இன்னமும் வேண்டும் கம்பீரம் - பட்டத்து அரசன்!

திரைவிமர்சனம்!
பட்டத்து அரசன்
பட்டத்து அரசன்
ராகவ்குமார்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சமீப கால தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகள் என்றால் இரண்டு சப்ஜெக்ட்டை முக்கியமாக எடுத்து கொள்கிறார்கள் டைரக்டர்கள்.ஒன்று ஜல்லிக்கட்டு மற்றொன்று கபடி. இந்த கபடியையும் குடும்ப செண்டிமெண்டையும் மைய் யமாக வைத்து தஞ்சை மாவட்ட பின்னணியில் பட்டத்து அரசன் படம் தந்துள்ளார் சற்குணம். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது

காளையார்கோவில் ஊரில் உள்ள மிகப்பெரிய கபடி வீரர் பெரியவர் பொத்தாரி (ராஜ்கிரண் ) இவரது பேரன் சின்னதுரை (அதர்வா ). பழைய குடும்ப பகையால் தனது பேரன் சின்ன துரையை வெறுக்கிறார் தாத்தா பொத்தாரி.

இவரின் நண்பர் (ரவி காலே ) உடன் இருந்தும் பொத்தாரி மீது பொறாமை கொண்டவராக இருக்கிறார்.கபடி வீரராக இருக்கும் மற்றொரு பேரன் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார். இந்த அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார் பேரன்.

ஊர் சபை பொத்தாரியையும் அவர் குடும்பத்தையும் அவமானப்படுத்துகிறது. இந்த அவமானம் போக்க ஊருக்கு எதிராக தங்கள் குடும்பத்துடன் கபடி விளையாடி வெற்றி பெற்று களங்கம் துடைப்பேன் என சபதம் செய்கிறார் சின்னதுரை. முதல் பாதி சென்டிமெண்ட் இரண்டாம் பாதி கபடி என்று நகர்கிறது படம்.சென்டிமெண்ட் ஓரளவு ஈர்த்தாலும், கபடி விளையாட்டுடன் இது இணையும் போது பெரிதாக ஒர்க் அவுட் ஆக வில்லை.

Atharva
Atharva

வயதான பெரியவர் முதல் சிறு பையன் வரை குடும்பமாக விளையாடுபவர்கள் இளைஞர்களா க விளையாடும் ஒரு கபடி டீமை எதிர் கொள்ளும் போது எடுக்கும் பயிற்சிகளை சரியாக சொல்லவில்லை. பொத்தாரி டீமே களத்திற்கு சென்றுதான் கபடி விதிகளை தெரிந்து கொள்கிறது. ஊகிக்க முடிந்த திரைக்கதை நகர்வுகளு ம் , படத்தின் முடிவும் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. ராஜ்கிரண் மிக சிறப்பான நடிப்பை தந்துள்ளார்.

உள்ளுக்குள் பாசம் வைத்து பேரனிடம் கோபம் கொள்வதும் கபடி களத்தில் கம்பீரமாக நிற்கும் போதும் இவரை தவிர வேறு யாரும் இந்த நடிப்பை தர முடியாது என்று புரிய வைக்கிறார். அதர்வாவின் நடிப்பு ஒரு சாராசரி இளைஞனின் ஆதங்கத்தை சரியாக சொல்கிறது. ஆஷிகாவிற்கு இது முதல் படம் என்பதை தவிர சொல்லும்படி வேறு எதுவும் இல்லை. ஜிப்ரானின் இசையில் பாடல்களின் சப்தம் அதிகமாக உள்ளது.

சிறந்த படங்களை தந்த சற்குணத்திற்கு எண்ணிக்கையை அதிகரி க்கும் படமாக மட்டுமே பட்டத்து அரசன் இருக்கும். பட்டத்து அரசன் -இன்னமும் வேண்டும் கம்பீரம்.

logo
Kalki Online
kalkionline.com