

பிரிட்டிஷ் இந்தியாவில் அனைவருக்கும் வாக்குரிமை கிடையாது. ஒரு பகுதியினர் வாக்களித்து, தேர்வானவர்களைக் கொண்டு மாநில சட்டமன்றங்கள் உருவாகின. அத்தகைய பிரதிநிதிகள் மூலமாகவே முதலில் அரசியல் சாசன சபை உருவாக்கப்பட்டது.
1934 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சபையை உருவாக்கும் யோசனையை முதன்முதலில் முன்மொழிந்தவர் எம்.என். ராய் ஆவார். இவர் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இது இறுதியில் 1935 ஆம் ஆண்டு தேசிய காங்கிரஸின் அதிகாரப்பூர்வ கோரிக்கையாக மாறியது. ஆனால், அதற்கான முதல் அரசியலமைப்பு நிர்ணய சபை கூட்டம் 1946 ம் ஆண்டு டிசம்பர் 9 ம் தேதி பாராளுமன்ற மைய அறையில் 200 உறுப்பினர்கள் கலந்து கொள்ள நடந்தது.
அப்போது அரசியல் சாசனத்தை எழுதுவதற்காக அம்பேத்கரை தலைவராக கொண்ட ஏழு பேர் குழுவும் தேர்வானது. அப்போதே அரசியல் சாசனத்தை முழுக்க முழுக்க இந்தியர்களே உருவாக்க வேண்டும். வேறு எந்த வெளிநாட்டினரின் ஆலோசனையும் பெறக் கூடாது என்று முடிவு செய்தனர்.
பாகிஸ்தான் பிரிந்த போது அரசியல் சாசன சபையும் பிரிந்தது. பிறகு கூடுதல் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சாசன உருவாக்கும் குழுவில் ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர், அல்லாடி கிருஷ்ண சாமி ஐயர் போன்ற சட்ட மேதைகளும் இருந்தனர். இந்த குழுவில் 284 பேர் இருந்தனர் அதில் 15 பேர் பெண்கள்.
இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பு 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியலமைப்பை உருவாக்கிய அரசியலமைப்பு சபையின் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வரைவுக் குழுவின் தலைவராக இருந்தார். அரசியல் சாசன சபை 76 அமர்வுகளாக, 2 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்களில் 166 நாட்கள் கூடியது. அரசியலமைப்புச் சபை வரைவு செயல்முறையை முடிக்க கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளானது. குறிப்பாக, டிசம்பர் 9, 1946 முதல் நவம்பர் 26, 1949 வரை.
1947 நவம்பர் 4ம் தேதி பொது சபையில் அரசியல் சாசன நகல் சமர்ப்பிக்கப்பட்டது. விவாதத்தில் 2000 திருத்தங்கள் வந்தன. நிறைவாக, 1949 நவம்பர் 26 ம் தேதி 284 பேர் கையெழுத்து போட்டு சாசனத்தை ஏற்றனர்.
அந்த அரசியல் சாசனத்தில் ஜவஹர்லால் நேரு முதலில் கையெழுத்திட்டார். டாக்டர் ராஜேந்திர பிரசாத் கையொப்பமிட கொஞ்சம் இடம் விட்டு கையொப்பம் இட்டார் நேரு. மொத்தம் 283 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அசல் அரசியலமைப்பு ஆவணத்தில் கையெழுத்திட்டனர். அது 1947ம் ஆண்டு நவம்பர் 26ல் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1950 ஜனவரி 26ல் அமலுக்கு வந்தது. இதனால், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
உலகிலேயே 'சமூக நீதி' என்ற வார்த்தை இடம் பிடித்த அரசியலமைப்பு சட்டம் இந்திய அரசியல் சட்டம் தான். உலகிலேயே நீண்ட எழுத்துப்பூர்வமான அரசியல் சட்டமும் இந்தியாவுடையது தான். இந்திய அரசியலமைப்பு சாசனம் உலகின் சிறந்தாக இருக்கிறது.
இந்திய அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமானதாக எழுதப்பட்ட ஒரு ஆவணமாகும். இதில் 22 பகுதிகள், 12 அட்டவணைகள் மற்றும் 448 பிரிவுகள், 98 திருத்தங்கள் உள்ளன. இந்திய அரசியலமைப்பின் ஆங்கிலப் பதிப்பில் மொத்தம் 117369 வார்த்தைகள் உள்ளன. இந்திய அரசியலமைப்பு அதன் சில அம்சங்களை பிரிட்டன், அயர்லாந்து, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், முன்னாள் சோவியத் ஒன்றியம், தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட 10 நாடுகளிலிருந்து வாங்கியுள்ளது.
அரசியலமைப்பு என்பது தட்டச்சு செய்யப்பட்டதல்ல, மாறாக பிரேம் பிஹாரி நரேன் ரெய்ஜாதா என்பவரால் கையால் எழுதப்பட்டது. மேலும், ஒவ்வொரு பக்கமும் சாந்திநிகேதன் கலைஞரால் அலங்கரிக்கப்பட்டது. அரசியலமைப்பின் அசல் கையால் எழுதப்பட்ட பிரதிகள் பாராளுமன்ற கட்டிட நூலகத்தில் ஹீலியம் நிரப்பப்பட்ட பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.