

சரித்திரக் குதிரைகள்:
புஸேபாலஸ். யார் இந்த புஸேபாலஸ்? இவன் ஒரு சரித்திர புகழ் பெற்ற அலெக்சாண்டர் வைத்திருந்த குதிரை. உடல் முழுவதும் கரு நிறத்திலும் நெற்றியில் ஒரு வெள்ளை நட்சத்திரத்தையும் கொண்ட அழகான ஆனால் அடங்காத ஆபத்தான குதிரைதான் இவன்.
முதலில் இந்த குதிரையை அலெக்சாண்டரின் தந்தை ஃபிலிப்புக்கு கொடுக்க நினைத்தார்கள். ஆனால் அவர் அதை மிகவும் அடங்கா அஸ்வம் என்று ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ஆனால் அலெக்சாண்டர் அதை எளிதில் அடக்கிவிட்டார். கிட்ட போனாலே எகிறி எகிறி குதித்த புஸேபாலஸை தன சாதுர்யத்தால் சாதுவாக்கிவிட்டார் அலெக்சாண்டர்.
புஸேபாலசின் டென்ஷனுக்கு காரணம் அது தன் நிழலை பார்த்து பயப்படுவதுதான் என்பதை ஊகித்து அதை சூரியனைப் பார்த்து, அதன் நிழலை அதுவே பார்க்காதபடி நிற்க வைத்தார். அது அமைதியடைந்ததும் அதன் மேல் எகிறி அமர்ந்தார். அந்த நிமிடம் முதல் அதற்கும் அலெக்ஸாண்டருக்கும் ஒரு உண்மையான நட்பு துவங்கியது. அலெக்சாண்டர் செய்த போர்களின் போதெல்லாம் அது அவரோடு நின்றது. தான் காயமுற்ற போதும் கூட அலெக்ஸான்ட்ரை வேறு குதிரையில் அமர அனுமதிக்காது.
இந்தக் குதிரை ஒரு போரின்போது இறந்துவிட்டது. மிகவும் துயரம் அடைந்த அலெக்சாண்டர் அதன் பெயரில் ஒரு நகரத்தையே உண்டாக்கினார். அதன் பெயர் புஸேபாலா. இந்த குதிரையை அலெக்சாண்டரின் தந்தை எவ்வளவு கொடுத்து வாங்கியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? இன்றைய மதிப்பில் 7.8 மில்லியன் அமெரிக்க டாலர்ஸ் . இப்போது நாம் ஒருவர் வைத்திருக்கும் காரை வைத்து அவரை மதிப்பிடுகிறோம். அன்று பணக்காரர்களை அவர்கள் வைத்திருக்கும் குதிரைகளை வைத்து மதிப்பிடுவார்கள்.
நெப்போலியனின் குதிரை மார்லேங்கோ. நெப்போலியன் வாட்டர்லூ வில் தோற்றபோது இந்த குதிரையை இங்கிலாந்துக்கு கொண்டு சென்றனர். அது அங்கு பல வருடங்கள் வாழ்ந்து இறந்துவிட்டது. அதன் எலும்பு கூடு இன்றும் லண்டனில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நம் இந்திய தேச வரலாற்றிலும் புகழ் பெற்ற குதிரைகள் இருந்தன. அவற்றின் பெயர்கள் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளன. மஹாரானா பிரதாபின் சேடக் என்ற குதிரையின் சாகசங்கள் பிரசித்தி பெற்றவை. உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும் பஜாஜ் நிறுவனம் தங்கள் தயாரித்த ஸ்கூட்டருக்கு வாய்த்த பெயர் சேட்டக். அந்த காலத்தில் சேட்டக்கில் ஒருவர் போனால் நின்று ஒரு கணம் பொறாமை பார்வை பார்த்துதான் போவார்கள்.
மராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜியின் குதிரை கிருஷ்ணா. ஒரு அதி விசுவாச குதிரை. அதை சிவாஜி குதிரையாக மட்டுமல்லாமல் தனது சகோதரனாக பார்த்தார். சிவாஜியை பிடிக்கவிடாமல் முகலாய படைகளுக்கு தண்ணி காட்டியது இந்த கிருஷ்ணா. சிவாஜி என்ன செய்ய நினைக்கிறாரோ அதை குறிப்பறிந்து நடக்கும் குதிரையாக இருந்தது கிருஷ்ணா. இந்த குதிரை காலமானபோது அதற்கு மனிதர்களுக்கு செய்வதுபோல சடங்குகளை செய்தார் சிவாஜி.
தேசிங்கு ராஜா வைத்திருந்த குதிரை நீலா. மிகவும் சாதுர்யம் மிக்கதாக இருந்தது. இந்த குதிரை நீலாவை நாட்டுப்புற பாடல்கள் மூலம் இன்றும் செஞ்சியிலும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் பாடப்படுகிறது. இப்போது நம் புராணங்களில் இடம்பெற்ற சில குதிரைகளை பற்றி பாப்போம். மகாபாரதத்தில் அர்ஜுனனின் ரதத்தை நான்கு குதிரைகள் இழுத்தன அவைகள்...
சைப்யம்: பச்சை கலந்த அல்லது சாம்பல் நிறம்
சுக்ரீவம்: பனிக்கட்டி போன்ற சாம்பல் நிறம் அல்லது பழுப்பு நிறம்
மேகபுஷ்பம்: புதிய புயல் மேகத்தின் நிறம் அல்லது வெள்ளை.
பலாலகன் / பலாகன்; சாம்பல் அல்லது கருப்பு
சூர்ய தேவனின் ரதத்தை இழுக்கும் ஏழு குதிரைகளின் பெயர் இதோ...
காயத்ரி, பிருஹதி, உஷ்னிஹ், ஜகதி, திரிஷ்டுப், அனுஷ்டுப், பங்க்டி.
ராமர் அஸ்வமேத யாகதிற்காக அனுப்பிய குதிரையின் பெயர் சியாமகர்ணன். இது ஒரு கருப்பு காதுகள் கொண்ட வெள்ளை குதிரை.
உலக வரலாற்றிலும் இந்திய பாரம்பரியத்திலும் பேரரசர்களின் வெற்றிகளுக்குப் பின்னால் இருந்த வீரக் குதிரைகளின் வியக்கத்தக்க தகவல்களை அறிந்துகொள்வதன் மூலம், நமது பண்டைய போர் வரலாற்றின் மீதான புரிதலை முழுமையாக வளர்த்துக்கொள்ளலாம்.