சினிமா டப்பிங் கலைஞர்கள் நடத்திய கிரிக்கெட் போட்டி! 

சினிமா டப்பிங் கலைஞர்கள் நடத்திய கிரிக்கெட் போட்டி! 

–லதானந்த் 

 தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சிக் கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் (SICTADAU) டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் பிரீமியர் லீக்  (DPL) SICTADAU கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.  

அவெஞ்சர்ஸ், டப்பிங் சூப்பர் கிங்ஸ், டோலிவுட் டைகர்ஸ், வலிமை 11 ஆகிய நான்கு அணிகள் இப்போட்டியில் மோதின. இரண்டு நாட்கள் நடைபெற்ற பரபரப்பான போட்டியின் முடிவில் வலிமை 11 அணி வெற்றிபெற்றது.   

டோலிவுட் டைகர்ஸ் இரண்டாவது இடம், டப்பிங் சூப்பர் கிங்ஸ் மூன்றாவது இடம் மற்றும் அவெஞ்சர்ஸ் நான்காம் இடம் பெற்றனர்.  

தென்னிந்திய திரைப்படத் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தால், அதன் உறுப்பினர்களுக்காக இந்தக் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.   

2018-ம் ஆண்டு முதல், டப்பிங் யூனியன் உறுப்பினர்களுக்காகத் தலைவர் டத்தோ ராதாரவி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். குறிப்பாக, மருத்துவ முகாம்கள், யோகா வகுப்புகள், ஆங்கிலம் கற்பித்தல், உள்ளிட்டவை வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.  

உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க SICTADAU டிபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது நடத்தப்பட்டது. கோவூரில் உள்ள டென் ஸ்போர்ட்ஸ் வில்லேஜில் நடைபெற்ற இந்தப் போட்டிகள், நடுவர்கள் மற்றும் வர்ணனையாளர்களுடன் சர்வதேசப் போட்டிகளுக்கு இணையாக நடத்தப்பட்டன.  

அரவிந்த் ஆகாஷ் மற்றும் பாஸ்கி ஆகியோர் முதல் போட்டியைத் தொடங்கி வைத்தனர். டப்பிங் சூப்பர் கிங்ஸ் மற்றும் வலிமை 11 அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியை ராதாரவி டாஸ் போட்டு துவக்கி வைத்தார். இதில் வலிமை 11 வென்றது.  

வீரர்கள் தங்களது முழு முயற்சியோடு விளையாடுமாறு பாஸ்கி கூறினார். பலர் இந்த ஆட்டத்தைப் பார்ப்பதால், திறமை வாய்ந்தவர்கள் தேசிய அளவில் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கலாம் என்று அவர் கூறினார்.  

அடுத்த போட்டியில் டோலிவுட் டைகர்ஸ் மற்றும் அவெஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் டோலிவுட் டைகர்ஸ் வெற்றி பெற்றனர். 

பின்பு டப்பிங் சூப்பர் கிங்ஸ் மற்றும் அவெஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் டப்பிங் சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றனர்.  

டோலிவுட் டைகர்ஸ் மற்றும் வலிமை 11 இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில், வலிமை 11 வெற்றிபெற்றுக் கோப்பையை தட்டிச்சென்றனர். கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.  

இவ்விழாவுக்குச்சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஆர் கே செல்வமணி, தயாரிப்பாளர் கே ராஜன்,நடிகர் பிரஷாந்த்,இசையமைப்பாளர் சங்கத்தின் தலைவர் தினா,மேலாளர்கள் சங்கத்தின் செயலாளர் மற்றும் சம்மேளனத்தின் பொருளாளர் சுவாமிநாதன், டெக்னிஷியன்ஸ் யூனியனைச் சேர்ந்த ஸ்ரீதர்,மற்றும் ஸ்டண்ட் யூனியனைச் சேர்ந்த தவசி ஆகியோர் கலந்துகொண்டனர்.  

இந்தப் போட்டியை நடத்தியதற்காக டப்பிங் யூனியனை செல்வமணி வெகுவாகப் பாராட்டினார்.  

''நானும் டப்பிங் யூனியன் உறுப்பினர்தான், என்னை ஏன் போட்டியில் பங்கேற்க அழைக்கவில்லை?" என்று நடிகர் பிரஷாந்த் செல்லமாகக் கோபித்துக்கொண்டார். இது ஒரு வரலாற்று ஆரம்பம் என்று கூறிய அவர், அனைவரையும் வெகுவாகப் பாராட்டித் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

தயாரிப்பாளர் கே ராஜன், அவருக்கும் ராதாரவிக்கும் இடையேயான நட்பைப் பற்றியும், அவரது முதல் கிரிக்கெட் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். மேலும், அடுத்த போட்டியை ஸ்பான்சர் செய்யத் தான் தயாராக இருப்பதாகவும் ராஜன் தெரிவித்தார்.  

"இது வெறும் துவக்கம் தான், தற்போது நமக்குள் நடைபெற்ற இந்தப் போட்டி, விரைவில் இந்திய அளவில் நடைபெறும்" என்று ராதாரவி கூறினார்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com