நெல்லைக்கு புகழ் சேர்க்கும் இருட்டுக்கடை அல்வா உருவான வரலாறு தெரியுமா?

இருட்டுக்கடை அல்வா
இருட்டுக்கடை அல்வா
Published on

திருநெல்வேலி என்றாலே உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உடனே நினைவுக்கு வருவது இருட்டுக்கடை அல்வாதான். திருநெல்வேலிக்கு பெருமை சேர்ப்பது இருட்டுக்கடை அல்வா என்றால் மிகையில்லை. இந்த இருட்டுக்கடை அல்வா உருவான கதை எப்படி என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

தென்காசி - புளியங்குடி சாலையில் உள்ள சொக்கம்பட்டி என்ற ஊர் ஒரு காலத்தில் ஜமீனாக இருந்தது. அந்த ஜமீனில் உள்ள குதிரைகளுக்கு நல்ல தரமான உணவளிக்க வட இந்தியர்கள் சிலர் வந்தனர். அவர்களுடைய பராமரிப்பில் இந்த ஜமீனில் இருந்த குதிரைகள் நன்கு போஷாக்குடன் வளர்ந்தன. அவர்கள் குதிரைகளுக்கு அளித்த உணவுகளில் ஒன்றுதான் இந்த சொக்கம்பட்டி அல்வா.

காலப்போக்கில் அந்த ஜமீன் அழிந்தவுடன் அங்கு வேலை செய்தவர்களுக்கு வேலை இல்லாமல் போனது. அவர்கள் திருநெல்வேலியில் குடியேறினார்கள். அவர்களில் ஒருவரான ராஜஸ்தானை சேர்ந்த கிருஷ்ணசிங் என்பவரின் மகன் பிஜிலி சிங் என்பவர் தாமிரபரணி நீர் எடுத்து அல்வா தயாரித்தார். அந்த அல்வாவை சுவைத்த திருநெல்வேலி மக்கள் அதன் சுவையில் மயங்கி, அதற்கு அடிமையானார்கள். இந்த பிஜிலி சிங் என்பவர்தான் இருட்டுக்கடை அல்வா கடையை தொடங்கி வைத்தவர்.

1940ல் தொடங்கப்பட்டது இந்த அல்வா கடை. இப்பொழுது அவர்களுடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் அந்தக் கடை நடத்தப்படுகிறது. இருட்டுக்கடை அல்வாவிற்கு என்று பிரத்தியேக சுவை வரக் காரணம் அல்வா செய்ய பயன்படுத்தப்படும் கோதுமையை இயந்திரத்தில் அரைக்காமல் கைகளால்தான் அரைக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், தாமிரபரணி ஆற்றின் தண்ணீரும் இந்த அல்வாவிற்கென பிரத்தியேக சுவையை தருவதாகச் சொல்லப்படுகின்றது. கைகளால்தான் இந்த அல்வாவை கிண்டுகிறார்கள் என்பதால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு அல்வா மட்டுமே தயார் செய்கிறார்கள்.

இந்த இருட்டுக்கடை மிகவும் பழைமையான கடையாகும். இந்தக் கடையானது பெயருக்கு ஏற்றவாறு இருட்டான சூழ்நிலையில்தான் பல ஆண்டுகள் நடைபெற்று வந்தது. பல வருடங்களுக்கு முன்பு வரை நாற்பது வாட்ஸ் குண்டு பல்புதான் அந்தக் கடையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது சிறிது மாறுதல் செய்யப்பட்டு 200 வாட்ஸ் பல்ப் ஒளிர்கிறது. இந்த இருட்டுக்கடை அல்வாவிற்கு தனி சுவை வரக் காரணமே தாமிரபரணி தண்ணீரும் கோதுமையில் அரைத்த பாலும், நெய், சர்க்கரை இது தவிர வேறு எதுவுமே சேர்க்க மாட்டார்கள். இதெல்லாம்தான் அந்த அல்வாவின் சுவை மாறாமல் இருப்பதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

இருட்டுக்கடை அல்வா
இருட்டுக்கடை அல்வா

இந்தக் கடை பழைய பாரம்பரிய முறைப்படி இன்னும் அதே பழைய கட்டடத்தில்தான் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் இங்கு பயன்படுத்தப்படும் பணப்பெட்டியில் தொடங்கி அல்வா சுமந்து செல்லும் கொள்கலன்கள் வரை அனைத்தும் பழைய பாரம்பரியம் மிக்கவையே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருட்டுக்கடை சாயங்காலம் சுமார் 5.30 மணிக்கு மேல் திறக்கப்படும். இரவில் மட்டுமே அல்வா கிடைக்கும் என்பதால் அதற்கு இருட்டுக்கடை அல்வா என்று பெயர் ஏற்பட்டுவிட்டது.

இதையும் படியுங்கள்:
தோஷத் தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய் அவ்வையார் நோன்பு!
இருட்டுக்கடை அல்வா

ஒரு நாளைக்கு சில மணி நேரங்கள் மட்டுமே திறந்திருக்கும் இந்தக் கடை, திறந்த  ஒரு மணி நேரத்தில் அல்வா மொத்தமும் காலியாகிவிடும். இந்த இருட்டுக்கடை திறக்கும் முன்பே வரிசையில் மக்கள் காத்திருப்பதைக் காண முடியும். திருவிழா கூட்டம் போல எப்பொழுதும் அந்த இருட்டுக்கடை அல்வாவை வாங்குவதற்கு கூட்டம் நிரம்பி வழியும். தரமான மற்றும் சுவையான திருநெல்வேலி அல்வாவை வழங்கி வரும் இந்த இருட்டுக்கடை நிறுவனத்திற்கு ஜனாதிபதியின் விருதும் கிடைத்துள்ளது.

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை வாங்க வேண்டும் என்றால் நெல்லையப்பரை தரிசித்து விட்டு விரைவில் வந்து வரிசையில் நின்றால்தான் இருட்டுக்கடை அல்வா கிடைக்கும். நீங்களும் இருட்டுக்கடை அல்வா வாங்கி சுவைக்கத் தயாராகி விட்டீர்களா? கடை எங்கே இருக்கிறது தெரியுமா நெல்லையப்பர் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com