கல்லில் வடித்ெதடுத்த பேரழகு: பேளூர் மதனிகைகளின் பிரம்மிப்பூட்டும் ரகசியங்கள்!

900 ஆண்டுகள் கடந்தும் மங்காத ஹோய்சளக் கட்டிடக்கலையின் உன்னதப் படைப்பான மதனிகை சிற்பங்களின் ரகசியப் பார்வை.
மதனிகை சிற்பங்கள் - Belur Madanika
மதனிகை சிற்பங்கள் - Belur MadanikaImage credit - Gemini
Updated on

மதனிகை சிற்பங்கள்:

மதனிகை (Madanika) என்பது இந்தியக் சிற்பக்கலையில், குறிப்பாக ஹோய்சள மற்றும் சாளுக்கியக் கட்டிடக் கலையில், பெண்களின் பேரழகு, நளினம் மற்றும் பல்வேறு உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் வகையில் செதுக்கப்பட்ட அழகிய பெண் சிற்பங்களைக் குறிக்கும். இச்சிலைகள் 'சலாபஞ்சிகைகள்' (Salabhanjikas) என்றும் அழைக்கப்படுகின்றன.

கர்நாடகாவின் பேளூர் சென்னகேசவர் கோவிலில் உள்ள 'மதனிகைகள்' (Madanikas) அல்லது 'சலாபஞ்சிகைகள்' (Salabhanjikas) ஹோய்சளக் கட்டிடக் கலையின் உச்சக்கட்டச் சான்றாகவும், உலகின் மிகச்சிறந்த பெண்மைச் சிற்பக்கலைப் பொக்கிஷமாகவும் போற்றப்படுகின்றன.

அப்படி போற்றப்படுவதற்கான இச்சிலைகள் பற்றிய சுவாரசியமான மற்றும் பிரம்மிப்பூட்டும் தகவல்கள்:

சாந்தலா தேவியின் பிரதிபலிப்பு

இக்கோவிலில் உள்ள 42 மதனிகைப் பிரதான சிற்பங்களில், பெரும்பாலானவை ஹோய்சள மன்னன் விஷ்ணுவர்த்தனின் அரசியும், நாட்டியக் கலைஞருமான சாந்தலா தேவியின் (Queen Shantala Devi) பல்வேறு நளினமான நாட்டியப் பங்களிப்புகள் மற்றும் பாவனைகளை அடிப்படையாகக்கொண்டே செதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

'மெழுகுப் பாறை' ரகசியம்:

இச்சிலைகள் அனைத்தும் 'குளோரிடிக் ஷிஸ்ட்' (Chloritic Schist) எனப்படும் மென்மையான மாவுக் கற்களால் செதுக்கப்பட்டவை. வெட்டி எடுக்கும்போது மெழுகைப் போல மென்மையாக இருக்கும் இக்கற்கள், காற்றில் உலர உலரக் காலப்போக்கில் இரும்பைப்போல மிக உறுதியானதாக மாறிவிடும். இதனால்தான் 900 ஆண்டுகள் கடந்தும் இச்சிலைகளின் கூர்மை மாறாமல் உள்ளன.

நுணுக்கமான 'ஹோலோ' செதுக்கல் கலை:

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இச்சிலைகளில் உள்ள நகைகள், வளையல்கள் மற்றும் ஆடை மடிப்புகளுக்கு இடையே மிகச் சிறிய துளைகள் இருக்கும். எடுத்துக்காட்டாக:

நகை இடுக்குகள்: ஒரு மெல்லிய நூலை அல்லது ஈர்க்குச்சியை நகைகளின் துளைகளுக்குள் விட்டு மறுபக்க வழியாக வெளியே எடுக்க முடியும் அளவுக்கு உட்புறமாக இடைவெளிவிட்டு நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

மதனிகை சிற்பங்கள் - Belur Madanika
மதனிகை சிற்பங்கள் - Belur Madanika

பிரசித்தி பெற்ற சில மதனிகை வடிவங்கள்:

தர்பண சுந்தரி (கண்ணாடியைப் பார்க்கும் பெண்): பேளூரின் அடையாளம்! தன் இடது கையில் உள்ள கண்ணாடியில் முக அழகைப்பார்த்து, வலது கையால் பொட்டு வைக்கும் நேர்த்தியான தோற்றத்தைப் பார்க்கலாம்.

இதைப் பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள் குறிப்பாக அதை ரசித்த சிறுமிகள் அந்த சிலையில் உள்ளது போல் செய்து பார்த்து மகிழ்ந்தனர் . அப்படி அனைவரும் புரிந்து கொள்ளும்படி சிலை வடித்து இருப்பது மிக மிக அற்புதம்.

மயூரா நாட்டியா: தன் தலைமுடி மடிப்புகளுக்குள் மறைந்திருக்கும் பல்லியைப் பார்த்து மயில் ஒன்று அவளின் கூந்தலைக் கொத்த வரும்போது, அதை நளினமாகத் தடுக்கும் பாவத்தில் இருக்கும் சிற்பம்.

