திருச்சி மலைக் கோட்டையின் பெருமை தெரியுமா?

திருச்சி மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை

வ்வொரு ஊருக்கும் நிச்சயம் ஒரு அடையாளம் இருக்கும். அந்த ஊரின் பெயரை சொன்னவுடன் நாம் அந்த அடையாளத்தை சொல்வோம். சேலம் என்றால் மாம்பழம், திண்டுக்கல் என்றால் பூட்டு, செஞ்சி என்றால் கோட்டை… இப்படி அந்த ஊரின் அடையாளமாக இருப்பதன் வரலாறுகளை நாம் படித்தால் ஆச்சரியப்பட்டு போவோம். இப்பதிவில் திருச்சி மலைக்கோட்டை பற்றி பார்ப்போம்.

திருச்சி மலைக் கோட்டை, திருச்சிராப்பள்ளியின் அடையாளமாகவே விளங்குகிறது. ஒரு மலையைச் சுற்றி கோட்டை அமைந்துள்ளதால் மலைக் கோட்டை என்று அழைக்கப்படும் இது, காவிரி ஆற்றின் தென்கரையோரம் அழகிய தோற்றத்துடன் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. திருச்சியின் பல இடங்களில் இருந்து இந்தக் கோட்டையின் அழகை கண்டுகளிக்கலாம்.

இந்த மலையில் மொத்தம் மூன்று கோயில்கள் உள்ளன. மலையின் கீழே ஒரு கோயில், நடுவே ஒரு கோயில், உச்சியில் ஒரு கோயில் என மூன்று பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோயில், நடுவில் தாயுமானவர் கோயில், மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயில் என்பதே அந்த மூன்று கோயில்களாகும். பல்லவர்கள் காலத்தில்தான் இந்தக் கோயில்கள் கட்டப்பட்டன. இங்குள்ள கோட்டை நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இந்த மூன்றைத் தவிர பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடைவரை கோயிலும், பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட குடைவரை கோயிலும் உள்ளன. பெரிய மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்களே குடைவரைக் கோயில்கள் எனப்படும்.

இந்த மலை மொத்தம் 83 மீட்டர் உயரம் கொண்டது. மிகவும் பழைமை வாய்ந்தது. ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளின்படி இந்த மலை 3.8 மில்லியன் வருடங்கள் பழைமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வடக்கே இருக்கும் இமாலய மலையை விட அதிக பழைமையானது. குவார்ட்ஸ், பெல்ஸ்பார் போன்ற அரிய வகை தாதுக்கள் இந்த மலையில் கிடைக்கின்றன. உலகத்திலேயே சுற்றுலா இடமாகக் கருதப்படும் மலைகளில் இதுவே மிக உயரமானதாகவும், பெரிதாகவும் கருதப்படுகிறது.

இந்த மலையின் உச்சியில் இருக்கும் உச்சிப் பிள்ளையாரைச் சந்திக்க மொத்தம் 437 படிகளைக் கடக்க வேண்டும். மூச்சிறைக்க ஏறிய பின் உச்சிப் பிள்ளையார் கோயிலில் இருந்து திருச்சியின் அழகையும், காவிரி ஆற்றையும் கண்டு களிக்கலாம். மிகப் பிரபலமான இந்தப் பிள்ளையார் கோயிலில், விநாயகர் சதுர்த்தி அன்று மிகப்பெரிய கொழுக்கட்டை படைக்கப்படுவதுண்டு.

இதையும் படியுங்கள்:
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் சில பச்சை நிறப் பழங்கள்!
திருச்சி மலைக்கோட்டை

மேலும், இங்கு உள்ள மிகப்பெரிய தாயுமான சுவாமி கோயிலில் இருக்கும் கடவுளுக்கு மாத்ருபூதேஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கு இருக்கும் சிவலிங்கம், இந்த மலையினாலேயே ஆனது. இந்தக் கோயிலுக்கு கீழே அமைந்துள்ள இரண்டு பல்லவர் கால குடைவரைக் கோயில்களில் 6ம் மற்றும் 7ம் நூற்றாண்டு சிற்பங்கள் காணப்படுகின்றன. மலையடிவாரத்தில் ஒரு குளமும் அமைந்துள்ளது.

17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்ட அரண்மனை ஒன்றும் மலை அடிவாரத்தில் காணப்படுகிறது. இப்போது அந்த அரண்மனை ராணி மங்கம்மாள் மஹால் என்று அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனை சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது. சில காலம் மதுரையை ஆண்ட நாயக்கர்களால் அரசவையாகவும் பயன்படுத்தப்பட்டது. இப்போது இந்த அரண்மனை அரசு அருங்காட்சியமாக செயல்படுகிறது. மலை, கோட்டை, குளம், அரண்மனை, கோயில்கள் என இவை அனைத்தையும் ஒருங்கினைக்கும் வகையில் மேற்குப் பகுதியில் பெரிய கதவு ஒன்றும் உள்ளது.

இந்தக் கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளைச் சந்தித்திருக்கிறது. நாயக்கர்கள், பிஜப்பூர், கர்னாடக மற்றும் மராட்டிய படைகளின் போரை கண்டு களித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயருக்கும் உதவியாக இருந்துள்ளது. இதுபோன்று நாயக்கர்கள் காலத்திலும், நவாப்கள் காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சியிலும் பல போர்களில் இந்தக் கோட்டையும் பங்கெடுத்துள்ளது.

சந்தர்ப்பம் வாய்க்கும்போது அவசியம் ஒரு முறை திருச்சி மலைக்கோட்டை சென்று கண்டு களித்து ரசித்து வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com