இந்திய அளவில் முன்பெல்லாம் பாலிவுட் திரைப்படங்கள் தான் அதிக வசூலைக் குவித்து வந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய திரைப்படங்கள் பாலிவுட்டை மிஞ்சும் அளவிற்கு அசுர வளர்ச்சியை அடைந்துள்ளன. குறிப்பாக மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளிவரும் திரைப்படங்களின் வெற்றி சதவிகிதம் மற்ற மொழிப் படங்களைக் காட்டிலும் அதிகம். இதற்கு கதையும், திரைக்கதையும் மட்டும் காரணமல்ல; முன்னணி நடிகர்களும், இளம் நடிகர்களும் எவ்வித பாகுபாடுமின்றி நடிப்பதும் முக்கிய காரணம். இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மோகன்லால், மலையாள திரைப்படங்கள் தரமாக இருப்பதற்கான காரணம் என்ன என்பதைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மோகன்லால். மலையாளம் மட்டுமின்றி தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். மலையாள சினிமாவின் வணிகத்தை உயர்த்திய நடிகர்களில் மோகன்லால் மிகவும் முக்கியமானவர். இவரது மகன் பிரணவ் மோகன்லால் ஏற்கனவே நடிகராக அறிமுகமாகி விட்டார். இந்நிலையில் இவரது மகள் விஸ்மயா கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். மோகன்லால் நடிப்பில் கடைசியாக வெளியான துடரும் திரைப்படம் பான் இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவின் தரத்திற்கு இலக்கியங்கள் தான் முக்கிய காரணம் என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சினிமா என்பது தனிப்பட்ட ஒருவரோடு நின்று விடுவதல்ல. அது ஒரு கூட்டு முயற்சி. எதைப் போட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் கூட்டு முயற்சிக்கு நிச்சயமாக பலன் கிடைக்கும். திரைப்படங்களின் வெற்றிக்கு கதை மற்றும் திரைக்கதை தான் மிகமிக முக்கியம். மலையாள இலக்கியங்கள் தான் எங்கள் சினிமாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கின்றன. இலக்கியங்களின் உண்மைத்தன்மை தான் மலையாள சினிமா தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கு அச்சாணியாக இருந்து வருகின்றன.
பல நாவல்கள் மற்றும் சிறுகதைகள் மலையாள சினிமாவில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. பல எழுத்தாளர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களால் மலையாள சினிமாவின் தரம் இன்று மேம்பட்டுள்ளது. கேரளாவில் இலக்கியங்கள் வலுவாக இருப்பதால் தான், சினிமாவும் வலுவான பாதைக்குத் திரும்பியுள்ளது” என மோகன்லால் பெருமிதமாக கூறினார்.
கடந்த ஆண்டு பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் கூட நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேமலு, மஞ்சுமல் பாய்ஸ், பிரம்மயுகம், குருவாயூர் அம்பலநடையில், மலைக்கோட்டை வாலிபன் மற்றும் துடரும் உள்ளிட்ட பல தரமான திரைப்படங்கள் மலையாள சினிமாவின் வளர்ச்சியை உறுதி செய்துள்ளன. இதுபோன்ற நல்ல படங்களின் மூலம் மலையாள படங்கள் பான் இந்திய அளவிலும் ரசிகர்களைக் கவர்கின்றன. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மலையாள படங்களின் வளர்ச்சி உண்மையில் நம்மை பிரம்மிக்க வைக்கிறது.