
குறுகிய காலத்திலேயே தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக முன்னேறியவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடந்த 10 வருடங்களில் அசுர வளர்ச்சி கண்ட நாயகர்களின் ஒருவராக வலம் வரும் இவர், அமரன் வெற்றிப்படத்தை தொடர்ந்து தற்போது 100 கோடி வசூல் கொடுத்த நாயகனாகவும் மாறிவிட்டார். தற்போது இவர் பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள அதிரடித் திரைப்படம் ‘மதராஸி’. சிவகார்த்திகேயனின் 23-வது படமான 'மதராஸி' தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா அளவில் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு அவர் கடைசியாக நடித்த அமரன் படம் 300 கோடிக்கு மேல் வசூலித்து அவருக்கு ஒரு பெரிய பெயரை பெற்று கொடுத்தது. அதேபோல் ஏஆர் முருகதாஸ் கடைசியாக சல்மான்கானை வைத்து சிக்கந்தர் என்ற பாலிவுட் திரைப்படத்தை எடுத்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்ததை விட படுதோல்வியை சந்தித்தது.
பாலிவுட்டிலும் சரி கோலிவுடிலும் சரி கடைசியாக அவர் வெற்றி கொடுத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. எனவே இந்த முறை வெற்றிப்படத்தை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள முருகதாஸ் வெற்றி நாயகன் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
ஸ்ரீலக்ஷ்மி மூவீஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்க இவர்களுடன் விக்ராந்த், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக வந்து மிரட்டிய வித்யூத் ஜம்வால் இந்த படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மிரட்ட வருகிறார்.
ஆக்சன் திரில்லர் பானையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இப்போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது என்றே செல்லலாம்.
இப்படத்தின் தமிழக உரிமையை வேல்ஸ் நிறுவனம் சுமார் 40 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதேபோல், அந்த படத்தை பிரபல நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரூ.23 கோடி கொடுத்து ஓடிடி உரிமையை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படம் வரும் 5-ம்தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தற்போது படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு முன் இந்த படத்தின் கலக்கலான பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது செகண்ட் சிங்கிளான வழியிறேன் பாடல் இன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதன்படி, இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நாளை (ஆக்ஸ்ட் 24ம் தேதி) நடைபெறும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.