இந்திய நாட்டுப்புறக் கதைகள் மற்றும் புராணங்களில், மிகவும் சக்தி வாய்ந்த இச்சாதாரி நாகங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இச்சாதாரி நாகங்களில் பெண் நாகங்களை, இச்சாதாரி நாகினிகள் என்று சொல்கின்றனர். இந்த இச்சாதாரி நாகங்கள் சிவபெருமான் மீது அதிக பக்தி கொண்டவைகளாகப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை நீண்டகாலம் வாழ்பவைகளாகவும், நினைத்த நேரத்தில், நினைத்த உருவத்திற்கு மாறும் திறன் பெற்றிருந்ததாகவும் கருதப்படுகிறது.
ஒரு சாதாரண நாகம் 100 வருட தவத்திற்குப் பிறகு ஒரு இச்சாதாரி நாகமாக மாற்றம் பெறுகிறது. சிவபெருமானால் ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, இந்நாகங்கள், மனிதர்கள் உட்பட எந்தவொரு உயிரினத்தின் வடிவத்தையும் உடனுக்குடன் எடுக்க முடியும். மேலும் பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ முடியும். இச்சாதாரி நாகங்களுக்கு நாகமணி என்ற மாணிக்க கல் அதன் தவப்பலனால் கிடைக்கிறது என்றும், அதனை இச்சாதாரி நாகங்கள் கவனத்துடன் பாதுகாக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது. இந்தக் கல்லானது மனிதர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரும் செல்வத்திற்கு ஈடானது என்பதால், அதனைத் திருட மனிதர்கள் முயற்சி செய்வார்கள். அதனால் நாகங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே மோதல் உருவாகிறது. இவ்வாறு நாகங்களின் நாக மாணிக்கத்தைத் திருட முற்படும் பொழுது நாகங்கள் மனிதர்களைக் கொல்கின்றன. மனிதர்களும் நாகங்களைக் கொல்கின்றனர்.
ஒரு இச்சாதாரி நாகத்தினை மனிதர்கள் கொல்லும் போது, அதனைக் கொலை செய்தவர்களின் உருவங்களை நாகங்கள் தங்கள் கண்களில் சேமிக்கின்றன. இறந்த இச்சாதாரி நாகத்தின் உறவினரான மற்றொரு இச்சாதாரி நாகம் கொன்றவர்களை அதன் மூலம் அறிந்து கொண்டு, கொன்றவர்களைப் பழி வாங்குகிறது. இச்சாதாரி நாகங்கள் எந்த உயிரின் வடிவத்திற்கு மாற்றம் பெற்றாலும், மகுடி இசையை ஒலிக்கும் போது, அது எந்த உருவத்தில் இருந்தாலும் மீண்டும் நாகமாக மாறிவிடும் என்கிற நம்பிக்கையுமுண்டு! இச்சாதாரி நாகினிகள் மனிதனைக் காதல் செய்து, திருமணம் செய்து கொண்டால், அதனுடைய அனைத்துச் சக்திகளையும் இழந்து ஒரு சாதாரணப் பெண்ணாகவே வாழமுடியும்.
மேற்காணும் கற்பனையை மையப்படுத்தி, இச்சாதாரி நாகங்களை முதன்மையாகக் கொண்டு, குழந்தைகளுக்கான காமிக்ஸ் கதாப்பாத்திரங்கள் பல உருவாக்கப்பட்டிருக்கின்றன. நாகராஜ் என்ற காமிக்ஸ் கதாப்பாத்திரம் இதனை அப்படையாகக் கொண்டது. இதே போன்று, இந்தியில் புகழ்பெற்ற காமிக்ஸ் கதாப்பாத்திரமாக துளசி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் இச்சாதரி நாகங்களை முதன்மையாகக் கொண்ட கதைகளுடன் வெளியாகியிருக்கின்றன.