பன்முகத்தன்மை கொண்ட பஞ்சு அருணாசலம் பிறந்த நாள் இன்று!

director panchu arunachalam
director panchu arunachalam
Published on

ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களை அதிக அளவில் தயாரித்த பஞ்சு அருணாசலம் பிறந்த நாள் இன்று.

தமிழ் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், எழுத்தாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவர் பஞ்சு அருணாசலம். காரைக்குடி அருகிலுள்ள சிறுகூடல்பட்டியில் 1941 ஆம் ஆண்டு ஜூன் 18 - அன்று பிறந்த இவர் தொடக்கக் காலத்தில் ஏ.எல்.எஸ் படப்பிடிப்புக் கூடத்தில் (A.L.S Studio) திரைப்படங்களுக்குத் தேவையான கொட்டகை (Shed) அமைக்கும் பணிக்கான உதவியாளராக இருந்தார்.

அதன் பிறகு, கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றினார். பின்பு தமிழ்த் திரைப்படங்களுக்குப் பாடல்களை எழுதத் தொடங்கினார். இவரது முதற்பாடலான 'நானும் மனிதன் தான்' என்ற பாடல் 1960 ஆம் ஆண்டில் வெளியான தெய்வப்பிறவி எனும் படத்தில் இடம் பெற்றது. கவிஞர் கண்ணதாசன் நடத்திய 'தென்றல்' என்ற பத்திரிக்கையில் 'அருணன்' என்ற புனைப்பெயரில் இவர் எழுதிய சில கதைகள் வெளியாகின.

திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன் கவியரசு கண்ணதாசன் ஆகியோரின் அண்ணன் கண்ணப்பன் என்பவரின் மகனான இவர், இளைய தலைமுறை (1977), என்ன தவம் செய்தேன் (1977), சொன்னதை செய்வேன் (1977), நாடகமே உலகம் (1979), மணமகளே வா (1988), புதுப்பாட்டு (1990), கலிகாலம் (1992), தம்பி பொண்டாட்டி (1992) என்று எட்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

ஆறிலிருந்து அறுபது வரை (1979), கல்யாணராமன் (1979), எங்கேயோ கேட்ட குரல் (1982), ஆனந்த ராகம் (1982), ஜப்பானில் கல்யாண ராமன் (1985), குரு சிஷ்யன் (1988), மைக்கேல் மதன காமராஜன் (1991), ராசுக்குட்டி (1992), தம்பி பொண்டாட்டி (1992), வீரா (1994), பூவெல்லாம் கேட்டுப்பார் (1999), ரிஷி (2001), சொல்ல மறந்த கதை (2002), மாயக் கண்ணாடி (2007) என்று 14 திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார். இவர் கடைசியாகத் தயாரித்த ‘காதல் சாம்ராஜ்ஜியம்’ எனும் படம் வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள்:
ஆண் குழந்தைக்கு தாயான அமலாபால்: குவியும் வாழ்த்துக்கள்; பெயர் என்ன தெரியுமா?
director panchu arunachalam

துணிவே துணை (1976), புவனா ஒரு கேள்விக்குறி (1977), கல்யாணராமன் (1979), ஆறிலிருந்து அறுபது வரை (1979), முரட்டுக்காளை (1980), சகல கலா வல்லவன் (1982), பாயும் புலி (1983), மண்வாசனை (1983), தூங்காதே தம்பி தூங்காதே (1983), தர்மத்தின் தலைவன் (1988), குரு சிஷ்யன் (1988), அபூர்வ சகோதரர்கள் (1989), சிங்கார வேலன் (1992) உட்பட 37 படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். எஸ்.பி. முத்துராமன் இயக்கிய 15 படங்களுக்கு இவர் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1960 ஆம் ஆண்டில் வெளியான தெய்வப்பிறவி படத்தில் தொடங்கி 2001 ஆம் ஆண்டு வெளியான ரிஷி படம் வரை 52 படங்களுக்குப் பாடல் எழுதியிருக்கிறார்.

director panchu arunachalam
director panchu arunachalam

அன்னக்கிளி படத்தில் வரும் அனைத்துப் பாடல்களையும் இவரே எழுதியிருந்தார். அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் இளையராஜாவை இவரே அறிமுகப்படுத்தினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் நாளில் மறைந்த இவர், தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார். இவர் கதை - வசனம் எழுதித் தயாரித்த, ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்துக்கு, சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களை அதிக அளவில் தயாரித்த பெருமையும் இவருக்கு உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com