

இந்திய எம்பிராய்டரி என்பது இந்தியாவின் பன்முக கலாச்சாரம், பிராந்தியம் மற்றும் கைவினைத் திறனை பறைசாற்றும் மிகவும் பழமையான கலையாகும். ஒவ்வொரு மாநிலமும் தனக்கே உரிய தனித்துவமான தையல் முறைகளையும், டிசைன்களையும் கொண்டுள்ளது. இந்த எம்பிராய்டரி கலைகள் பெரும்பாலும் இயற்கை, நாட்டுப்புறக்கதைகள் மற்றும் இந்திய கலாச்சாரத்தை மையமாகக் கொண்டே அமைந்துள்ளன.
சிக்கன்காரி, புல்காரி, காந்தா, மிரர் ஒர்க், ஆரி, ஜர்தோசி போன்றவை மிகவும் புகழ்பெற்ற இந்திய எம்ராய்டரி பாணிகளாகும். மிகவும் பிரபலமான சில இந்திய எம்ராய்டரி நுட்பங்களை பற்றி இப்பதிவில் காணலாம்.
சிக்கன்காரி (Chikankari) எம்பிராய்டரி:
சிக்கன்காரி எம்பிராய்டரி என்பது உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பிரபலமான வெள்ளை வெள்ளை- எம்பிராய்டரி ஆகும். சிக்கன்காரி எம்பிராய்டரி பெரும்பாலும் புடவைகள், குர்தாக்கள் மற்றும் பிற ஆடைகளை அலங்கரிக்க பயன்படுத்தப்படுகிறது.
காந்தா (Kantha) எம்பிராய்டரி:
காந்தா எம்பிராய்டரி என்பது மேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் ஒடிசாவில் பிரபலமான ஒரு வகையான ரன்னிங் ஸ்டிச் எம்பிராய்டரி ஆகும். காந்தா எம்ராய்டரி பெரும்பாலும் போர்வைகள், தலையணை உறைகள் மற்றும் பிற வீட்டு அலங்காரப் பொருட்களை அலங்கரிக்க பயன்படுத்தப்படுகிறது.
ஆரி (Aari) எம்பிராய்டரி:
காஷ்மீர் மற்றும் உத்தர பிரதேசத்தில் பிரபலமான ஒரு வகை சங்கிலித் தையல் வேலைப்பாடாகும். கொக்கி போன்ற ஊசியைப் பயன்படுத்தி, இறுக்கமாக நீட்டப்பட்ட துணியில் செய்யப்படும் நுணுக்கமான வேலைப்பாடாகும்.
புல்காரி (Phulkari) எம்பிராய்டரி:
பஞ்சாபில் பிரபலமான ஒருவகை வடிவியல் எம்ராய்டரி இது. பஞ்சாபின் கலாச்சார அடையாளமான இதில் துணி முழுவதும் மலர் வடிவங்கள் மற்றும் வடிவியல் கோலங்கள் பிரகாசமான வண்ண நூல்களால் தைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் துப்பட்டாக்கள், சால்வைகள் மற்றும் பிற அணிகலன்களை அலங்கரிக்க பயன்படுத்தப்படுகிறது.
ஜர்தோசி (Zardozi) எம்பிராய்டரி:
உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத்தில் பிரபலமாக உள்ள ஒரு வகையான உலோக நூல் எம்ராய்டரி ஆகும். இது தங்கம் மற்றும் வெள்ளி நூல்களைப் பயன்படுத்தி செய்யப்படும் மிகவும் ஆடம்பரமான, அரச குடும்பத்தினர் பயன்படுத்திய நுட்பமாகும்.
மிரர் ஒர்க் (Mirror work):
17 ஆம் நூற்றாண்டில் ஈரானியப் பயணிகளால் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட கண்ணாடி வேலைபாடு இது. குஜராத் மற்றும் ராஜஸ்தானின் சிறப்பம்சமான இது சிறிய கண்ணாடிகளைத் துணியில் பதித்து செய்யப்படும் வேலைபாடு மிகுந்த கலையாகும்.
கசுதி (Kasuti):
கர்நாடகாவில் புகழ்பெற்ற, பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு எம்பிராய்டரி பாணியாகும். பாரம்பரியக் கலையான இதில் நூலைக் கொண்டு வடிவியல் கோலங்கள் உருவாக்கப்படுகின்றன. கோயில்கள், தேர்கள், பறவைகள் போன்ற வடிவங்கள் மிக நுணுக்கமாக தைக்கப்படுகின்றன. எளிய தையல்களைப் பயன்படுத்தி செய்யப்படும் பாரம்பரிய முறை இது.
பஞ்சாரா (Banjara):
நாடோடி சமூகத்தினரால் செய்யப்படும் கண்ணாடிகள், மணிகள் மற்றும் வண்ணமயமான தையல்கள் கொண்ட கலை இது.
கோட்டா (Gota Patti):
ராஜஸ்தானில் உருவான இந்த எம்பிராய்டரி நுட்பம் லக்னோவின் ஜரிகையைப் பயன்படுத்தி நுணுக்கமான வடிவங்களை துணிகளில் பூக்கள் மற்றும் இலை வடிவங்களை உருவாக்கும் கலையாகும். இது நேர்த்தியான மற்றும் கம்பீரமான தோற்றத்தைத் தருகிறது.
காஷிடா எம்பிராய்டரி:
காஷ்மீரி என்றும் அழைக்கப்படும் இந்த எம்பிராய்டரி, அது பிறந்த இடமான காஷ்மீரின் பெயரைத் தாங்கியுள்ளது. குளிர்காலத்திற்கு அடர்நிற கம்பளி ஆடைகளும், கோடைக்காலத்திற்கு வெளிர் மற்றும் பிரகாசமான நிறப் பருத்தி ஆடைகளும் தேர்ந்தெடுக்கப் பட்டு, அவற்றின் அடிப்படையில் அடிப்படை வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன. பூக்கள், பின்னிப் பிணைந்த கொடிகள், கிளைகளில் உள்ள இலைகள், மலரும் பூக்கள் எனத் தாவரங்கள் தொடர்பான அனைத்தும் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படும் மையக்கருத்தாக அமைகின்றன.