மனித குல நாகரிகத்தின் மிகப்பழைய நகரமான மதுரையை ஆளும் பெண்ணரசி மீனாட்சியைப் போலவே மேலை நாடுகளின் நாகரீகத் தொட்டிலான கிரேக்க நாட்டில் ஏதெனா என்ற பெண் தெய்வம் திகழ்கிறாள். இவர்கள் இருவருக்கும் சில பொதுப் பண்புகள் உள்ளன... ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ...?
1. சம காலம்
கீழை நாடுகளின் ஏதென்ஸ் என்று அழைக்கப்படும் மதுரை நகரம் கிமு முதலாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பாண்டியர்களின் தலைநகரமாக இருந்தது. ஏதென்ஸ் என்ற காவல் நகரம் கிமு 479 முதல் 323 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்ததாகும். இரண்டு நகரங்களும் ஒரே காலகட்டத்தில் சிறப்பு மிக்க நகரங்களாக இருந்தன.
2. காவல் நகரம்
ஏதேன்ஸ் நகரம் கடல் மட்டத்திலிருந்து 150 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட மூன்று புறமும் காவல் மிகுந்த மதில்கள் சூழ்ந்த நகரமாகும். இதனை அக்ரோபோலிஸ் என்றனர். மதுரை மாநகரமும் மூன்று புறமும் மதில் சுவர்கள் இருந்த காவல் நகரம் ஆகும். இதனால் கல்வெட்டுகள் மதிரை என்ற பெயரால் இந்நகரை அழைத்தன.
3. காவல் தெய்வம்
மதுரையில் தாய் வழி ஆட்சி நடந்ததால் மீனாட்சியின் தாய் காஞ்சனமாலைக்கு இங்குக் கோவில் உண்டு. மீனாட்சியின் தந்தைக்குக் கோவில் கிடையாது. கிரேக்க ஏதெனாவும் தாய்வழி சமுதாயத்தின் பிரதிநிதி ஆவாள். ஏதெனா ஏதென்ஸ் நகரின் காவல் தெய்வம் ஆவாள். அவளுடைய பெயர் ஏதெனா பல்லாஸ் என்பதாகும். பல்லாஸ் என்ற அரக்கனோடு மோதி அவள் வெற்றி பெற்றதால் அவனது பெயரையும் தன் பெயரோடு இணைத்துக் கொண்டாள். ஏதெனாவும் மீனாட்சியும் போர்த்திறன் பெற்ற காவல் தெய்வங்கள்.
5. சங்கம்
ஏதென்ஸ் நகரம் கலை, இலக்கியம், தத்துவம் போன்ற துறைகள் வளர்ச்சிக்காக பல கலைக்கழகங்களைக் கொண்டிருந்தது. இங்குப் பல தத்துவ ஞானிகள் கூடி தத்துவ ஆராய்ச்சிகளிலும் விவாதங்களிலும் ஈடுபட்டனர். சாக்ரடீஸ், பிளேட்டோ, பெரிக்கில், அரிஸ்டாட்டில் போன்ற தத்துவஞானிகள் வாழ்ந்த ஊர் ஏதென்ஸ் ஆகும். மதுரையில் தாய்த்தமிழ் ஆராய்ச்சியும் நூல்களின் அரங்கேற்றமும் நடத்தும் சங்கங்கள் இருந்தன.
சங்கம் என்ற சொல் பௌத்தர்களின் அறிமுகம் என்றாலும் அவர்களின் வரவுக்கு முன்பே கூட்டு, கூடல் என்ற பெயரில் இங்கு அறிஞர்கள் கூடி தமிழ் வளர்த்தனர். மாங்குடி மருதனாரைத் தலைவனாகக் கொண்ட தமிழ் கூட்டமைப்பு மதுரையில் இருந்ததற்குப் புறநானூற்றுப் பாடல் சான்று பகர்கின்றது.
5. பண்பாட்டின் பிறப்பிடம்
மேலைநாட்டு கலாச்சாரத்தின் பிறப்பிடமாக (Birthplace of Western Civilization) ஏதென்ஸ் நகரம் திகழ்ந்தது. கீழை நாட்டுப் பண்பாட்டின் தோற்றுவாயாக மதுரை மாநகர் விளங்கியது.
6. குலக்குறி (Totem)
மதுரை மாநகரத்தின் குலக் குறியாக கடம்ப மரம் இருந்தது. ஏதேன்ஸ் நகரத்தின் குலக் குறியாக ஒலிவ மரம் இருந்தது. செடி, கொடி, விலங்கு, பறவை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று குலக்குறியாக கொள்ளப்படும். குறிப்பிட்ட ஒரு குலக்குறியில் இருந்து தன் குலம் தோன்றியதாக உலகெங்கும் மக்கள் நம்பினர். நாகர் கூட்டம், செங்கீரைக் கூட்டம், காடை கூட்டம் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் குல மரபினர் தங்களது குலக்குறியான செங்கீரை, காடை, போன்றவற்றைக் காயப்படுத்துவதோ அசிங்கப்படுத்துவதோ பறித்துத் தின்பதோ கொன்று தின்பதோ கிடையாது.
ஒலிவ மரத்திலிருந்து தாங்கள் தோன்றியதாக ஏதென்ஸ் மக்கள் கருதினர். அதைத் தெய்வமாக வணங்கினர். இன்றும் மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஒரு பட்டுப்போன கடம்ப மரம் உண்டு. அதனைத் தெய்வமாகக் கருதி மக்கள் தொட்டு வணங்குகின்றனர். இவ்விரு ஊர்களிலும் மரங்கள் குலக்குறிகளாக விளங்கின.
உலக மனித குல வரலாற்றில் பண்பாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் கடவுள், கல்வி, காவல் போன்ற அடிப்படைகளைக் கொண்டுள்ளது என்பதை மீனாட்சி மற்றும் ஏதெனா வழியாக அறியலாம்.