்றைய தினத்தில் பார்த்திபன் வெளியிட்டிருக்கிறார்.
மேலும் அதில் பதிவிட்டிருந்தாவது, “காதல் ஒழிக ' இன்றைய அரசியலில் தவிர்க்க இயலா கர்ஜனை நண்பர் சீமான் அவர்கள் இயக்க நான் நடிப்பதற்காக கால் நூற்றாண்டுக்கு முன் இதே நாளில் வைக்கப்பட்ட தலைப்பு. படம் கைவிட பட்டாலும் நட்பு அப்படியே ஒருவரை ஒருவர் ரசித்தபடி தொடர்கிறது. என் சில கவிதைகளை அவர் சிலாகித்து மேடையில் பாராட்டும் போது அந்தக் கவிதைகளில் உள்ள கருத்து விதைகளில் சில புது தளிர்கள் துளிர்க்கச் செய்கிறது.
நானும் ஒரு ஒலி வாங்கிப் போல் அவர் பேச்சை மிக அருகில் இருந்து ரசிப்பேன் . இருவரின் அரசியலும் தத்துவமும் கருத்தும் விருப்பமும் வெவ்வேறாக இருப்பினும், 'கடவுள் இல்லை பெரியார் 'பெரியாரே இல்லை' - சீமான் அவரவரது குரலை உரக்க ஒலிக்க செய்வதாகவே நான் பார்க்கிறேன். நானும் அப்படியே எனக்கு சரியெனப் பட்டதை பட்டவர்த்தனமாக (அரசியல் +இன்ன பிற இலாப நோக்கின்றி) பேசுகிறேன்.
புரிந்தோர் பிஸ்தாக்கள்
புரியாதோர் பிஸ்கோத்துகள்!
சரி காதலுக்கு வருவோம் !
வருவதும் போவதும் வாடிக்கையே காதலுக்கு.
வருவதெல்லாம் போவதும் வாடிக்கையே சாதலுக்கு!
என்றோ மிடித்துப்போனது இன்று பிடிக்காமல் போய் சீமான் சுவரில் பெரியார் புகைப்படம் போல தான் இந்தப் பாழாய் போன காதலும் .
‘ என் இதயத்தில் அவள் அடித்து விட்டுச் சென்ற ஆணியில் கூட அவள் புகைப்படத்தைதான் மாட்டி விட்டிருக்கிறேன்’ என என் நண்பர் ஒருவர் எழுதியதைப் போல….
போன வருடம்
போன காதல்
வேறு பூமியில்
வேர் பிடித்துப் பூத்துக் குலுங்கும் .-அது
புரியாத-இன்னும்
பிரியாத -உயிர்வரை
பிரிந்திடாத ஒரு
காதலை
‘காதல் ஒழிக’ என
இக் காதலர் தினத்தில்
கொண்டாடும்!- புதிதாய்
பூத்தவர்கள்
பூத்தரேக்குலு (pootharekhulu ) சுவைத்து
கொண்டாட்டும்,
தோத்தவர்கள்
காத்திருங்கள்…………………..
அவளை/அவனை
சுமந்து கர்ப்பமான இதயத்தில்
கன்றாவி கவிதையாவது பிறக்கலாம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா காதல் உய்க்கும் - பின்
பொய்க்கும்.” என்ற ஒரு பெரிய பதிவை விட்டிருந்தார்.