ப்ரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகவிருக்கும் ட்ராகன் படத்தில் நடிக்கும் இருவர்தான் அடுத்த கவுண்டமணி செந்தில் என்று பேசியிருக்கிறார் ட்ராகன் பட இயக்குநர்.
தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின்மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப், தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஜெயம்ரவி நடித்த கோமாளி படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், அப்போது அந்தப் படத்தின் இயக்குனரை அவ்வளவாக யாரும் கண்டுக்கொள்ளவில்லை. அதன்பின்னர் லவ் டுடே படத்தை இயக்கி நடித்திருந்தார் பிரதீப். அப்படம் தமிழ்நாடு முழுவதும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதன்பின்னர் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ப்ரதீப் நடிக்கும் டிராகன் படம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் ட்ராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசியிருக்கிறார்.
அதாவது, “படத்தில் நடித்த அனைவரையும் நான் ஒரே மாதிரிதான் நடத்தினேன். படத்தில் வி.ஜே. சித்து மற்றும் ஹர்ஷத் நடிக்க காரணம் உள்ளது. அவர்களுக்கு இரண்டு லட்சம் பார்வையாளர்கள் இருந்தபோது அவர்களுக்கு நானும் ரசிகராக மாறினேன்.
அவர்கள் இருவரும் கவுண்டமணி - செந்தில் மாதிரி. அவர்களின் திறமை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் பல சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.
ப்ராங்க் ஷோ மூலம் பிரபலமான விஜே சித்து தற்போது யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். வ்லாக் ஆரம்பித்து தங்களின் தினசரி வாழ்க்கைகளை படமெடுத்து வெளியிட்டு வருகின்றனர்.
இவரது வீடியோக்கள் நகைச்சுவையுடன் இருப்பதால், இவரது சேனலை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது. சமீபத்தில் ஒரு வீடியோ மூலம் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
அதேசமயத்தில்தான் ட்ராகன் படத்தின் பாடல், டீசர் போன்றவை வெளியாகின. அதிலிருந்து விஜே சித்து சர்ச்சை குறித்தான பேச்சுகள் குறைந்தன. இதில் அவர்களின் வளர்ச்சி கவனம் பெற்றது. எங்கே ப்ரோமோஷன் போனாலும் இயக்குநரிடமும், நடிகரிடமும் விஜே சித்து மற்றும் ஹர்ஷத் குறித்துதான் கேட்கப்படுகிறது. அப்போதுதான் இயக்குநர் இவர்களை அடுத்த கவுண்டமணி செந்தில் என்பதுபோல் பேசியிருக்கிறார்.