நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து மாஸ் படங்களின் மூலமாக தமிழ் சினிமாவில் யாரும் அசைக்கமுடியாத ஒரு ஜாம்பவானாகவே இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் தன்னுடைய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதாவது தளபதி 69 படத்துடன் தான் சினிமாவில் இருந்து விலகி முழுநேர தீவிர அரசியலில் ஈடுபட போவதாக கூறியிருந்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரியளவிலான ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் GOAT படத்தின் அப்டேட்டை குறித்து விவரங்கள் தெரிவிக்கும்படி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். ரசிகர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் வெங்கட் பிரபு, வரும் பண்டிகை தினங்களையொட்டி GOAT படத்தின் மிகப்பெரிய அப்டேட் நிச்சயமாக வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.
GOAT திரைப்படம்:
நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘GOAT’ இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் நடிகர் விஜய், மீனாட்சி சவுத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துவருகின்றனர் அதோடு விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளது இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. டைம் டிராவலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கதாப்பத்திரங்களில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு ரஷ்யாவின் மாஸ்கோவில் துவங்கியுள்ளது. அதோடு அடுத்தக்கட்ட சூட்டிங் மாஸ்கோவில் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு மேல் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை உட்பட பல பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது மாஸ்கோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மேலும் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
இந்த திரைப்படத்திற்காக வெங்கட் பிரபு மிகவும் தீவிரமாக பட வேலைகளை தொடர்ந்து திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில் GOAT படத்தின் அப்டேட் குறித்த வெங்கட் பிரபுவின் இந்த பேட்டி ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இயக்குநர் வெங்கட் கொடுத்த அப்டேட்:
இயக்குநர் வெங்கட் பிரபு படம் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் வலிமையான படமாக உருவாகி வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது 5 - 6 நிறுவனங்களுடன் ‘சிஜி’ வேலைபாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், தான் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ள விஎஃப்எக்ஸ் நிறுவனத்துடன் தான் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைபாடுகள் எத்தனை காலம் எடுத்துக் கொள்ளும் என்பதை பொறுத்துதான் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தீர்மானிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் வெறும் போஸ்டர்களை மட்டும் வெளியிட்டு படத்தின் அப்டேட் என்று கூறுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், அதோடு வரும் பண்டிகை காலத்தையொட்டி படத்தின் மிகப்பெரிய அப்டேட்டை வெளியிட உள்ளதாகவும், அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு மற்றும் நடிகர் விஜயின் கூட்டணியில் அமைந்துள்ள இந்த ‘The greatest of all time’ படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.