டி.பி. ராஜலக்ஷ்மி (1911 - 1964) திருவையாறு சாலியமங்கலம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாபகேச ராஜலட்சுமி தமிழ் திரைப்பட துறையின் முதல் நடிகையும், முதல் பெண் இயக்குனரும், புதின எழுத்தாளரும் ஆவார். இவர் நாடக நடிகை, தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களைக் கொண்டவர்.
ராஜலட்சுமிக்கு எட்டு வயதில் திருமணம் நடந்தது. வரதட்சணை கொடுமையால் கணவனால் விரட்டப்பட்டு தாய் வீட்டில் வாழ்ந்த இவர், வள்ளி திருமணம் என்னும் நாடகத்தில் நாரதராக நடித்த, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட, டிவி சுந்தரம் என்பவரை காதலித்து மணந்தார்.
பதினொன்றாம் வயதில் நாடக கம்பெனியில் சேர்ந்தவர் நாடக ஆசிரியர் சங்கரதாஸ் சுவாமிகளிடம் நாடகப் பயிற்சி பெற்று பல நாடகங்களில் நடித்தார். தான் நடித்த நாடகங்கள் அனைத்திலும் தேச பக்திப் பாடல்களைப் பாடி மக்களின் வரவேற்பை பெற்றவர். தேசபக்தி பாடல்களை பாடியதற்காக பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு சில முறை சிறையும் சென்றுள்ளார்.
1917 ஆம் ஆண்டு நடராஜ முதலியார் தயாரித்த முதல் மௌனப் படமான "கீசக வதம்" என்ற படத்தில் நடித்தார். 1929இல் ஊமைப் படங்களை தயாரித்து வந்த ஜரைல் பிக்சர்ஸ் நிறுவனத்தில் 'கோவலன்' என்னும் ஊமைப்படத்தில் மாதவியாக நடித்தார். இது இவர் நடித்த இரண்டாவது ஊமை திரைப்படமாகும். அதன் பிறகு கே சுப்பிரமணியத்தின் 'உஷா சுந்தரி', ராஜா சாண்டோவின் 'ராஜேஸ்வரி' போன்ற சில ஊமைப் படங்களில் நடித்தார். 1931இல் மும்பையை சேர்ந்த சாகர் மூவிடோன் தயாரித்த முதல் குறும்படமான 'குறத்தி பாட்டும் நடனமும்'ல் நடித்தார்.
முதல் பேசும் படமான 'காளிதாஸ்' திரைப்படத்தில் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. இத் திரைப்படம் அக்டோபர் 31, 1931 இல் சென்னையில் 'சினிமா சென்ட்ரல்' என்ற திரையரங்கில் முதன் முதலில் திரையிடப்பட்டது.
ராஜலட்சுமி, ஸ்ரீ ராஜம் டாக்கீஸ் என்ற கம்பெனியைத் தொடங்கி 'மிஸ் கமலா' என்ற பெயரில் தானே கதை வசனம் எழுதி, கதாநாயகியாக நடித்து, தயாரித்து, இயக்கி வெளியிட்டார். இதன் மூலம் தமிழில் முதல் பெண் தயாரிப்பாளர், இயக்குனர் என்ற பெயரை தட்டிச் சென்றார்.
சகலகலாவல்லியான டிபி ராஜலக்ஷ்மி 35க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். 1961இல் 'கலைமாமணி' விருது பெற்றார். தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காக டிபி ராஜலட்சுமியின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளுக்காக அன்றைய ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமே பெருமிதம் கொண்டது.
ஆகஸ்ட் 20ஆம் தேதி 1964இல் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக காலமானார்.