உலகெங்கும் தற்போது சாலைகளில் கார்களின் பெருக்கம் அதிகரித்து வருவதால் இடப்பற்றக்குறையால் பல நாடுகள் தவித்து வருகின்றன. ஆகவே, மக்கள் சைக்கிளில் செல்ல பல நாடுகள் ஊக்குவிக்கின்றன. அதில் முன்னிலையில் நிற்கும் நாடு ஐரோப்பியாவின் வட மேற்கில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான நெதர்லாந்து.
உலகில் ஒரு நாட்டின் மக்கள் தொகையை விட அதிக சைக்கிள்கள் இருப்பது நெதர்லாந்து நாட்டில்தான். அந்தளவுக்கு அவர்கள் சைக்கிள் சவாரி பிரியர்கள். நெதர்லாந்தில் 30 சதவீதப் பயணங்கள் சைக்கிள் மூலமே நடைபெறுகின்றன. 15 வயதுக்கு மேற்பட்ட 8 டச்சு மக்களில் 7 பேர் சைக்கிள் வைத்திருக்கிறார்கள். வாரத்தில் சராசரியாக 76 நிமிடங்கள் அந்நாட்டு மக்கள் சைக்கிள் ஓட்டுகிறார்கள். அந்நாட்டு மக்கள் 70 சதவீத போக்குவரத்திற்கு பயன்படுத்துவது சைக்கிளைத்தான். இந்நாட்டில் அரசு அதிகாரிகள் கோட்டு சூட் அணிந்து சர்வசாதாரணமாக சைக்கிளில் செல்வதைக் காணலாம்.
நெதர்லாந்து நாட்டில் சாலைகளின் இருபுறமும் சைக்கிள் பயணம் செய்வதற்கு நேர்த்தியாக தளம் அமைத்து சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கிறது அந்நாட்டு அரசு. சைக்கிள்களுக்கு அங்கு தனிப்பாதை இருப்பதால் மக்கள் சைக்கிளில் செல்வதை பாதுகாப்பானதாகக் கருதுகிறார்கள். மேலும், சாலை சந்திப்புகளில் சைக்கிள் ஓட்டிகளுக்கு வழி விட்டு கார்கள் காத்திருந்து செல்வதையும் அங்கு காணலாம். ‘சைக்கிள்களுக்குத்தான் சாலைகள் சொந்தம், கார்கள் இங்கு விருந்தாளிகள்’ எனும் வாசகத்தையும் அங்குள்ள சாலைகளில் காணலாம்.
உலகிலேயே சைக்கிளில் செல்ல அதிக அலவன்ஸ் தரும் நாடு நெதர்லாந்துதான். இந்நாடு வீட்டிலிருந்து அலுவலகத்தில் வேலை பார்த்து திரும்ப, கி.மீ. ஒன்றுக்கு நம் நாட்டின் மதிப்பில் 15 ரூபாய் அலவன்சாக வழங்குகிறது. மக்கள் சைக்கிளில் செல்வதை அதிகரிக்கவே இப்படிச் செய்கிறது அந்நாட்டு அரசு. உலகிற்கே சைக்கிளின் முன்மாதிரியாக இருக்கும் நெதர்லாந்து நாட்டில் ஒரு காலத்தில் கடுமையான எண்ணெய் பஞ்சம் நிலவியது. அதோடு ஏராளமான வாகன விபத்துகள் வேறு. இவ்விரண்டும் அந்நாட்டை சைக்கிளை கையில் எடுக்கத் தூண்டியது என்கிறார்கள்.
சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வமுள்ள நெதர்லாந்து நாட்டினர். அப்படி சைக்கிள் ஓட்டும்போது அவர்கள் பாடிக்கொண்டே சைக்கிள் பெடலை மிதிப்பது வழக்கம். ஆனால், பொது இடங்களில் இப்படி பாடிக்கொண்டே செல்ல முடியாதல்லவா? அதற்காக நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே உள்ள ஹவுவ்டன் ரெகினே கேனல் எனுமிடத்தில் ஒரு சாலையை அமைந்துள்ளனர். இந்த சாலைக்கு, ‘பாடும் சாலை’ என்று பெயர். இந்த சாலையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சப்தமாக பாடிக்கொண்டே சைக்கிள் ஓட்டலாம்.
நெதர்லாந்து நாட்டின் அட்ரெக்ட் பல்கலைக்கழகம் உள்ள அட்ரெக்ட் நகரில் ஒரு நாளைக்கு குறைந்தது 10,000 க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் ஸ்கூல், அலுவலகம், மார்க்கெட் செல்ல என சாலையில் பயணப்படுகின்றன. இதனை கருத்தில்கொண்டு அட்ரெக்ட் நகரில் உலகிலேயே மிகப்பெரிய சைக்கிள் ஸ்டாண்ட் ஒன்றை நிறுவி உள்ளனர். 17,000 சதுர மீட்டர்கள் பரப்பளவில் மூன்று அடுக்கு மாடிகளில் இந்த சைக்கிள் ஸ்டாண்டை நிறுவி உள்ளனர். இங்கு ஒரே நேரத்தில் 6000 சைக்கிள்களை நிறுத்த முடியும்.
உலகிலேயே மிக அதிக அளவு உயரமான மனிதர்களைக் கொண்ட நாடு. சராசரி ஆணின் உயரம் 6 அடி. பெண்கள் 5 அடி 7 அங்குலம் உயரம் இருப்பார்கள். சரிவிகித உணவும் சத்தான ஆகாரங்களுமே இவர்களின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள். மேலும், சிறந்த மருத்துவ வசதிகளுக்கும் பெயர் பெற்ற நாடு.
உலகின் டாப் 10 மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்று நெதர்லாந்து. இவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் சைக்கிள் ஓட்டி மகிழ்வதுதான் என்கிறார்கள். சைக்கிள் ஓட்டுதல் உங்கள் ஆயுளை 6 வருடம் அதிகரிக்கிறது என்கிறார்கள் இந்நாட்டின் அட்ராசெட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
பெருமளவு சுற்றுலா பயணிகளைக் கவர்ந்துள்ள நாடுகளில் ஒன்று. இங்குள்ள புராதன கட்டடங்களுக்காகவும் அழகிய டுலிப் மலர்களுக்காகவும் இங்கு வருவதை சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர். இந்த இடங்களுக்கு சைக்கிளில் சென்று கண்டு களித்து மகிழ்கிறார்கள்.