
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம்தான் பாலிதானா. பாலிதானாவில் சத்ருஞ்சயா என்ற மலை உள்ளது. இந்த மலையில் 900க்கும் மேற்பட்ட கோயில்களை கட்டியுள்ளனர். உலகில் ஒரு மலையில் இத்தனை வழிபாட்டுத் தலங்கள் இருப்பது இந்த இடத்தில் மட்டும்தான். சமண மதத்தை நிறுவிய ரிஷப தேவர் சத்ருஞ்சயா மலை உச்சியில் உள்ள ராயன் மரத்தின் அடியில் தியானம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது சமண சமயத்தைப் சேர்ந்தவர்களின் புனித பூமியாக கருதப்படுகிறது.
சமண சமயத்தவர்களின் புனிதமான மற்றும் மிகவும் மரியாதைக்குரிய இடமாக கருதப்படுவதால் இங்கு அசைவ உணவுகள் சமைக்கப்படுபதில்லை. இங்கு உணவுக்காக விலங்குகளைக் கொல்வது முற்றிலும் சட்டவிரோதமானது. இந்த நகரத்தில் எங்கும் அசைவம் விற்பதை பார்க்க முடியாது. பாலிதானா உலகின் முதல் முழு சைவ நகரம் என்ற பெருமையை பெறுகிறது.
சத்ருஞ்சய மலையில் உள்ள பாலிதானா கோயில்கள் 11 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி 900 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டவை. இந்த இடத்தில் முதல் கோயில்களைக் கட்டியவர் ஒரு சிறந்த சமண புரவலரான குமார்பால் சோலங்கி ஆவார்.
பின்னர் இந்தக் கோயில்களில் பல கி.பி 1311 இல் துருக்கி இஸ்லாமியர் படையெடுப்பில் அழிக்கப்பட்டன. அப்போது ஜினபிரபாசூரி என்ற சமண சமயத் துறவியின் முயற்சியால், இங்கு மீண்டும் பல கோயில்கள் கட்டப்பட்டன. இங்கு கார்த்திக் பூர்ணிமா பண்டிகை மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. அப்போது நகரமெங்கும் மக்கள் வெள்ளம் அதிகமாக இருக்கும்.
2014-ம் ஆண்டு சுமார் 200 ஜைன துறவிகள் பாலிதானாவில் விலங்குகளை இறைச்சிக்காக கொல்லப்படுவதை கண்டித்தும், அதன் இறைச்சி அங்கு விற்பனை ஆவதை எதிர்த்தும் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட துணிந்தனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து மாநில அரசு பாலிதானாவில் மிருகவதைக்கு தடை விதித்தது.
அதன்பிறகு இதுவரை இங்கு ஒரு விலங்கும் கொல்லப்படவில்லை. மேலும் அங்குள்ள 250 இறைச்சிக் கடைகளையும் மூட வேண்டும் என்று துறவிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அனைத்து வகையான இறைச்சி கடைகளும் மூட அரசு உத்தரவிட்டது. இதனால், பாலிதானா நகரம் இறைச்சி இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பால் பொருட்கள் இங்கு அனுமதிக்கப்படுகின்றன. மேலும் நகரத்தில் உள்ள மக்கள் பால், நெய், பனீர், வெண்ணெய் போன்றவற்றை உட்கொள்கிறார்கள்.
பாலிதானா நூற்றுக்கணக்கான கோயில்களைக் கொண்டிருப்பதால், ஜைனர்களின் முக்கிய யாத்திரை மையமாகவும் உள்ளது. சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரான ரிஷப தேவர் ஒரு காலத்தில் அதன் மலைகளில் நடந்து சென்றதாகவும், அன்றிலிருந்து இந்த இடம் சமண சமயத்தை பின்பற்றுபவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஜெயின் சமூகத்தினருக்கு மிகவும் புனிதமான யாத்திரை மையமாக உள்ளது. மேலும், உலகின் மிகப்பெரிய கோவில் வளாகமாக கருதப்படுகிறது.