நடிகர் சிம்பு தனது 50வது படத்தை தானே இயக்க முடிவு செய்து இருக்கிறார்.
திரை உலகில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகர்களில் முக்கியமானவர் சிம்பு. அதே நேரம் தனது சிறந்த நடிப்பினால் தமிழ்நாட்டில் தனக்கென்று தனி ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல திரைப்பட வெளியீட்டிற்கு பிறகு சிம்பு மவுனம் காத்து வந்தார். அடுத்து எந்த படத்தில் நடிக்கிறார் என்ற எந்த தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்புவின் 48வது திரைப்படம் வெளியாகும் என்றும், இந்த படத்திற்காக உடலை பக்குவப்படுத்துவதற்காக ஜிம்முக்கு சென்று ஒர்க் அவுட் செய்து படத்திற்கு தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் பத்து தல திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு தனது 50வது படத்திற்கான பணியை தொடங்கி விட்டதாக சினிமா வட்டாரங்களில் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 48வது படத்திற்கு ஒப்பந்தமாக இருக்கக்கூடிய நிலையில் தனது 50வது படத்தை தானே இயக்கி, நடிக்க சிம்பு முடிவு செய்திருக்கிறாராம். இதற்காக ஸ்கிரிப்ட் எழுதும் பணியை செய்து வந்ததாகவும், தற்போது இப்படி நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வண்ணம் கதையை எழுதி வருகிறாராம் சிம்பு. இதற்கான பணிகள் விரைவில் முடிவடையும் என்றும் அதன் பிறகு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஜனவரி மாதம் முதல் நடிக்க இருப்பதாகவும் நடிகர் சிம்பு தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது.
ஏற்கனவே சிம்பு மன்மதன் திரைப்படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதி இருந்தார். மேலும் வல்லவன் திரைப்படத்தை இயக்கியும், நடித்தும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.