உலகின் பெரிய பள்ளிவாசல் என்றழைக்கப்படும், ‘அல்-மஸ்ஜித் அல்-ஹரம்’ (Al-Masjid al-Ḥaram) பள்ளிவாசல் சவூதி அரேபியாவில் உள்ள மக்கா மாநகரில் அமைந்துள்ளது. அரபி மொழியில், அல்-மஸ்ஜித் அல்-ஹரம் என்பதற்கு புனித இறை இல்லம் என்று பொருள். இதனை இசுலாமியர்கள், ‘புனித காபா’ என்றும், காஃபத்துல்லா என்றும் அழைக்கின்றனர். இந்தப் பள்ளிவாசல் காபாஷரிப் எனவும் அழைக்கப்படுகின்றது.
இந்தப் பள்ளிவாசல் மனித குலம் தோன்றுவதற்கு முன்பே தேவதைகளால் கட்டப்பட்டதாக இஸ்லாமியப் பாரம்பரியம் கூறுகிறது. புவியில் தொழுகைக்காக இடம் அமைக்க வேண்டி இறைவன் நினைத்த பொழுது உதித்த சுவர்க்க பூமியின் பெயர் அல்-பயது ல்-மௌமூர் (The Worship Place of Angels), காலப்போக்கில் இயற்கைச் சீற்றங்களால் அழிந்து போன பள்ளிவாசல் ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கப்பட்டது. இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, இந்தப் பள்ளிவாசல் இப்ராஹிமால் அவரது மகன் இஸ்மாயில் உதவியுடன் மீண்டும் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. கடவுளின் ஆணைப்படி, அவர்களிருவரும் பள்ளிவாசலையும் காபாவையும் கட்டினார்கள். காபாவின் கிழக்கு முனையில் சற்றுக் கீழிறங்கி அமைக்கப்பட்டிருக்கும் கருங்கல் (ஹஜார்-உல்-அஸ்வத்) மட்டுமே இப்ராஹிமால் கட்டப்பட்ட பள்ளிவாசலின் மிச்சமாகும்.
காபா இருக்கும் திசையே உலகின் அனைத்து இஸ்லாமியர்களின் தொழுகை திசை ஆகும். இந்தப் பாலைவனச் சோலையின் ஜம்ஜம் நீரூற்றானது கண்டறியப்பட்ட நாளில் இருந்து இன்று வரை வற்றியதே இல்லை என்று இஸ்லாம் அதன் புகழை விளக்குகிறது.
இஸ்லாமிய நம்பிக்கையின்படி இஸ்மாயிலின் சரித்திரக் கதையில், அவரது அன்னையும் இப்ராஹிமின் மனைவியுமான ஹாகர், நீரைத் தேடி பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கும் இடத்தைச் சுற்றியும் சஃபா மற்றும் மர்வாஃஹ் இடங்களுக்கிடையேயும் ஓடித்திரிந்தார். இதற்கிடையில் கடவுளின் கருணையால் அங்கு ஜம்ஜம் நீரூற்று தோன்றியது. அன்று முதல் அந்த நீரூற்று வற்றாமல் இருப்பதாக நம்பப்படுகிறது. ஹிஜ்ரா முடித்து வெற்றியுடன் மெக்கா திரும்பிய முகம்மதுவும், அவரது மருமகன் அலி இப்ன் அபி தலிப் - உம் காபாவினுள்ளும் புறமும் இருந்த சிலைகளை அகற்றி அந்த இடத்தைச் சுத்தப்படுத்தினர். அன்று முதல் காபாவில் இஸ்லாமியம் செழித்தது.
இயற்கையால் சீர்குலைந்த இந்தப் பள்ளிவாசலின் முதன் முதலில் பெரிய அளவில் மேம்படுத்தும் பணியானது 692 ஆம் ஆண்டில் நடந்தது. அப்போதுதான் பள்ளியின் வெளிப்புறச் சுவர்கள் எழுப்பப்பட்டு உட்புறக் கூரைகளில் அலங்காரங்களும் அமைக்கப் பெற்றன. 700 ஆம் ஆண்டிகளின் இறுதியில் பள்ளிவாசலின் மரத்தூண்களானது பளிங்குகளாக மாற்றியமைக்கப்பட்டன. மேலும், தொழுகை இடங்களும் விரிவுபடுத்தப்பட்டன. மத்தியக் கிழக்கு திசை நாடுகளில் இஸ்லாமின் வளர்ச்சியும் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களின் கணக்கிலடங்கா வருகைகளும் மெக்காவை மேலும் வளப்படுத்தியது.
மேலும்,1570 ஆம் ஆண்டில் சுல்தான் சலீம் ஈயின் ஆஸ்தான கட்டிட வல்லுனரால் இப்பள்ளியின் கூரைகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டன. அதன் பின்பு, பலமுறை இந்த பள்ளிவாசல் பல கட்டுமான மாற்றங்களைச் சந்தித்திருந்தாலும் 1570 ஆம் ஆண்டுதான் கடைசியாக இந்தப் பள்ளிவாசல் பெரிய அளவில் சீரமைக்கப்பட்டதாக சவுதி அரேபியா அரசு அதிகாரபூர்வமாகத் தெரிவித்தது. அதன் பின்பு, கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் இந்தப் பள்ளிவாசல் எந்த விதமான சீரமைப்பிற்கும் உட்படாமல் நிலைத்து நிற்கின்றது.
இதன் தற்போதையக் கட்டமைப்பு உட்புற, வெளிப்புறத் தொழுகை இடங்களையும் உள்ளடக்கி 3,56,800 சதுர மீட்டர்கள் (88.2 ஏக்கர்) என்றிருக்கிறது. இதில் 4 மில்லியன் இசுலாமிய ஹஜ் பயணிகள் தங்குவதற்கு இடம் உண்டு. இப்பள்ளிவாசலில் ஒரே நேரத்தில் 8,20,000 பேர் தொழுகை நடத்த முடியும். ஹஜ் என்பது உலக அளவில் பக்தர்கள் அதிகமாகக் கூடும் நிகழ்வுகளில் ஒன்றாகும்.