"வாழ்க்கையை மாற்றி அமைத்த வாய்ப்பு" : சினிமாவில் 20 ஆண்டுகள், வெங்கட் பிரபுவின் நெகிழ்ச்சிப் பயணம்!

வெங்கட் பிரபுவின் சினிமா பயணம்: 20 ஆண்டுகளைக் கடந்த வெற்றிக் கதை
venkat Prabhu 20 years
Venkat Prabhu VP
Updated on

தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு , தான் சினிமாவில் நுழைந்து 20 வருடங்களை நிறைவு செய்ததை கொண்டாடி வருகிறார். 'ஏப்ரல் மாதத்தில்' திரைப்படத்தின் மூலம் துணை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் , 'உன்னைச் சரண் அடைந்தேன்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

அதன் பின்னர் பெரும்பாலும் சினிமாவில் துணை கதாபாத்திரங்களிலே நடித்து வந்த அவர் 'சென்னை - 600 028' திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து , அஜித் நடிப்பில் உருவான 'மங்காத்தா ' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரானார். சினிமாவில் தனது 20 ஆண்டு பயணத்தை நினைவு கூறும் வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டிருந்தார்.

அதில் " ​இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், 'சென்னை 600028' இல் ஒரு இயக்குநராக என் பயணம் தொடங்கியது. அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய எஸ்பிபி சார் அவர்களின் ஆசீர்வாதமும், சகோதரர் சரண் என் மீது வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையாலும் மட்டுமே இது சாத்தியமானது. அந்த ஒரு வாய்ப்பு என் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது.

இன்று, என் திரைப் பயணத்தின் 20-வது ஆண்டில் நுழையும் இந்த வேளையில், மறக்கமுடியாத நினைவுகளாலும் எதிர்காலம் குறித்த பேரார்வத்தாலும் என் மனம் நிரம்பி இருக்கிறது.

​இந்தப் பயணத்தில், ஒருபோதும் செய்ததையே மீண்டும் செய்யக் கூடாது என்பதை நான் நோக்கமாகவே வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சினிமாவும் ஒரு புதிய வகை (GENRE), புதிய கதைசொல்லும் பாணி மற்றும் ஒரு புதிய சவாலை எதிர்கொள்வதற்கான வாய்ப்பாகவே எனக்கு அமைந்தது. சில முயற்சிகளுக்கு உடனடி அன்பும் வரவேற்பும் கிடைத்தன. சில படங்கள் காலப்போக்கில் ரசிக்கப்பட்டன , சில படங்கள் எனக்குப் பாடங்களைக் கற்றுக்கொடுத்தன.

vemkat prabhu
venkat Prabhu

தொடர்ந்து புதிய முயற்சிகளைச் செய்வதற்கான தைரியம் எனக்குக் கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு இத்தனை ஆண்டுகளாக நீங்கள் என் மீது காட்டி வரும் அளவற்ற அன்பும் நம்பிக்கையும்தான் காரணம். என் வெற்றிகளைக் கொண்டாடி இருக்கிறீர்கள். கடினமான கட்டங்களில் என் பக்கமாக நின்று இருக்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய படத்தோடு நான் வரும்போது அதே அன்போடு என்னை வரவேற்றிருக்கிறீர்கள்.

​உங்களுடைய இந்த நம்பிக்கைதான் எனக்குத் தொடர்ந்து புதிய முயற்சிகளை எடுக்கும் துணிச்சலைக் கொடுக்கிறது; அதற்கு நான் எத்தனை முறை நன்றி சொன்னாலும் ஈடாகாது. பின்னோக்கிப் பார்வையில் என் மனதிற்குள் நன்றியுணர்வு மட்டுமே நிரம்பி இருக்கிறது! என்னை நம்பிய ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும், நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கு என் நண்பர்களுக்கும், இந்தப் பயணத்தின் அங்கமாக இருந்த ஒவ்வொருவருக்கும், அனைத்திற்கும் மேலாக சினிமாவைக் கொண்டாடும் இரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், இன்றும் நான் சினிமாவின் தீவிர ரசிகனாகவே உணர்கிறேன். ஒவ்வொரு சினிமாவும் எனக்குப் புதிதாக ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிற்கு முன்பும் எனக்குள் இருக்கும் அந்தப் படபடப்பும் எதிர்பார்ப்பும் இன்றும் மாறவில்லை. மக்களை மகிழ்விக்கும், வியப்பில் ஆழ்த்தும், மற்றும் அவர்களோடு ஒன்றிபோகும் கதைகளைச் சொல்ல வேண்டும் என்ற என் கனவு மேலும் வலுவடைந்து மட்டுமே இருக்கிறது.

​இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அதே தீவிரமான ஆர்வத்தோடு உங்களுக்கு நல்ல கதைகளை வழங்குவேன் என்று உறுதியளிக்கிறேன்.

​இன்னும் பல ஆண்டுகள், ஒன்றாக பயணிப்போம்!

​அன்புடன் நன்றியுடனும்,

வெங்கட் பிரபு. "

என்று அவர் பதிவிட்டிருந்தார். வெங்கட் பிரபுவின் பதிவிற்கு சினிமா துறையை சேர்ந்த பலரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
மயில் முதல் கருத்தம்மா வரை; பாஞ்சாலி முதல் ஜெனிபர் டீச்சர் வரை - பாரதிராஜா படைத்த பெண் பாத்திரங்கள்
venkat Prabhu 20 years
logo
Kalki Online
kalkionline.com