

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் சீயான் விக்ரம். சமீபத்தில் இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு அரிய வகை செல்லப்பிராணியை கொஞ்சி பகிர்ந்த காணொளி தமிழகமெங்கும் பரவியது. தொடக்கத்தில் அந்த காணொளியை பார்த்து பலரும் விக்ரமை பாராட்டி பேசினாலும், ஒரு சில பயனர்கள் "இந்த அரியவகை குரங்கு எவ்வாறு விக்ரமின் கைகளுக்கு வந்தது?" என்று கேள்வி எழுப்ப தொடங்கினர்.
இந்த விவகாரம் சிறிது சிறிதாக பெரிதாக ஆரம்பித்தது. அந்த காணொளி காட்சியை கண்ட விலங்கு நல ஆர்வலர்கள், இது குறித்து கடுமையான விவாதங்களை முன் வைத்தனர். இது தொடர்பாக பலரும் தங்களது புகார்களை முன்வைக்க தொடங்கினர். இணையத்திலும் இந்த காணொளி காட்சிகள் வேகமாக பரவி வந்தது. இது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் இந்திய வனவிலங்கு சட்டங்கள் , வனவிலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்கு அரசு வகுத்த வழிமுறைகள், ஆகியவற்றை கேள்விகளாக எழுப்பினர்.
தான் பெருமைக்காக வெளியிட்ட வீடியோ, பெருமைக்கு பதில் தனக்கு பெரிய சிக்கல்களை ஏற்படுத்தியதை உணர்ந்த நடிகர் விக்ரம், உடனடியாக அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் . அவர் விடியோவை நீக்கிய பின்னர்தான் இந்த விவகாரம் கடுமையாக சூடு பிடிக்க தொடங்கியது.
விக்ரமின் மீது எந்த ஒரு தவறும் இல்லாவிட்டால், அவர் எதற்காக இந்த வீடியோவை நீக்க வேண்டும்? என்ற கேள்விகளுடன் அவருக்கான எதிர்ப்பு சமூக வலைதளங்களில் மேலும் அதிகமானது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளும் , விலங்கு நல ஆர்வலர்களும் எதற்காக நடவடிக்கை தொடங்கவில்லை? பெரிய மனிதர்கள் என்றால் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு எளிதில் தப்பித்து விடலாம் என்றெல்லாம் விமர்சிக்க தொடங்கினர்.
பின்னர் ஒரு சிலர் விக்ரம் கொஞ்சிய குரங்கினைப் பற்றிய தகவல்களை வெளியிட்டனர். அந்த குரங்கு பொதுவாக இந்தியாவில் உள்ள குரங்கு அல்ல என்றும்.. அதன் பூர்வீகம் தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தோனேஷியா போன்றவை. அந்த நாடுகளின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வசிக்கக்கூடிய அரிய வகை 'லார் கிப்பன்' (Lar Gibbon) குரங்கு இனத்தைச் சேர்ந்தது இது என்று வனவிலங்கு அலுவலர்கள் கூறியுள்ளனர்.
இந்திய அரசாங்கம் வகுத்துள்ள சட்டத்தின்படி இந்த குரங்கினை இந்தியாவிற்கு உரிய அனுமதியின்றி கொண்டுவர முடியாது. மேலும் இந்திய செல்லப்பிராணிகள் சட்டப்படி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, அரிய விலங்குகளை வனத்துறையின் அனுமதி இன்றி வீடுகளில் வளர்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த குரங்கை எவ்வாறு சென்னைக்கு கொண்டு வந்திருக்க கூடும்? என்று ஒரு சிலர் கிறுக்கு பிடித்த கேள்விகளையும் எழுப்பி உள்ளனர்.
இந்த குரங்கு குறித்து பலரும் தங்களது சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர். தென்கிழக்கு ஆசிய பகுதிகளிலிருந்து, இந்தியாவின் வடகிழக்கு எல்லை மாநிலமான மணிப்பூர் வழியாக இந்த குரங்கு கடத்தப்பட்டு வந்திருக்குமோ? என்ற கோணத்திலும் ஒரு சிலர் கேள்விகளை எழுப்பி உள்ளனர். இது மட்டும் அல்லாமல் விக்ரமின் உறவினரான சி. கே.ரங்கநாதன் மூலமாக இந்த குரங்கை சட்டவிரோதமாக பராமரித்து வருவதாகவும் ஒரு சிலர் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் பெரிதாவதை தொடர்ந்து தமிழக வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர். வனத்துறையின் விசாரணை அறிக்கைக்கு பின்னர் தான் இந்த விவகாரத்தின் முழு உண்மை தெரியவரும்.