

எப்படிச் சாத்தியமானது இந்த சுயம்வரம் படம்?
ஒரு படத்தை எடுத்து முடிக்க குறைந்தது 6 மாதங்களாவது ஆகும். ஆனால், ஒரு படத்தை வெறும் 24 மணி நேரத்தில் எடுத்து முடித்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்! 24 மணி நேரத்திற்குள் எப்படி இப்படத்தை எடுத்து முடித்திருப்பார்கள், அது என்ன படம் என்று பார்ப்போமா?
சினிமா உலகில் எவ்வளவோ சாதனைகள் படைக்கப்பட்டாலும் பல சாதனைகள் பற்றி வெளியே தெரிவதே இல்லை. அதுவும் தமிழ் சினிமா உலகிலேயே எண்ணற்ற சாதனைகள் வெளியே தெரியாமல்தான் இருக்கின்றன. 1999ம் ஆண்டு எடுக்கப்பட்ட சுயம்வரம் என்றப் படம் தான் 24 மணி நேரத்திலேயே படமாக்கப்பட்ட படமாகும்.
பொதுவாக ஒரு படத்தின் சூட்டிங் மட்டுமே குறைந்தது நாற்பது நாட்களுக்கு நடைபெறும். அதற்காக பெரிய அளவில் பல மாதங்களாக ஏற்பாடுகளும் நடக்கும். ஆனால், சுயம்வரம் படத்தை 24 மணி நேரத்திற்குள் எடுத்து முடித்துவிட்டார்கள். எப்படி இது சாத்தியமானது?
சுயம்வரம் படம்: 10 இயக்குநர்களின் கூட்டு முயற்சி
இதற்காக 10 இயக்குநர்கள், 10 ஒளிப்பதிவாளர்கள் மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் ஒன்றிணைந்தனர். ஆம்! இப்படத்திற்காக மொத்தம் 10 Units பிரிக்கப்பட்டன. ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஒட்டுமொத்தப் படமும் ஒரே நாளில் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த 24 மணி நேர காலக்கெடுவுக்குள் கதையை முடிப்பது சுலபமாக இருந்தது. மேலும், உடை மாற்றுவது, மேக்கப் முழுவதுமாக கலைத்து மீண்டும் போடுவது போன்ற சிரமங்களும் இல்லை.
சத்யராஜ், பிரபு, கார்த்திக், அர்ஜுன், ரம்பா, ரோஜா என அன்றைய முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் இந்த முயற்சியில் பங்களித்தனர். சம்பளம் கூட வாங்காமல் அனைவரும் சேர்ந்தே இந்த அசாத்தியமான சாதனையை நிகழ்த்த ஒன்றிணைந்தார்கள்.
கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த சுயம்வரம் படம்
இந்த முயற்சியானது 'கின்னஸ் உலக சாதனை' புத்தகத்தில் இடம் பிடித்தது. ஒரு படம் திட்டமிட்டபடி 24 மணிநேரத்திற்குள் முடிக்கப்பட்டது என்பது உலக சினிமா வரலாற்றிலேயே ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. என்னத்தான் கலைஞர்கள் வேகமாக செயல்பட்டாலும், தொழில்நுட்பமும், இயற்கையும் எந்தவித கோளாறும் கொடுக்காமல் ஒத்துழைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது வானிலை மாற்றம் போன்ற எந்தத் தடையும் இன்றி, ஒட்டுமொத்தக் குழுவும் ஒரு விநாடி கூட வீண் செய்யாமல் பணியாற்றியதுதான் இதன் வெற்றிக்கு முக்கியக் காரணம். 24 மணி நேரத்தில் எத்தனை கலைஞர்கள் உணவருந்தினார்கள், எத்தனை பேருக்கு உடல்நல கோளாறுகள் ஏற்பட்டது என்றுகூட தெரியவில்லை. ஆனால், நிச்சயம் இந்த அசௌகரியங்கள் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இப்படம் வெளியாவதற்கு முன்பே தயாரிப்பாளர்கள் கின்னஸ் நிறுவனத்திற்குத் தகவல் தெரிவித்து, அவர்கள் முன்னிலையில் படப்பிடிப்பையும் நடத்தினார்கள். இதனையடுத்து படத்தொகுப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் மிக வேகமாகவும் நேர்த்தியாகவும் முடிக்கப்பட்டன.
இப்படி ஒரு நாளைக்குள் படப்பிடிப்பை முடித்து, தமிழ் சினிமா அதிவேகமாக இயங்கும் சினிமா என்பதோடு தமிழ் சினிமாவின் ஒற்றுமையையும் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது இம்முயற்சி. பல இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் ஈகோ பார்க்காமல், தமிழ் சினிமாவின் கௌரவத்திற்காக கைகோர்த்தது பிற சினிமா உலகுக்கு இன்றும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.
'சுயம்வரம்' திரைப்படம், தொழில்நுட்ப வசதிகள் இன்று இருப்பது போல் இல்லாத காலத்திலேயே எடுக்கப்பட்டது. மனித முயற்சியும் திட்டமிடலும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
இந்த கட்டுரையை வாசிப்பதன் மூலம், திட்டமிடல் மற்றும் கூட்டு முயற்சி இருந்தால் எந்தவொரு கடினமான இலக்கையும் குறுகிய காலத்தில் அடைய முடியும் என்ற உத்வேகத்தையும், தமிழ்சினிமாவின் வரலாற்றுப் பெருமையையும் நீங்கள் உணர்வீர்கள்.