
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவாக வலம் வரும் நடிகர் பிரபாஸ், ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் உலகம் முழுவதும் பிரபலம் ஆனதுடன் பான் இந்தியா நடிகராகவும் கொண்டாடப்படுகிறார்.
தெலுங்கு பட உலகில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இவரை செல்லமாக ‘டார்லிங்’ என்று அழைக்கின்றனர். ’நாற்பது வயதைக் கடந்தும் சிங்கிளாக வலம் வரும் பிரபாஸூக்கு எப்போது திருமணம்?’ என்பது தான் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக நீடித்து வருகிறது.
முதல் முறையாக 2002ம் ஆண்டு ஈஸ்வர் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ். 2004ம் ஆண்டு வெளியான வருஷம் என்ற படத்தால் பிரபலமாகி தெலுங்கு படஉலகில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்தார். அதன் பின்னர் இவரது நடிப்பில் வெளியான மிர்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர், பர்ஃபெக்ட் போன்ற படங்கள் பிரபாஸ்க்கு வெற்றிப்படங்களாகவே அமைந்தன.
பாகுபலி, பாகுபலி 2 படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். பாகுபலிக்கு பின்னர் வெளியான ‘சாஹோ’ ’ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ எனத் தொடர்ந்து இவர் நடித்த பான் இந்திய படங்கள் பெரிதாக வரவேற்புப் பெறவில்லை. கடைசியாக பிரபாஸ் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ படம் தொழில்நுட்ப ரீதியாக வரவேற்பை பெற்றது என்றே சொல்ல வேண்டும்.
தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கண்ணப்ப நாயனார் வாழ்க்கையை மையமாக வைத்து ரூ.100 கோடி செலவில் தயாராகும் 'கண்ணப்பா' என்ற புராண படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை நடிகர் மோகன்பாபு தயாரிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் பிரபாசுக்கு இதுவரை இல்லாத அளவில் அதிக சம்பளம் கொடுத்து இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வைரலானது. இந்த தகவல் குறித்து விஷ்ணு மஞ்சு விளக்கம் அளித்துள்ளார். விஷ்ணு மஞ்சு கூறும்போது, “கண்ணப்பா படத்தில் நடிக்க பிரபாஸ் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கிக் கொள்ளவில்லை" என்று கூறினார். மேலும் "எனது தந்தை மோகன்பாபு மீது இருக்கும் மரியாதை காரணமாகவே இந்த படத்தில் நடிக்க சம்மதம் சொன்னதுடன், இலவசமாகவும் நடித்து கொடுத்தார்" என்றும் கூறினார்.
"அதுமட்டுமின்றி மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலும் இந்த படத்தில் நடிக்க சம்பளம் வாங்கிக் கொள்ளவில்லை" என்றார். இரண்டு சூப்பர் ஸ்டார்களும் தங்களது பிஸியான படவேலையிலும் நேரம் ஒதுக்கி நடித்து கொடுத்ததை பெருமையாக கருதுவதாக கூறினார். மேலும் நட்பின் மதிப்பை புரிய வைத்த மோகன்லால் மற்றும் பிரபாசுக்கு நடிகர் விஷ்ணு தனது நன்றியைத் தெரிவித்தார்.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மத்தியில் மரியாதை நிமித்தமாக சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்துள்ள நடிகர் பிரபாஸை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.