உலகில் பல நகரங்கள், கிராமங்கள் இருந்தாலும் அவற்றின் தனித்துவமான சிறப்பின் காரணமாக சில நகரங்களும் கிராமங்களும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. அந்த வகையில் ஒருவரை பெயரை சொல்லி அழைக்காமல் விசில் மூலம் அழைக்கும் வினோத கிராமம் ஒன்று இந்தியாவில் இருக்கிறது. அந்த கிராமத்தின் சிறப்புகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
ஒரு குழந்தை பிறந்த உடனேயே அக்குழந்தைக்கு பெயரிடுவதையே பெருமையாக பெரும்பாலான பெற்றோர்கள் கருதி அதில் ஆனந்தம் கொள்வர். அந்தப் பெயரே அவரின் அடையாளம் ஆகிறது. ஆனால், இந்தியாவின் வடகிழக்கு மலைப் பகுதியில் உள்ள மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள காங்தாங் கிராமம் சுற்றுலா கிராமமாக இருப்பதோடு, ‘விசில் கிராமம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள இந்த கிராமத்தில், மக்கள் பெயரால் அழைக்கப்படுவதில்லை. அதற்க மாறாக, ஒரு டியூன் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
மேகாலயாவில் உள்ள இந்த காங்தாங் கிராமத்தில் தாய், தந்தை, குழந்தைகள் மற்றும் உறவினர் உள்ளிட்ட அனைவருமே ஒருவருக்கொருவர் விசில் சத்தம் மூலமாகவே அழைத்துக்கொள்கின்றனர். அவர்களின் உரையாடலும் பெரும்பாலும் இசை வடிவிலேயே இருக்கும்.
பெயர் சொல்லி ஒருவரை ஒருவர் கூப்பிட்டுக்கொள்வதே இங்கு அரிதுதானாம். பழங்குடியினர் வசித்து வரும் இந்த கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், குழந்தையின் தாய் பெயரோடு சேர்த்து ஒரு இசையையும் பெயராக சூட்டுவர். மேலும், இந்த கிராமத்தில் வசித்து வரும் மக்களுக்கு இரண்டு பெயர்கள் இருக்கும். அதில் ஒன்று வழக்கமாக நமக்கு வைக்கப்படும் பெயர்கள், மற்றொன்று இசைப் பெயர். இந்த இசைப்பெயரிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒரு ஷார்ட் சாங், மற்றொன்று லாங் சாங். இந்த ஷார்ட் சாங் வீட்டிலிருப்பவர்கள் அழைப்பதற்காக, லாங் சாங் ஊரார் பயன்பாட்டிற்காகவாம்.
இந்த இசையை இவர்கள் 'ஜிங்கர்வை லாபெய்' என்று அழைக்கிறார்கள். இது 'அம்மாவின் அன்புப் பாடல்' என்று பொருள்படுகிறது. ஒரு மனிதர் இறக்கும்போது அந்த இசைக்குறிப்பும் அழிந்துவிடும், அந்த இசை வேறு எவருக்கும் பெயராக சூட்டப்படுவதில்லை. பல தலைமுறைகளாகவே இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருவதாகக் கூறும் இக்கிராமவாசிகள், இது எப்போது என்ன காரணத்திற்காக தொடங்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது எனக் கூறுகின்றனர்.
ஷில்லங்கிலிருந்து சுமார் 53.4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள காங்தாங் கிராமவாசிகள் பறவைகள் மற்றும் விலங்குகளைப் போலவே தங்கள் செய்திகளை தங்கள் சக கிராம மக்களுக்குத் தெரிவிக்க விசில் அடிப்பதை ஒரு முறையாக பயன்படுத்துவதால் இது விசில் கிராமம் என்று அழைக்கப்படுகிறது.
சுமார் 650 முதல் 700 குடியிருப்பாளர்களைக் கொண்ட இந்த கிராமம் 2022ம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா கிராம விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. காடுகளிலும் வயல்வெளிகளிலும் வேலை பார்க்கும் அசதி தெரியாமல் இருக்க பாட்டு பாடுவது வழக்கம். ஆனால், இந்த கேங்டாக் கிராமத்தில் பேசிக்கொள்வதே பாட்டு பாடி, விசில் அடித்துதான் என்று அறியும்போதே பரவச உணர்வை ஏற்படுத்துகிறது.