

இந்தியாவில் பல சிறப்பு பெற்ற தனித்துவமான வரலாற்றுக் கட்டடங்கள் உள்ளன. ராஜஸ்தானில் உள்ள பழங்கால கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் அவற்றின் தனித்துவத்தால் இன்றும் சிறப்புடன் தனித்து நிற்கின்றன. 221 ஆண்டுகளாக நீருக்கடியில் இருக்கும் இந்த இந்திய அரண்மனை ஜல் மஹால் (Jal Mahal) அல்லது நீர் அரண்மனை என்று அழைக்கப்படுகிறது. இது ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் மானசாகர் ஏரியின் மத்தியில் அமைந்துள்ளது. இதனுடைய கீழ் தளங்கள் எப்பொழுதும் நீருக்கடியில் இருக்கும். ஆரவல்லி மலைகளால் சூழப்பட்ட இந்த அரண்மனையிலிருந்து, நஹர்கர் கோட்டை மற்றும் கனக் பிருந்தாவன் தோட்டங்களின் அழகான காட்சிகளைக் காணலாம்.
ஜல் மஹால் ஒரு அசாதாரண ஐந்து மாடி அரண்மனை ஆகும். அதன் நான்கு தளங்கள் மன் சாகர் ஏரியில் மூழ்கியுள்ளன.
1799 ஆம் ஆண்டு மகாராஜா சவாய் ஜெய் சிங் அவர்களால் கட்டப்பட்ட இந்த அரண்மனை நகரத்தின் நீர் விநியோகத்தை மேம்படுத்துவதற்கான லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். அரண்மனையை கட்டுவதற்கு முன்பு ஜெய் சிங் மனசாகர் ஏரியை உருவாக்க கர்ப்பவதி (Garbhavati River) ஆற்றில் ஒரு அணையைக் கட்டினார்.
ஜல் மஹால் அதன் கட்டடக்கலை திறமைக்கும், அதன் கட்டுமானத்தின் நீடித்த தன்மைக்கும் பெயர் பெற்றது. வலுவான சுண்ணாம்புக் கல்லை பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த அரண்மனை நீர் கசிவை தடுக்கும் தடிமனான சுவர்களைக் கொண்டுள்ளது. இந்த நுணுக்கமான வடிவமைப்பு இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக நீரில் மூழ்கி இருந்தாலும் அரண்மனை அழகிய நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது.
18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனை ராஜபுத்திர மற்றும் முகலாய கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். மான் சாகர் ஏரியின் நடுவில் அமைந்து தண்ணீரில் மிதப்பது போன்ற தோற்றம் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்த அரண்மனை ஜெய்ப்பூரின் வசீகரிக்கும் அடையாளங்களில் ஒன்றாகும். இது ஜெய்ப்பூர் நகரத்திற்கும் அமீர் கோட்டைக்கும் இடையில் நகர மையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் ஜெய்ப்பூர் - அமர் சாலையில் அமைந்துள்ளது.
அமரின்(Amer) மகாராஜா இரண்டாம் ஜெய்சிங் 18ஆம் நூற்றாண்டில் முகலாய மற்றும் ராஜபுத்திர கட்டடக்கலைப் பாணிகளைக் கலந்து அரண்மனையை புதுப்பித்து விரிவுபடுத்தினார். சூரிய ஒளியில் இதன் சிவப்பு மணற்கல் சுவர்கள், மான் சாகர் ஏரியின் நீரில் மிதப்பது போல மின்னுகிறது. பிற அரண்மனைகளைப் போல் ஜல் மஹால் அரசர்களின் வசிப்பிடமாக கருதப்படவில்லை. இது ஒரு பொழுதுபோக்கிற்காக நேரத்தை செலவிடும் அரண்மனையாகத் தான் வடிவமைக்கப்பட்டது.
அரசு குடும்பத்தினர் தங்கள் ராணிகளுடன் தரமான நேரத்தை செலவிட ஒரு ஓய்விடமாக இதைப் பயன்படுத்தினர். மேலும் இது அரச கொண்டாட்டங்களுக்கான இடமாகவும் இருந்தது. ஓய்வெடுக்கவும், இயற்கையை ரசிக்கவும் ஏரியின் நடுவில் கட்டப்பட்ட இந்த ஜெல் மஹால், பறவைகளை பார்ப்பதற்கும், கடும் வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்காகவும் ஏற்றதாக இருந்தது. இந்த அரண்மனை பல நூற்றாண்டுகளாக நீருக்கு அடியில் மூழ்கி இருந்தும் சேதமடையாமல் உள்ளது.
அரண்மனை வளாகம் 100,000 க்கும் மேற்பட்ட மரங்களைக் கொண்ட ஒரு பரந்த நாற்றுப்பண்ணைக்கு தாயகமாகும். இந்த நாற்றுப்பண்ணை சுமார் 40 தோட்டக்காரர்களால் கவனமாக பராமரிக்கப்படுகிறது. இது ராஜஸ்தானின் மிகப்பெரிய மர நாற்றுப்பண்ணையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு வரலாற்று தளமாக மட்டுமல்லாமல் பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் பசுமையை போற்றும் இடமாகவும் உள்ளது.