

தமிழ் சினிமாவில் எப்போதும் ஜனரஞ்சகமான திரைப்படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும். தற்போது வன்முறையும் இரத்தமும் நிறைந்த கதைகளாக வரும் திரைப்படங்களுக்கு மத்தியில், இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு ஜாலியான திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது தான் கோலிவுட்டின் நியூ டாபிக்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் வெங்கட் பிரபுவிற்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இவரது திரைப்படங்களில் பெரும்பாலும் கதை , திரைக்கதைக்கு முக்கியத்துவம் அதிகம் இல்லாமல் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். தொடக்கத்தில் துணை நடிகராக சினிமாவில் அறிமுகமான வெங்கட் பிரபு 'சென்னை- 28' திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக மாறினார்.
சென்னை 28 திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தின் எளிமையான கதையும், சென்னை புறநகர மக்களின் வாழ்வியல் கலந்து நகைச்சுவையாக கூறப்பட்ட, இந்த கதை ரசிகர்களின் கவனத்தினை பெற்றது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து அதே கூட்டணியில் சரோஜா , கோவா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றார்.
பின்னர் அஜித்தை நாயகனாக வைத்து வித்தியாசமான கதைக்களத்தில் மங்காத்தா திரைப்படத்தை எடுத்திருந்தார். இந்த திரைப்படத்தில் முதல் முறையாக அஜித் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படமும் வழக்கம் போல வெங்கட் பிரபுவின் ஒரே மூலக்கதையான கிரிக்கெட்டை வைத்து , அதன் பின்னணியில் நடைபெறும் சூதாட்டத்தினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
மங்காத்தா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு விஜய்யை வைத்து 'தி கோட்' திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து பிரபுதேவா, பிரசாந்த், மோகன் , ஜெயராம் , வைபவ் , அஜ்மல் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தனர். பாக்ஸ் ஆபிஸில் இந்த திரைப்படமும் நல்ல வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்திலேயே சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்திற்கு வெங்கட் பிரபு லீட் கொடுத்து இருந்தார்.
சிவகார்த்திகேயனை வைத்து தான் வெங்கட் பிரபு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற பேச்சு பரபரப்பாக இருந்தது. இந்த திரைப்படம் நகைச்சுவையும் அதிரடியும் கலந்த வித்தியாசமான திரைப்படமாக இருக்கும் என்று கூறப்பட்டது. இந்த திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்க வேண்டும் என்று திரைக்கதையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.
முதலில் கூறிய கதைக்கும் அதன் பின்னர் எடுக்கப்பட இருந்த கதைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தது. கதை நகைச்சுவையிலிருந்து சயின்ஸ் பிக்சன் கதையாக மாற்றப்பட்டது. இடையில் இந்த திரைப்படம் கைவிடப்பட்டதாகவும், பின்னர் படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் படத்திற்கான முதற்கட்ட வேலைகள் நடைபெறுவதாகவும் கூறி வந்தார். இந்நிலையில் வெங்கட் பிரபு தனது சென்னை - 28 திரைப்படக் குழு நடிகர்களை வைத்து விரைவாக ஒரு படத்தை எடுத்து முடிக்க தீர்மானித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் வழக்கம்போல வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்கள் மிர்ச்சி சிவா,ஜெய் உள்ளிட்டோர் கதாநாயகனாகவும் பிரேம்ஜி அமரன், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ் , விஜய் வசந்த் உள்ளிட்டோர் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு வழக்கம் போல் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
இந்த படத்தின் திரைக்கதை வெங்கட் பிரபுவின் வழக்கம் போல கிரிக்கெட்டை சார்ந்து இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த யூகம் தான். இத்திரைப்படத்தை டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.