பாகவதா (Troublesome Lizard): ஆடைக்குள் பல்லி புகுந்ததும் பதற்றத்துடன் தனது ஆடைகளைச் சரிசெய்யும் பெண்ணின் தத்ரூபமான முகபாவனை.

கானா சுந்தரி (Gana Sundari): இசைக்கருவிகளை இயக்கும் பெண், தனது ஆபரணங்களைச் சரிசெய்யும் பெண் என ஒவ்வொரு சிற்பமும் பெண்மையின் வெவ்வேறு உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது.

இதையும் படியுங்கள்:
மதுரை நகரின் மர்மமான காவலன்: 2000 ஆண்டு பழமையான கூடலழகர் கோவிலின் இரகசியங்கள்!
மதனிகை சிற்பங்கள் - Belur Madanika

சுக பாஷினி (Suka Bashini - கிளிகளுடன் பேசும் நங்கை):

தனது இடது கையில் அமர்ந்திருக்கும் கிளியிடம் மிக மென்மையாகப் பேசும் பாவனையில் அமைந்த அழகிய சிற்பம்.

பெண் தன் பேச்சை நிறுத்தி கிளியின் ஒலியைக் கூர்ந்து கவனிப்பது போன்ற தத்ரூபமான முகபாவனையும், கிளியின் இறகுகள் மற்றும் கையின் மெல்லிய நரம்புகள் வரை செதுக்கப்பட்ட நுணுக்கமும் காண்போரை வியக்க வைக்கும் அற்புத சிலை வடிப்பு. மாபெரும் கலை படைப்பு.

நர்த்தகி (Narthaki - நாட்டிய மங்கை):

பரதநாட்டியத்தின் 'திரிபங்க' (உடலின் மூன்று வளைவுகள்) முத்திரையோடு, தீவிரமான நாட்டியப் பயிற்சியில் ஈடுபடும் பாணியில் செதுக்கப்பட்ட சிற்பம்.

ஆடலின் வேகத்தில் அவிழ்ந்து விழும் தலைமுடி, சுழலும் உடலமைப்பு மற்றும் காலில் அணிந்துள்ள சலங்கையின் ஒவ்வொரு மணிகளும் தனித்தனியாகத் தெரியும் அளவிற்குத் துல்லியமாகச் செதுக்கப்பட்டுள்ளது.

மிருதங்க நாயகி (Mridanga Nayaki - மிருதங்கம் வாசிக்கும் பெண்):

உடலை நளினமாக வளைத்து, தன் கைகளால் மிருதங்கம் (மத்தளம்) வாசிக்கும் கோலத்தில் இருக்கும் மதனிகை.

இசைக்கருவியின் தோல்பகுதி, அதை அழுத்தும் விரல்களின் கோணம் மற்றும் இசையின் தாளத்திற்கு ஏற்ப அசையும் அவளது ஆபரணங்களின் அசைவு என அனைத்தும் கல்லில் இசையைக் கொண்டுவந்த அதிசயமாகத் திகழ்கிறது.

கைவினைஞர்களின் கையொப்பம் (Sculptor's Signature)

பொதுவாக இந்தியக் கலை வரலாற்றில் சிற்பிகள் தங்கள் பெயர்களைப் பொறிப்பதில்லை. ஆனால், இக்கோவில் மதனிகைகளுக்குக் கீழே தாசஜெனரல் /ருவாரிய மல்லித்தம்மா, ஜாகனாச்சாரி, நாகோஜா போன்ற மாபெரும் சிற்பிகள் தங்கள் பெயர்களையும் பட்டங்களையும் பெருமையுடன் செதுக்கியுள்ளனர். இதுவும் அங்கு நின்று காண்போரின் கவனத்தை அதிகமாக ர்க்கக் கூடியதாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
புவி வெப்பமடைதலை தடுக்கும் கங்காருவின் ஜீரண மண்டலம்! எப்படி?
மதனிகை சிற்பங்கள் - Belur Madanika

கோவிலின் வெளிப்புறக் கூரையைத் தாங்கும் அடைப்புக்கற்களாக (Bracket figures) அமைக்கப்பட்டுள்ள இந்த 42 மதனிகைகளும், கல்லில் செதுக்கப்பட்டக் கவிதை என்றே உலகக் கலை விமர்சகர்களால் புகழப்படுகின்றன!

இதுபோன்ற கட்டுரைகளை வாசிப்பதால் நம் நாட்டின் கலை, கலாச்சாரம் எவ்வளவு மேன்மையானது என்பதை நேரடியாக புரிந்துகொள்ளலாம். சிலை வடிப்பதில் நம் நாட்டு சிற்பிகள் எவ்வளவு சிறப்புடையவர்கள் என்பதற்கு இந்த பேளூர் பொக்கிஷங்களே சாட்சி. இவற்றைக் கண்டு ரசிக்க இந்த கட்டுரை நல்ல ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com