நெப்போலியனின் குதிரை 'மாரங்கோ'வின் எலும்புக்கூடு எங்குள்ளது தெரியுமா?

Napoleon
Napoleon
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

பிரான்ஸ் நாட்டின் படைத்தலைவராகவும், அரசியல் தலைவராகவும் இருந்தவர் நெப்போலியன் பொனபார்ட் (Napoléon Bonaparte). ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற இவர், பிரெஞ்சுப் புரட்சியின் தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளர், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னர், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளர், ரைன் கூட்டாட்சியின் காப்பாளர் என்று பல பதவிகளை வகித்துள்ளார். நெப்போலியனின் ஓவியங்கள் அனைத்திலும், அவர் பயன்படுத்திய சாம்பல் நிறத்திலான கம்பீரமான குதிரை ஒன்றும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குதிரையின் பெயர் 'மாரங்கோ'. 

அந்தக் குதிரைக்கு ஆறு வயதாக இருந்த போது, 1799 ஆம் ஆண்டில் எகிப்தில் இருந்து பிரான்சுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. சாம்பல் நிறத்திலிருந்த இந்த அரேபியக் குதிரை, உருவத்தில் சிறியதாக (57 அங்குலம், 145 செ.மீ) இருந்தாலும், நெப்போலியனுக்கு நம்பகமானதாகவும், துணிவானதாகவும் இருந்தது. நெப்போலியன், மாரங்கோ மீது அமர்ந்து, ஐரோப்பியக் கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்குப் பயணம் செய்திருக்கிறார். இந்தக் குதிரை பல முறை நெப்போலியனின் உயிரைக் காத்திருக்கிறது. நெப்போலியன் தன் பயன்பாட்டுக்கு 52 குதிரைகள் வரை வைத்திருந்த போதும், முக்கியமான போர்களில் மாரங்கோவையேப் பயன்படுத்தி இருக்கிறார். 

இந்தக் குதிரைக்கு மாரங்கோ என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?

கி.பி. 1800 ஆம் ஆண்டில் நெப்போலியன் இத்தாலி மீது படையெத்துச் சென்றார். அதில் ஆஸ்திரியாவுடனான போர் அலெக்ஸாண்ட்ரியா நகரத்தில் நடந்தது. ஆஸ்திரியப் படைகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டன. இந்த மாரங்கோ போரில் வென்றதன் மூலம், இத்தாலியில் நெப்போலியனின் பலம் அதிகரித்தது. இந்தப் போரில் அடைந்த வெற்றியின் நினைவாக, நெப்போலியன், தனக்குப் போரில் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த குதிரைக்கு 'மாரங்கோ' என்று பெயர் வைத்துச் சிறப்பித்தார்.

மாரங்கோ குதிரையின் வாழ்க்கையில், அது எட்டு முறை காயமடைந்திருக்கிறது. ஆஸ்திரியாவுடனான போர், ஜீனா ஆஸ்ட்ரி போர், வாக்ராம் போர், வாட்டர்லூ போர் போன்ற முக்கியமான பல போர்களில் நெப்போலியனைச் சுமந்து சென்றிருக்கிறது. இக்குதிரை அடிக்கடி வால்டோலிடிலிருந்து பர்ஸோஸ் வரை 80 மைல் தொலைவுக்கு நெப்போலியன் செல்ல அடிக்கடிப் பயன்படுத்தப்பட்டது. இத்தொலைவைப் பெரும்பாலும் ஐந்து மணி நேரங்களில் இக்குதிரை கடந்திருக்கிறது. 1812 ஆம் ஆண்டில் ரசியாவின் கடும் குளிரிலும் தளராமல், அவரைச் சுமந்து சென்றது. பின்னர், மாஸ்கோவில் இருந்து பின்வாங்கிச் செல்லவும் இக்குதிரையேப் பயன்படுத்தப்பட்டது.

இதையும் படியுங்கள்:
ஆங்கிலேயர்கள் நம்மிடமிருந்து எடுத்துச் சென்ற 4 விலை மதிப்பில்லாத பொருட்கள்!
Napoleon

நெப்போலியன் தோல்வியுற்ற வாட்டர்லூ போரிலும் மாரங்கோதான் பங்கேற்றது. இத்தோல்விக்குப் பிறகு, நெப்போலியனின் குதிரையான மாரங்கோவைப் பிடித்துச் சென்ற இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் பீட்டர் என்பவர், அக்குதிரையை இன்னொரு தளபதிக்கு விற்றார். அதன் பிறகு, அக்குதிரை 1831 ஆம் ஆண்டு, அதனுடைய 38 ஆம் வயதில் இறந்து போனது.

Napoleon's horse Marengo
Napoleon's horse MarengoImg Credit: Wikipedia

மாரங்கோவின் எலும்புக்கூடு,  தற்போதும் லண்டன் தேசிய ராணுவ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com